ஆன்மிகம்
மாரியம்மன் கோவிலுக்கு பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து சென்ற பெண்களை படத்தில் காணலாம்.

பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா: பால்குட ஊர்வலம்-அன்ன அபிஷேகம்

Published On 2019-02-27 08:43 GMT   |   Update On 2019-02-27 08:43 GMT
பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் மற்றும் அன்ன அபிஷேகம் நடந்தது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான மாரியம்மன் கோவில் மாசித் திருவிழாவையொட்டி 2 ஆயிரத்து 7 பால்குட ஊர்வலம் நடந்தது. முன்னதாக காந்திரோட்டில் உள்ள பாண்டிய வேளாளர் சமூக திருமண மண்டபத்துக்கு, பழனி நகரின் 33 வார்டுகளை சேர்ந்த பெண்கள் மஞ்சள் புடவை அணிந்து பால்குடத்துடன் நேற்று காலை வந்தனர்.

பின்னர் அங்கு பால்குடத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம், மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு நடந்த உச்சிக்கால பூஜையில் மாரியம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

அதன்பிறகு மாலை 4 மணி அளவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மாரியம்மனுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. மாலை 5 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது, அன்ன அபிஷேகம் மற்றும் அலங்காரங்களை பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் கோவில் முறை பண்டாரங்கள் செய்தனர்.

விழாவையொட்டி 3 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சித்தனாதன் சன்ஸ் தனசேகர், பழனிவேல், கார்த்திக், பாண்டிய வேளாளர் சங்க பிரமுகர் பெருமாள், சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், கொங்குவேளாளர் பிரமுகர் மாரிமுத்து, வக்கீல் கல்யாணசுந்தரம் மற்றும் பழனி வ.உ.சி. மன்றம், பழனி தண்டாயுதபாணி சுவாமி மிராஸ் பண்டாரங்கள் சங்கம், கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News