கோவில்கள்

கல்வி வரம் தரும் சரஸ்வதிக்கு தனி கோவில்

Published On 2022-10-03 06:27 GMT   |   Update On 2022-10-03 06:27 GMT
  • தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று உள்ள ஒரே கோவில், கூத்தனூர் கோவில் தான்.
  • பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி கோவிலில் விஜயதசமி நாளில் நடக்கிறது.

படைப்பு கடவுளான பிரம்மாவின் சக்தியாக வணங்கப்படுபவர் சரஸ்வதி. ரிக் வேதத்தில் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளார். வளமையை தருவதாகவும், படைப்புக்கு ஊக்கமாக இருப்பதாகவும், அனைத்தையும் தூய்மைப்படுத்துவதாகவும் நீரை குறிப்பிடுகிறார்கள்.

ஆறாக (நீராக) உருவகிக்கப்படும் சரஸ்வதி தேவி படைப்பின் சக்தியாவார். பேச்சுக்கலை, எழுத்துக்கலை என கலைகளுக்கெல்லாம் கடவுளாகவும் சரஸ்வதி தேவி வணங்கப்படுகிறார்.

அறிவு என்பது ஒளி. அறியாமை என்பது இருள். சரஸ்வதி தேவிக்கு பிடித்த வெண்மை நிறம், இருளை அகற்றும் வல்லமை உடையது. அவ்வாறே அறியாமை இருளை அறிவு, ஆற்றலால் அகற்றி சரஸ்வதி தேவியும் அருள்புரிகிறார். வெள்ளை ஆடை அணிந்து, வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கிறார் சரஸ்வதி தேவி. இவருக்கு என தனிக்கோவில்களை காண்பது அரிது.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள பூந்தோட்டம் என்ற கிராமத்துக்கு அருகே கூத்தனூரில் சரஸ்வதி தேவிக்கு என தனிக்கோவில் உள்ளது. முன்புறம் 3 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக தோற்றம் அளிக்கும் இக்கோவிலின் முன் மண்டபம் கலை வேலைப்பாடுகளுடன் காட்சி அளிக்கிறது.

மூலவராக சரஸ்வதி தேவி அருள்பாலிக்கிறார். பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை தரிசிக்க கண் கோடி வேண்டும். அறிவு அருள் மலரும் அவருடைய கோலத்தை தரிசிக்க தரணி முழுவதிலும் இருந்தும் மக்கள் கூத்தனூரில் திரள்கிறார்கள். இங்கு உள்ள 'ருத்ர கங்கை'எனும் அரசலாற்றில் சரஸ்வதி ஆறு சங்கமித்ததாக தல வரலாறு கூறுகிறது.

இந்த ஊரை 2-ம் ராஜராஜ சோழன் தனது அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கியதாகவும், அதனால் இந்த ஊர் கூத்தனூர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கூத்தனூர் சரஸ்வதி தேவியை மகாகவி பாரதியாரும் தரிசனம் செய்து உளளார். கோவில் பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணியும் அருள்பாலிக்கிறார்கள். சரஸ்வதி தேவிக்கு முன்னால் உள்ள அன்ன வாகனத்தில் நர்த்தன விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் ஆகும்.

பள்ளியில் சேர்க்கும் முன்பாக பெற்றோர் தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு அழைத்து வந்து நெல் மணியில் 'அ' எழுத பழகி கொடுக்கிறார்கள். இதற்காக பாலவித்யாரம்பம் நிகழ்ச்சி கோவிலில் விஜயதசமி நாளில் நடக்கிறது.

கல்வி வரம் தருபவராக சரஸ்வதி அம்மன் இங்கு அருள்பாலிப்பதால், பள்ளி மாணவர்கள் தேர்வு நாளில் அம்மனை தரிசிக்க தவறுவதே இல்லை. தமிழகத்தில் சரஸ்வதிக்கு என்று உள்ள ஒரே கோவில், கூத்தனூர் கோவில் தான். சரஸ்வதிக்கு வேறு எங்கும் தனியாக கோவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News