ஆன்மிகம்
ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம்.

வரகுண பாண்டீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Published On 2019-04-18 04:17 GMT   |   Update On 2019-04-18 04:17 GMT
ராதாபுரம் வரகுண பாண்டீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் மிகவும் பழமை வாய்ந்த வரகுண பாண்டீஸ்வரர் சமேத நித்திய கல்யாணி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும், காலை மற்றும் மாலையில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதிஉலாவும் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட் டம் நடந்தது. வரகுண பாண்டீஸ்வரரும், நித்திய கல்யாணி அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.

தேரோட்டத்துக்கு முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் 9 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. வரகுண பாண்டீஸ்வரர் தேரை ஆண்களும், நித்திய கல்யாணி அம்பாள் தேரை பெண்களும் இழுத்துச் சென்றனர். நான்கு ரத வீதிகளிலும் தேர் சென்று, மதியம் 2 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

தேரோட்டத்தில் ராதாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 8 மணிக்கு தெப்பத் திருவிழா நடந்தது. சுவாமி-அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். இந்நிகழ்ச்சியிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News