ஆன்மிகம்
திருவாரூர் திருத்தலம்

திருவாரூர் திருத்தலமும்.. சில சிறப்புகளும்..

Published On 2020-06-26 02:20 GMT   |   Update On 2020-06-26 02:20 GMT
திருவாரூர் தியாகேஸ்வரர் திருக்கோவில், சப்த விடங்க திருத்தலங்களுள் ஒன்று. இங்கு எழுந்தருளியிருக்கும் தியாகராஜர், முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வைத்து வணங்கப்பட்டவர். இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம்...
திருவாரூர் தியாகேஸ்வரர் திருக்கோவில், சப்த விடங்க திருத்தலங்களுள் ஒன்று. ‘விடங்கம்’ என்பதற்கு உளியினால் செதுக்கப்படாதது என்று பொருள். பஞ்சபூதத் தலங்களில் நிலத்திற்கு உரிய திருத்தலமாக இது திகழ்கிறது. சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால், திருவாரூர் நகரமும், ஆலயமும் நிர்மாணிக்கப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி பார்க்கலாம்...

முதலாம் ஆதித்தச் சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இந்த ஆலயம், அதன் பின்னர் முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் மற்றும் நாயக்க மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மராட்டிய மன்னர்களால் பராமரிக்கப்பட்டிருக்கிறது.

இங்கு எழுந்தருளியிருக்கும் தியாகராஜர், முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வைத்து வணங்கப்பட்டவர். பின்னர் இந்த தியாகராஜ மூர்த்தம், திருமாலால் இந்திரனுக்கும், இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பட்டது.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தி ஆவார். எனவே நித்திய பூஜை, திருமஞ்சனம் ஆகியவை மூலவரின் அருகில் இருக்கும் மரகத லிங்கத்திற்கு தான் நடைபெறுகின்றன. பஞ்ச தாண்டவங்களில், அஜபா தாண்டவம் இங்கு நடைபெறுகிறது. வாயால் சொல்லாமல் சூட்சும மாக ஒலிப்பதால் இதற்கு ‘அஜபா’ என்று பெயர்.

தியாகேசர் சன்னிதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்களே இங்கே, தீப வடிவில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம். மூலவருக்கு முன்பாக ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரண்டு விளக்குகள் காணப்படுகின்றன. இந்த விளக்குகள் ஏகதச ருத்திரர்களை குறிக்கிற தாம்.

தியாகேசருக்கு சந்தனத்தின் மீது குங்குமப் பூவையும், பச்சை கற்பூரத்தையும் சேர்த்து இழைத்து கிடைக்கும் செந்நிற திரவியத்தை பூசுகிறார்கள்.

இந்த ஆலயத்தில் மாலை வேளையில் தேவர்களின் தலைவனான இந்திரன் வந்து வழிபடுவதாகவும், சாயரட்சை பூஜை வேளை யில் மற்ற தேவர்களும், ரிஷிகளும் கலந்து கொள்வதாகவும் ஐதீகம்.

முசுகுந்த சக்கரவர்த்தி, விடங்கரின் விக்கிரகத்தை தேவேந்திரனிடம் கேட்டார். அப்போது இந்திரன் வைத்த பரீட்சையில் அசல் விக்கிரகத்தை செங்கழுநீர்ப்பூவின் மூலமாக சரியாக முசுகுந்த சக்கரவர்த்தி கண்டுபிடித்தார். எனவே இத்தல தியாகேச பெருமானுக்கு செங்கழுநீர்ப்பூ சமர்ப்பிப்பது சிறப்புக்குரிய தாகும். இவருக்கு நைவேத்தியமாக நெய் தேன்குழல், பெரிய உளுந்துவடை ஆகியவை படைக்கப்படுகின்றன.

ஆலயத்தின் மூன்றாவது பிரகாரத்தின் வடமேற்கு திசையில், ஈசான்யத்தை நோக்கி கமலாம்பிகை சன்னிதி அமைந்துள்ளது. இந்த அம்பிகையானவள், கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய மூவரின் சங்கமம் ஆவாள். இந்த அம்பிகைக்கு தனிக் கொடி மரம் உள்ளது. இவர் சிவபெருமானைப் போல, தன்னுடைய சிரசில் கங்கையையும், பிறை சந்திரனையும் சூடி, யோக வடிவில் அமர்ந்து அருள்பாலிக் கிறாள்.

இந்தக் கோவிலின் ஆதிசக்தியான நீலோத்பலாம்பிகைக்கும் தனிச் சன்னிதி காணப்படுகிறது. நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னையின் அருகில், முருகப்பெரு மானை இடுப்பில் வைத்தபடி தோழி ஒருத்தியும் இருக்கிறாள். அன்னை தன்னுடைய கரங்களில் ஒன்றால், முருகப்பெருமானின் தலையை தடவிக் கொடுத்தபடி இருப்பது அபூர்வ தரிசனம் ஆகும்.

இங்கு சண்டேஸ்வரருக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஆதிசண்டேஸ்வரர் வெள்ளை உடையுடன் உற்சவராகவும், மற்றொருவர் எமசண்டேஸ்வரராகவும் அருள்பாலிக்கின்றனர். பிறக்க முக்தி தரும் தலமாக திருவாரூர் திகழ்வதால், இங்கு எமனுக்கு வேலை இல்லை. எனவே எம சண்டேஸ்வரர் அருள்வதாக நம்பிக்கை.
Tags:    

Similar News