கோவில்கள்

புளியங்குடி முப்பெரும் தேவியர் பவானி அம்மன் திருக்கோவில்

Published On 2023-01-22 07:41 GMT   |   Update On 2023-01-22 07:41 GMT
  • கடையநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது இந்த கோவில்.
  • இந்த கோவிலில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தென்காசி மாவட்டத்தில் அருள்வாக்கிற்கு பெயர் பெற்ற கடையநல்லூர் தாலுகா புளியங்குடி நகரில் அரசு மருத்துவமனை அருகில் கோபுர நகரில் அமைந்துள்ளது முப்பெரும் தேவியர் பவானி அம்மன் ஆலயம்.

இக்கோவில் குருநாதர் சக்தியம்மா தலைமையில் வருடம்தோறும் சித்திரை மாதம் 2-வது செவ்வாய்க்கிழமை கால்நாட்டி சித்திரை பெருந்திருவிழா 9 நாட்கள் நடைபெறும். ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பு திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் அம்மாக்களிடம் குழந்தை வரம் வேண்டி வரும் கன்னியர்களுக்கும், நீண்ட நாள் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கும், குழந்தை பாக்கியம் பெற்றவர்களுக்கும் இக்கோவிலில் வளையல், குங்குமம் வளைகாப்பும், 21 வகையான சாதங்களும், பிரசாதமாக வழங்கப்படும். இந்த அருட்பிரசாதத்தை பெற்றவர்களுக்கு குழந்தைச்செல்வம் கட்டாயம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு ஐப்பசி மாதமும் முதல் வெள்ளிக்கிழமையன்று மகா பெரும்பூஜை என்னும் சிறப்பு திருவிழா நடைபெறுகிறது. ஆன்மிக வாழ்க்கையில் 30-ம் ஆண்டாக தொடர் புனித பயணம் மேற்கொள்ளும் குருநாதர் சக்தியம்மாவின் உடம்பிற்குள் ஸ்ரீ பெரிய பாளையத்து பவானி அம்மன் குடி கொண்ட நாளையே மகா பெரும் பூஜை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் அம்மாக்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். காலை 8 மணி முதல் குருநாதர் சக்தியம்மா சேலை அணிந்து முழு பெண் உருவத்தில் ஒரு கையில் தீச்சட்டியுடன் மகாசக்தி வாய்ந்த பவானி அம்மாவாக சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து பக்தர்களுக்கு தலையில் கை வைத்து சொல்லும் அருள் வாக்கு என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்நாளில் முப்பெரும் தேவியர் பவானி அம்மாவாக பெண் உருவத்தில் அருள்வாக்கு வழங்கும் குருநாதர் சக்தியம்மாவிடம் ஆண், பெண் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற சேலை எடுத்து கொடுக்கும்போது முப்பெரும் தேவியர் பவானி அம்மாவே ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

Tags:    

Similar News