கோவில்கள்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் திருக்கோவில்

Published On 2022-09-23 08:25 GMT   |   Update On 2022-09-23 08:25 GMT
  • இந்த கோவில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது.
  • இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிரமாண்டமாக நடக்கும்.

குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில். இந்த கோவிலானது குமரி மாவட்டத்தின் தென் மேற்கு பகுதியில் மார்த்தாண்டம் - தேங்காய்பட்டினம் வழியில் பைங்குளம் சந்திப்பு அருகே அமைந்துள்ளது.

கோவில்செம்பன் என்னும் பெரியவர் தனது மகளுக்கு குழந்தை வரம் வேண்டி இப்பகுதியில் பீடம் அமைத்து வழிபட்டார்.

நாளடைவில் செம்பன் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது. இந்த அதிசயத்தை செம்பன், மக்களிடையே பக்தி பரவசமாக சொல்ல தொடங்கியதை தொடர்ந்து ஊர் மக்கள் அப்பகுதிக்கு வந்து பத்திரகாளி அம்மனை வழிபட தொடங்கினர். பின்னர் பீடத்தை சுற்றி ஒரு சிறு கோவில் கட்டினர். காலரா நோயினால் பாதிக்கப்பட்ட தனது ஒரே குழந்தையை கண்டு கண் கலங்கிய தாய்ஒருவர் நம்பிக்கையுடன் இந்த ஆலயத்துக்கு வந்து கதறி அழுதார். இரவு அப்பெண்மணியின் கனவில் அம்மன் தோன்றி வலது கையால் குழந்தையை தடவி நோயில் இருந்து உன் குழந்தை குணமடைந்து விட்டான் என்று கூறி மறைந்தது. அம்மன் கனவில் கூறியபடி அந்த குழந்தைக்கு காலரா நோய் முற்றிலும் தீர்ந்தது.

அதன்பின்பு இக்கோவிலில் அம்மனின் அற்புதங்கள் ஏராளம் நடந்ததால் குமரி மாவட்டம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா பிரமாண்டமாக நடக்கும். இந்த திருவிழாவில் நடைபெறும் பால்குட ஊர்வலமும், அம்மன் தென்வீதி ஆறாட்டும், 10-ம் நாள் திருவிழா அன்று நள்ளிரவில் நடைபெறும் போட்டி வாண வேடிக்கையும் பிரசித்தி பெற்றது.

குழந்தையில்லா தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலில் வழிபடுகிறார்கள். பின்னர் நேர்ச்சையாக வாழைக் குலைகளை வழங்குவர். மேலும் பால்குட நேர்ச்சை, பொங்கலிடுதல் உள்ளிட்ட வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்பார்கள்.

Tags:    

Similar News