ஆன்மிகம்
பழனி மலைக்கோவிலில் தங்கரதத்தில் சின்னக்குமாரர் உலா வந்த காட்சி. (உள்படம்:சிறப்பு அலங்காரத்தில் சின்னக்குமாரர்)

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2017-01-09 13:25 IST   |   Update On 2017-01-09 13:25:00 IST
வைகுண்ட ஏகாதசியையொட்டி பழனி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் 4 மணி நேரம் காத்திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பழனி முருகன் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, மாத கார்த்திகை மற்றும் விடுமுறை தினமான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைக்காக அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் 3 மணியில் இருந்தே பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வரத்தொடங்கினர்.

இதனால் படிப்பாதை, யானைப்பாதையில் அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. அதன் பின்னர் காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் மலைக் கோவிலில் உள்ள தர்ம தரிசனம், கட்டண தரிசனம், காலபூஜை தரிசனம், கட்டளை தரிசனம், சிறப்பு வழி தரிசனம் ஆகிய வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.

ஒரே நாளில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்ததால் அனைத்து வழிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே திண்டுக்கல் சாலை மற்றும் தாராபுரம் சாலை வழியாக ஏராளமான பக்தர்கள் ஆடிப்பாடி பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் மலைக்கோவிலிலும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து மாலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் உட்பிரகாரம் வலம் வந்தார். இரவு 7மணிக்கு மேல் தங்கரத புறப்பாடு நடைபெற்றது.

Similar News