ஆன்மிகம்
அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில்

கனவு போல தோன்றிய அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில்

Published On 2021-07-15 08:37 GMT   |   Update On 2021-07-15 08:37 GMT
இத்தலத்தில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சேலம் நகரின் அருகில் உடையாபட்டி என்ற இடத்தில், இயற்கை எழில் சூழ்ந்து முற்றிலும் மலைகளுடன் காட்சியளிக்கிறது அருள்மிகு கந்தாஸ்ரமம் திருக்கோயில். ஸ்ரீமத் சாந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் நெஞ்சத்தில் கனவு போல தோன்றிய, மலைகளும், அருவிகளும் நிறைந்த சிறிய குன்றே இன்று சேலம் அருகில் கந்தாஸ்ரமமாக மாறியுள்ளது.

முருகனும், தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. முருகன் சந்நிதியை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்களின் விக்கிரகங்கள் உள்ளன. 16 அடி உயர தத்ராத்ரேய பகவான் (குருவருள்) உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

4 வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகனை சுற்றிவந்தால் நவகிரக தோஷம் விலகும் என்று, ஜோதிட சாஸ்திரப்படி, முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவகிரகங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார். பிரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாணலிங்கமான புவனேஸ்வரர், புவனேஸ்வரி, முருகன் சன்னிதானத்தில் உள்ளது. வேத விநாயகர், ஆதி சங்கரர் உட்பட பல விக்கிரகங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே.

கார்த்திகை தீபம், வைகாசி, ஆடி 18 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. மேலும் குருவருள் கிடைக்கும். நோயற்ற வாழ்வு(தன்வந்திரி பகவான்), குறைவற்ற செல்வம்(ஸ்வர்ணாகர்ஷன பைரவர்), சங்கடங்கள் தீர (சங்கட ஹர கணபதி) பக்தர்கள் வழிபடலாம். இவை தவிர பஞ்சமுக அனுமானை வணங்கி பக்தி, பலம், தைரியம், பூமி செழிப்பு, கல்வி செல்வம் ஆகியவற்றை பெறலாம். வேண்டுதல்; நிறைவேறியவர்கள் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
Tags:    

Similar News