ஆன்மிகம்
திருவிசநல்லூரில் சிவயோகிநாதர் கோவில்

ரிஷப ராசியினருக்கு உரிய திருவிசநல்லூரில் சிவயோகிநாதர் கோவில்

Published On 2021-04-17 01:35 GMT   |   Update On 2021-04-17 01:35 GMT
பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.
திருவிசலூர் எனும் திருவிசநல்லூரில் சவுந்திரநாயகி சமேத சிவயோகிநாதர் கோவில் அமைந்துள்ளது. இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற திருத்தலமாகும். பெண் பாவம் போக்கும் திருத்தலமாகவும், ரிஷப ராசியினருக்கு உரிய திருத்தலமாகவும், பிரதோஷ வழிபாட்டிற்கு மிக உகந்த திருத்தலமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது.

ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர், சிறந்த சிவபக்தர். இவர் தினமும் காலையில் சிவயோகநாதரை வணங்குவது வழக்கம். ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினத்தன்று, தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடக்கிறது. சிரார்த்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், அங்கு வந்து பசிக்கு உணவு வேண்டி நின்றார். அவரை வாட்டமான முகத்தைக் கண்டு மனம் இரங்கிய வெங்கடேச தீட்சிதர், சிரார்த்தம் செய்ய வைக்கப்பட்டிருந்த உணவை, பசித்து வந்தவருக்கு வழங்கினார்.

இதைக் கண்ட வேதியர்கள் சிலர், இப்படிச் செய்தது சாஸ்திர விரோதம் என்றும், இதற்கு பரிகாரமாக காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லையெனில் அவரை ஊரை விட்டு விலக்கி வைப்பதும், சிரார்த்தமும் செய்ய மாட்டோம் என்றனர்.

வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள் அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே என்று வெங்கடேச தீட்சிதர் வருந்தினார். மனமுருகி ‘கங்காஷ்டகம்’ என்னும் துதி பாடினார்.

அவர் பாடி முடித்ததும் அவர் வீட்டுக் கிணற்றிலிருந்து கங்கை பொங்கியது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக் காடானது. இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரை வணங்கி, கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அந்தக் கிணற்றிலேயே நிலைத்தது. பின்னர் அந்தணர்கள் திதி கொடுத்தனர்.

அன்றைய தினம் மாலை வேளையில் திருவிசநல்லூர் ஈசன் கருவறையில், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில் ‘இன்று மதியம் ஸ்ரீதர வெங்கடேசன் வீட்டின் திதியில் உணவருந்தியதால் இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று எழுதியிருந்தது.

தாழ்த்தப்பட்டவராக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் வீட்டிற்கு வந்து உணவருந்திச் சென்றது சிவபெருமான் என்பதை உணர்ந்த அனைவரும், அவரைப் போற்றிப் பணிந்தனர்.

இந்த அற்புத நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று, ‘கங்கா பூஜை நீராடல்’ எனும் விழாவாக திருவிசநல்லூர் மகான் ஸ்ரீதர வெங்கடேச திருமடத்தில் நிகழ்கிறது. மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில்,‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்த கிணற்றிலுள்ள தீர்த்தம், எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே.

இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானமும் வழங்கப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு அங்கிருந்து தீர்த்தம் கொண்டுவந்து கிணற்றில் விடுவார்கள். பின்னர் கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். இது மிகப்பெரும் பாக்கியமாகும்.

ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் ‘சிவனும், விஷ்ணுவும் ஒன்றே’ என்று மக்களுக்கு போதித்தவர். தினமும் திருவிசநல்லூர் ஈசனை காலையில் வழிபட்டு விட்டு, அருகில் உள்ள திருவிடைமருதூருக்குச் சென்று மாலை வேளையில் மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர். அதன் பின்பே தினமும் இரவு உணவை உண்பார்.

திருவிசநல்லூரில் இருந்து திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் வீரசோழன் என்ற ஆறு குறுக்கிடும். ஆற்றைக் கடந்து சென்றுதான் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார். ஒரு நாள் வீரசோழன் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரால் ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர் மகாலிங்க சுவாமியை தரிசிக்காமல் திரும்பியதை நினைத்து கவலையடைந்தார். அந்த கவலையில் உணவருந்தாமலேயே படுக்கைக்குச் சென்றார்.

திடீரென வீட்டு வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘நள்ளிரவு நேரத்தில், இந்த அடை மழையில் யார் கதவைத் தட்டுவது?’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. ஆம்! திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.

“அய்யா! இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியை காண இரவு பூஜைக்கு உங்களால் வர முடியவில்லை என்பதை அறிந்து கொண்டேன். சுவாமியை தரிசிக்காமல் இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகவே தான் திருக்கோவில் பிரசாதத்துடன் வந்து விட்டேன்” என்றார் அர்ச்சகர்.

பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார். உறக்கத்தில் கடும் குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட மகான், கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்தி விட்டார்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்தில் இருந்து எழுந்த மகான், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணிவிட்டு, விடிந்ததும் விடியாததுமாக அந்த அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார். அங்கு மகாலிங்க சுவாமி சன்னிதியில் முதல் நாள் இரவு தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது தான் அவரும் கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது.

அர்ச்சகரிடம் சென்ற ஸ்ரீதர வெங்கடேசர் நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, “சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே!” என்று வருத்தப்பட்டார்.

அர்ச்ககர் திகைத்தவாறே, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வந்தேன். கடுமையான மழை காரணமாக, நான் நேற்று மாலையிலேயே திருக்கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே” என்றார்.

பேசியபடியே அவர் கோவில் கருவறை கதவை திறந்த போது, ஸ்ரீதர வெங்கடேசர், நேற்று இரவு அர்ச்சகருக்கு போர்த்தி விட்ட கம்பளி, ஈசனின் திருமேனியை தழுவிக்கொண்டிருந்தது.

அப்போதுதான் அர்ச்சகருக்குத் தெரிந்தது, ‘நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் ஸ்ரீதர வெங்கடேசர் வீட்டுக்குச் சென்று, பிரசாதம் உண்ணக்கொடுத்து அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே’ என்பது. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.

பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த மகான் ஸ்ரீதர வெங்கடேசர், திருவிடை மருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார்.

அமைவிடம் :

கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் திருவிடைமருதூர் திருத்தலம் அமைந்து உள்ளது. திருவிடைமருதூரில் இருந்து வடமேற்கில் 4 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் அமைந்து உள்ளது.
Tags:    

Similar News