ஆன்மிகம்

ஆனைமுகன் அருளும் ஆலயங்கள்

Published On 2019-01-10 09:45 IST   |   Update On 2019-01-10 09:45:00 IST
எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபாடு செய்த பின்னர் தொடங்குவது சிறப்பை தரும். இன்றுவித்தியாசமான வடிவில் காட்சி தரும் விநாயகர் ஆலயங்களை அறிந்து கொள்ளலாம்.
* மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் ஆடுதுறையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குடி கிராமம். இங்குள்ள ஐராவதேஸ்வரர் கோவிலில் விருச்சிகப் பிள்ளையார் அருள்புரிகிறார். தேளுக்கு இருப்பது போல் வரி வரியாக கோடுகள் கொண்டவர் என்பதால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. விருச்சிக ராசிக்காரர்கள் இங்கு வந்து ஈசனையும், பிள்ளையாரையும் வணங்கினால் இன்னல்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

* விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காளியம்மன் கோவில் அருகே உள்ளது, பழிக்கு அஞ்சிய விநாயகர் ஆலயம். இங்குள்ள விநாயகரை வழிபட்டால், அவர்கள் பழிக்கு அஞ்சும்படி செய்வார் என்பதால் இந்தப் பெயர். ஏதாவது தவறு செய்து விட்டவர்கள், தவறுக்கு வருந்துவதுடன் இங்கு வந்து இந்த பிள்ளையாரை வழிபட்டால் மேற்கொண்டு வீண் பழிகள் நேரிடாமல் காப்பார். மேலும் எந்த குற்றங்கள் செய்யாமலும், செய்த தவறால் ஏற்பட்ட குற்ற உணர்வை தவிர்த்தும் மன ஆறுதல் தருவார் என்று சொல்லப் படுகிறது.

* தஞ்சாவூருக்கு அருகில் உள்ள கூத்தூரில் சாஸ்தா விநாயகர் என்ற திருப்பெயருடன் விநாயகர் அருள்புரிகிறார். ஆதியில் இங்கு விநாயகர் கோவில் மட்டும் தான் இருந்ததாம். ஒரு முறை வணிகர்கள் சிலர் மலையாள தேசம் சென்று ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை கொள்முதல் செய்து கொண்டு, கூடவே பூரண-புஷ்கலை சமேத அய்யனார் சிலையையும் எடுத்து வந்தனர். அவர்கள் இந்த ஊரில் தங்கி மறுநாள் கிளம்பும் போது, அய்யனார் சிலையை மறந்து வைத்து விட்டுச் சென்று விட்டனர். அய்யனார், தான் தங்குவதற்கு இடம் அளிக்கும்படி விநாய கரிடம் வேண்டிக்கொள்ள, விநாயகரும் சற்று நகர்ந்து இடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் சாஸ்தா விநாயகர் என்று பெயர் பெற்றார்.
Tags:    

Similar News