ஆன்மிகம்

ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று ராப்பத்து உற்சவம் 2-வது நாள்

Published On 2017-01-09 11:30 IST   |   Update On 2017-01-09 11:30:00 IST
இன்று (திங்கட்கிழமை) ராப்பத்து உற்சவம் 2-வது நாளையொட்டி மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் புறப்பாடாகிறார். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 29-ந்தேதி முதல் பகல் பத்து நிகழ்ச்சி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராப்பத்து முதல் நாள் தொடக்கமும், சொர்க்க வாசல் திறப்பும் நேற்று நடந்தது.

நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு பரமபதவாசல் எனும் சொர்க்க வாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபம் முன்பு மணல் வெளியில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மண்டபத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் அதிகாலை 1.15 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவில் ராப்பத்து 2-ம் நாள் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. மதியம் 12 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். மதியம் 1 மணிக்கு பரமபதவாசலை கடந்து ஆயிரங்கால் மண்டபம் சேருகிறார். அங்கு இரவு 9.30 மணி வரை பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ராப்பத்து நிகழ்ச்சியின் 7-ம் நாளில் 14-ந்தேதி திருக்கைத்தல உற்சவம் நடக்கிறது.

அன்றைய தினம் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு பரமபதவாசலை கடந்து செல்கிறார். ஆயிரங்கால் மண்டபத்தில் மாலை 5.45 மணிக்கு எழுந்தருளுகிறார். மாலை 6 மணி முதல் 6.15 மணி வரை திருக்கைத்தல உற்சவம் நடைபெறும். ராப்பத்து 8-ம் நாள் நிகழ்ச்சியான 15-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 5.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை வையாளி வகையறா கண்டருளுகிறார்.

அதன்பின் இரவு 7 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி இரவு 10.30 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு 11 மணி அளவில் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார். ராப்பத்து நிகழ்ச்சி வருகிற 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் முன் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தின் திருவாய் மொழி பாசுரங்களை அரையர்கள் அபிநயத்துடன் இசைக்கிறார்கள். மூலவரை முத்தங்கி சேவையில் பக்தர்கள் தரிசிக்கலாம். நம்மாழ்வார் மோட்சம் வருகிற 18-ந்தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி விழா வருகிற 19-ந்தேதி இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது.

Similar News