ஆன்மிகம்

திருப்பதி பிரம்மோற்சவம்: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி வீதிஉலா

Published On 2018-09-20 03:18 GMT   |   Update On 2018-09-20 03:18 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரை சந்திர பிரபை வாகன வீதிஉலா ஆகியவை நடந்தது. வீதிஉலாவுக்கு முன்னால் கோலாட்டம், நாட்டுப்புற நடனம் நடந்தது.

சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசாமி, சூரிய நாராயணமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

விழாவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராயப்பாடி சாம்பசிவராவ், சுதா நாராயணமூர்த்தி, தேவஸ்தான கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார் ரெட்டி, பறக்கும் படை அதிகாரி ரவீந்திராரெட்டி, கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை தேரோட்டம், இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

Tags:    

Similar News