ஆன்மிகம்

திருப்பாம்புரம் ஆலயத்தின் சிறப்பு

Published On 2019-03-30 08:02 GMT   |   Update On 2019-03-30 08:02 GMT
தமிழ்நாட்டில் ராகுவுக்கான பரிகாரத்தலமான திருநாகேஸ்வரமும், கேதுவுக்கான தலமான கீழப்பெரும்பள்ளமும் காவிரிப் பாசனக்கரையில் அமைந்திருக்கிறது என்றால், ராகு கேது இரண்டுக்கும் சேர்த்து விளங்கும் ஒரே பரிகாரத்தலமான திருப்பாம்புரமும் இங்கேதான் உள்ளது.
திருப்பாம்புரம் ஆலயத்தின் ராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. மூலவர் பாம்புரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார்.

அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராட்ச மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள்.

கோவிலில் உள்ள சட்ட நாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷ மானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும்.

திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. கிழக்கில் பைரவர் சூரியர் விஷ்ணு, பிரம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிசேடன், ராகு கேது, நாயன்மார் நால்வர், ஆகியோர் காட்சி தருகின்றனர்.பாம்புசேரர் கோவில் கருவறை அர்த்தமண்டபம், மகா மண்டம், முகமண்டபம் என அமைந்துள்ளது.

மகாமண்டபத்தில் உற்சவ திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. சோமஸ்கந்தர் நடராசர் வள்ளி தெய்வனையுடன் முருகர் போன்றோர் வீற்றிருக்கிறார்கள். இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.

இறைவன் சன்னதி கருவறையில் பாம்புரேசுவரர் லிங்க வடிவாய் எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேடன் (உற்சவர்) ஈசனை தொழுதவண்ணம் கருவறையில் எழுந்தருளியுள்ளார். இக்கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது.

சேடபுரீஸ்வரர் கோவில் கருவறை அதிட்டனத்தில் யாளிவரிசை காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தில் வடக்குக் கோஷ்டத்தில் புதிதாகத் துர்க்கை ஸ்தாபிக்கப்பட்டுள்ளாள். ராகுவும் கேதுவும் திருக்கோவிலின் ஈசானிய மூலையில் ஏகாசரி ரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளார்கள்.

தலதீர்த்தமான ஆதிசேஷதீர்த்தம் கோவிலின் எதிரில் உள்ளது. தீர்த்தத்தின் நடுவே, ஆதிசேஷன் சுதை வடிவம் வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். காவிரி ஆற்றின் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 50-வது தலம் இது. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.

இந்தக்கோவில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, கும்பகோணம் நாகநாதர் கோவில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற தலம். இங்கே ஆதிசேஷனுக்கு உத்சவர் விக்ரகம் உள்ளது சிறப்பு.

தமிழ்நாட்டில் ராகுவுக்கான பரிகாரத்தலமான திருநாகேஸ்வரமும், கேதுவுக்கான தலமான கீழப்பெரும்பள்ளமும் காவிரிப் பாசனக்கரையில் அமைந்திருக்கிறது என்றால், ராகு கேது இரண்டுக்கும் சேர்த்து விளங்கும் ஒரே பரிகாரத்தலமான திருப்பாம்புரமும் இங்கேதான் உள்ளது.

இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்திருப்பது போல் தோன்றும் சிற்பம். அனந்தன், பத்மன், வாசுகி, மகாபத்மன், தட்சகன், கார்க்கோடகன், குளிகன், சங்கன் ஆகிய 8 நாகங்களின் கூட்டணிதான் இந்த சர்ப்பக் கோலம். இது கல்யாண சர்ப்பம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News