கோவில்கள்

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில்

Published On 2023-01-19 01:23 GMT   |   Update On 2023-01-19 01:23 GMT
  • மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.
  • கோவில் மந்திரமாக ஹரி ஓம் ராமானுஜாய உச்சரிக்கப்படுகிறது.

ஐந்துவீட்டு சுவாமி கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடன்குடியிலிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் அமைந்துள்ள செட்டியாபத்து என்ற ஊரில் குடிகொண்டுள்ளது ஐந்துவீட்டு சுவாமி திருக்கோவில்.

ஐந்து வீட்டு சுவாமி கோவில், தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெருந்திருவிழா 8 நாட்கள் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி இருந்து சாமி தரிசனம் செய்துவிட்டு. அன்னமுத்திரி பிரசாதம் வாங்கிச் செல்வது இக்கோவிலின் சிறப்பு ஆகும். ஐந்துவீட்டு சுவாமி கோயிலுக்கும் வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம்.

ஜாதி பேதம் இல்லாமல் அனைவரும் வழிபடும் இந்த கோயிலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில், கோவிலுக்கான செலவுகளை பஞ்சபாண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாக தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் செய்யப்படும் அன்னதானமானது மீனவர்கள், அங்காடியில் வியாபாரம் செய்பவர்கள், வெற்றிலை விற்கும் நாடார்கள், ஆடு மாடுகளை வளர்த்துவந்த கோணார்கள், நெசவாளர்கள் இப்படி ஜாதி மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட சன்மானத்தில் இந்த ஆலயமானது பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

பெரிய சுவாமி திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னை களுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியசுவாமி சன்னிதியின் எதிர் புறம் ஆஞ்சநேயர் சன்னிதி அமைக்கப்பட்டு ள்ளது. சிறப்பு மிக்க பிரார்த்தனை தலமான இந்த ஆலயத்தில் வினை மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்ட வர்கள், தீராத பணிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து தங்கள் குறைகள் நீங்கப்பெறுகின்றனர்.

இத்தலத்தில் விரதம் இருந்து தரிசனம் செய்பவர்களுக்கு தீராத வியாதிகள் தீரும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு மக்கள் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. வேண்டுவோருக்கு வேண்டுபவை எல்லாம் கிடைக்கும் அற்புதத் தலம் இதுவாகும். குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் வேண்டுவோர் இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் பெரியபிராட்டி அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்தினால் வேண்டியது நிறைவேறும். கால் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆத்தி சுவாமி கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செருப்பு மற்றும் கதாயுதம் காணிக்கை செலுத்துகின்றனர்.

புராண வரலாறு

அனைத்து ஜாதி மக்களும் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலுக்கு வந்து வணங்கினாலும், அவரவர் மனதுக்குள் ஜாதி வேறுபாடுகள் இருந்து கொண்டுதான் இருந்தது. ஜாதி ஏற்றத்தாழ்வு அதிகமாக பார்க்கும் அந்த காலகட்டத்தில் ஒரு துப்புரவு தொழிலாளி இறைவனுக்கு பிரசாதத்தை படைத்து வழிபட்டான். ஆனால் அந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, யாரும் அந்த பிரசாதத்தை பெற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணம், அவன் செய்யும் துப்புரவு தொழிலும் அவன் ஜாதியில் குறைந்த அந்தஸ்தை உடையவன் என்பதும் தான்.

அவன் அந்த கோவிலில் அழுது புலம்பி தவித்து சோர்ந்து கோவில் வாசலிலேயே உறங்கிவிட்டான். அந்த சமயத்தில் தொழிலாளியின் கனவில் வந்த பெரியசாமிகள், 'அந்த பிரசாதத்தை ஓரிடத்தில் புதைத்து வைத்துவிட்டு அடுத்த வருடம் வந்து அதை திறந்து பார்க்க சொல்' என கூறிவிட்டு மறைந்து விட்டனர். திடுக்கிட்டு விழித்த அந்தத் தொழிலாளி அந்த கோவிலுக்கு தெற்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் பிரசாதத்தை ஒரு வாழை இலை கொண்டு மூடி, அதை பானையோடு புதைத்து வைத்தான்.

மறுவருடம் அந்த கோவிலுக்கு வந்த துப்புரவு தொழிலாளி பெரியசாமியை வணங்கிவிட்டு, அவன் புதைத்து வைத்திருந்த அந்த பிரசாதத்தை தோண்டி எடுத்து பார்த்தான். அந்த பிரசாதமானது அப்பொழுதுதான் புதியதாக செய்ததைப் போன்று ஆவி பறக்க இருந்தது. இதை பார்த்த பக்தர்கள் அந்தத் தொழிலாளியின் பிரசாதத்தின் மகிமை கண்டு, அந்த பிரசாதம் தங்களுக்கும் வேண்டுமென்று அனைவரும் கேட்டு கேட்டு வாங்கிச் சென்றனர். அந்த துப்புரவு தொழிலாளிக்கு இறைவன் கொடுத்த ஆசிர்வாதம் தான் இது. அந்த நாளில் இருந்து யாரும் இந்த கோவிலில் ஜாதி மதத்தினை மனதளவில் கூட பார்ப்பதில்லை.

கோயில் அமைப்பு

சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒரே வளாகத்தில், 5 தனித்தனி சன்னநிதிகளில் சுவாமிகள் வீற்றிருப்பதால், இந்தக் கோவில் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் என்று பெயர் பெற்றது. 4 ஏக்கர்களைக் கொண்ட இந்த கோவிலானது நான்கு திசைகளிலும், நான்கு வாசல்களை கொண்டுள்ளது. இதில் வடக்கு வாசல் வழியாக உள்ளே செல்லும் போது முதலில் ஸ்ரீ பெரியசாமி சன்னதி அமைந்திருக்கிறது.

அடுத்ததாக ஸ்ரீ வைணவ பெருமாள் சன்னதியும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அனந்தம்மாள் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ ஆத்தி சுவாமி சன்னதியும், அதனையடுத்து ஸ்ரீ திருப்புளி ஆழ்வார் சன்னதியும், அடுத்ததாக ஸ்ரீ பெரியபிராட்டி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே கோவிலுக்குள் 6 தெய்வங்கள், ஐந்து சன்னதிக்குள் அமைந்திருப்பதால் இந்த கோவிலுக்கு ஐந்து வீட்டு சுவாமிகள் கோவில் என்று பெயர் வந்தது.

பலன்கள்

ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவில் மந்திரமாக ஹரி ஓம் ராமானுஜாய உச்சரிக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்று இந்த மந்திரத்தை உச்சரித்து அந்த இறைவனிடம் வேண்டினால், திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். நவக்கிரகங்களின் தோஷங்கள் நீங்கும். மனோதைரியம், நிம்மதி, எடுத்த காரியத்தில் வெற்றி, இவைகளை பெற்று வளமாக வாழலாம். இங்குள்ள ஐந்து வீட்டு சுவாமிகளை மனமுருக தரிசித்தால், நினைத்த காரியம் நிறைவேறும், அற்புதங்கள் நிகழும் என்பது இந்த கோவிலின் பக்தர்களின் அசராத நம்பிக்கை

திருவிழாக்கள்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 18–ந் தேதி தொடங்கி 6 நாட்கள் வரை சித்திரை திருவிழாவும், தை மாதம் 5–ந் தேதி தொடங்கி 3 நாட்கள் தைத் திருவிழாவும் இங்கு சிறப்பாக நடைபெறும். மேலும் அமாவாசை, பவுர்ணமி, திருக்கார்த்திகை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. சித்திரைத் திருவிழாவின் இறுதி நாள் அன்று ஆலயத்தில் வழங்கப்படும் அன்னமுத்திரி என்ற பிரசாதம் மிகவும் மகிமை பெற்றதாக கருதப்படுகிறது.

இந்த பிரசாதத்தை நமது வீட்டில் அரிசி வைத்திருக்கும் பானை அல்லது பாத்திரத்தில் போட்டு வைத்தால், ஒருபோதும் அன்னத்துக்கு குறைவிருக்காது என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை. இதுமட்டுமின்றி, மாதாந்திர வெள்ளியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் மதிய வேளையில் மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, அய்யாவின் பேரருளால் உணவருந்தி, மன நிம்மதியுடன் செல்வர். மேலும், அமாவாசை, பவுர்ணமி பூஜைகளும் சிறப்பானது.

அன்னதானம்

சாதி மத பேதமின்றி, இந்த கோவில் நடத்தப்படும் அன்னதானம்" என்ற சமபந்தி விருந்து ஆலயத் தின் "தனிச்சிறப்பு" . இங்கு நடைபெறும் அன்னதானத்தில் அனைவரும் கல்ந்துகொண்டு உணவருந்தி மகிழ்வர். ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கோவில் மூலஸ்தானம் வரை சென்று சுவாமியை தொட்டு தரிசனம் செய்யலாம். ஜாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் மூலஸ்தானம் வரை சென்று வணங்குவதால், பிரிவினையை தவிர்க்கும் மனித ஒற்றுமையின் சிறப்பிடமாக இந்த தலம் விளங்குகிறது.

திருமணிக்கட்டி சிறப்புகள்

சுவாமியை தரிசனம் செய்யும் பக்தர்கள் அனைவருக்கும், பூஜை முடிந்ததும், மூலஸ்தானத்தில், திருமணிக்கட்டி பொட்டு வைத்து, தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆலயத்தில் வழங்கப்படும், திருமணிக்கட்டி பிரசாதத்தை, கோவிலில் முடி காணிக்கை செலுத்தியவர்கள் கூட, தலையில் சந்தனத்திற்குப் பதிலாக திருமணிக்கட்டியை பூசிக் கொள்வது வழக்கம். தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இந்த திருமணியை தண்ணீரில் குழைத்து சாப்பிடுவார்கள்.

இதன் மூலம் நோய் குணமாவதாக பக்தர்கள் இன்றளவும் நம்பி வருகிறார்கள். புருவ மத்தியில் வெளிச்சத்தை கண்டதற்கு அடையாளமாகத்தான் இந்த வெண்பொட்டு இட்டுக்கொள்ளப் படுகிறது. இந்த பொட்டு வைத்திருப்பவர்களை கண்டாலே, அவர்கள் ஐந்துவீட்டு சுவாமி கோவிலின் பக்தர்கள் என்பது எளிதில் அடையாளம் காணமுடியும். திருமணி நெற்றியில் இட்டவர்க்கு மோட்ச பிராப்தி உண்டாகும் என்பது ஐதிகம்.

இவ்வாலயம் வந்து வழிபடும் பக்தர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணி என்று பெயர் சூட்டியிருப்பதில் இருந்தே திருமணிக்கட்டி பிரசாதத்தின் மகிமையை நாம் உணர முடியும். இந்தக் கோவிலில் வேப்பமரம், ஆத்தி மரம் போன்ற மூலிகை விருட்சங்கள் இருக்கின்றன. ஆத்தி மர இலையை அரைத்து நீரில் கலந்து குடிப்பது பக்தர்களிடையே தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கமாகும். இதனால், தீராத நோய்களும் தீர்ந்து வருகிறது.

கோவில் திருவிழாக்காலங்களில் பூசாரியானவர், அனைத்து சன்னிதிகளிலும் அஷ்டாட்சரம் என்னும் எட்டு எழுத்தை திருமணி கொண்டு இயந்திரம் போட்டு வைத்துவிட்டு வந்து விடுவார். திருவிழா முடியும் வரை அந்தந்த சன்னிதிகளில் ஜாதி பேதமின்றி நியமிக்கப்பட்டு இருப்பவர்கள் பூஜை செய்து கொள்வார்கள். ஆலய திருவிழாவின் போது ஐந்து வீட்டு சுவாமிகளுக்கு, ஆடு, கோழி, பன்றி போன்றவை பலியிடப்பட்டு படையல் போடப்படும்.

பூஜை கால அட்டவனை

ஐந்து வீட்டு சுவாமி கோவிலில் தினசரி 3 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜையும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜையின்போது, கோவிலில் சங்கநாதம் ஒலிக்கப்படுகிறது. இதுதவிர தினசரி அதிகாலை 4 மணிக்கு சங்கநாதமும், சேகண்டி ஓசையும் முழங்கப்படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதும் தங்களால் முடிந்த பணிவிடைகளை (ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை பலியிட்டு), படையல் போடுவார்கள்.

வழிபாட்டு நேரம்

தரிசன நேரம்: காலை 7-8.30 மணி வரை மதியம் 11-12 மணி வரை மாலை 5.30- 7 மணி வரை.

Tags:    

Similar News