ஆன்மிகம்
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

Published On 2020-06-15 02:07 GMT   |   Update On 2020-06-15 02:07 GMT
வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.
புராண வரலாறு

சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளார். முக்குடைக்குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் இவருக்கு அரணாகக் காட்டப்படுகிறது. எனவே, இவரை பார்சுவநாதர் என்று கூறுவர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர். சிற்பங்களில் பத்மாவதி இயக்கியம்மன் சற்று ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் தனது வலது காலை சற்று தூக்கி அமர்ந்துள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. தனது வலது கையை அபய முத்திரையுடன், தூக்கிய தனது இடது காலின் மேல் வைத்த நிலையில் காணப்படுகிறது.

இச்சிற்பம், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ள வள்ளிமலையில் காணப்பட்ட சமண பெண் தெய்வமாகிய பத்மாவதி இயக்கியம்மன் ஆகும். வள்ளிமலை ஒரு சமணத் தலமாக விளங்கிய ஒன்று. இங்கு குடவரைச் சிற்பங்களும் உள்ளன. இதன் காலம் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு என்பர். கழுகு மலையிலும் பத்மாவதி சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பத்மாவதி வழிபாடு பொ.ஆ.18-ம் நூற்றாண்டு வரை காணப்படுகின்றது.

மேலும் தற்போது இது இந்து தலமாக மாற்றப்பட்டு பல புனைவுகளை உள்ளடக்கியுள்ளது. அதன்படி இத்தலத்தில் வளர்ந்த வள்ளி, முருகனை கணவனாக அடைய விரும்பி, திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த வள்ளியின் வளர்ப்பு தந்தை நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.

கோயில் அமைப்பு

வள்ளிமலைக் கோயிலிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி குறவர் வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.

அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில்; குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. வள்ளி கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று என்றழைக்கிறார்கள்.

இந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. குளத்தை அடுத்து வரும் படிகட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும். படிகட்டுகளின் பாதையில் ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால் மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வள்ளிமலைக் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்த போது, 8 கால் மண்டபப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான நிலையில் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அவ்விடத்தில் மட்டும் எந்தவித மாற்றமும் செய்யாமல் அந்த கல்லை அப்படியே மூடிவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதும் அப்பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப் படவில்லை. படிகளைக் கடந்து கோயிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயில் நம்மை அதிசயிக்க வைக்கிறது.

நுழைவாயிலில் உள்ள ஒரு சந்நதியில் வள்ளி அம்மன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்திற்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்லும் போது சாதாரண உயரம் கொண்டவர்களும் குணிந்துதான் செல்ல வேண்டும். அவ்வளவு தாழ்வான நுழைவாயிலை அடுத்து முருகன் கர்ப்பகிரகம் காட்சி அளிக்கிறது.

மேலே பார்த்தால் பாறை எங்கே நமது தலையில் விழுந்து விடுமோ என்ற அச்சம் உருவாகிறது. பாறைகளைக் குடைந்து அதற்குள் முருகனை வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியிருக்கும் என்று பிரம்மிப்பாக உள்ளது. எப்படித்தான் இந்த கோயிலை உருவாக்கியிருப்பார்கள் என்று நாம் பிரம்மித்து நிற்கும்போது, கோயில் கருவறைக்குள் உள்ள ஒரு துளையைக் காண்பித்து, இது சித்தர்கள் சென்று வந்து கொண்டிருந்த இடம் என்றும், தற்போதும் இதற்குள் சித்தர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று கூறுகிறார் கோயில் பூசாரி.

மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாறையைப் பார்த்தால் யானையின் உருவம் தெரிகிறது. வள்ளியை தன் பால் கவர முருகனுக்கு உதவி செய்ய வந்த விநாயகர் பெருமான் தான் அந்த யானையின் உருவம் கொண்ட பாறை என்று நம்பும் பக்தர்கள் அதனை கணேச கிரி என்று பக்தியோடு வணங்குகிறார்கள். கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் சுவாமி சட்சிதானந்தர் சமாதி அடைந்த ஆசிரமும் அமைந்துள்ளது.

மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சுனைக்கு மிகவும் மகத்துவம் உள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோயில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோயிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று ஆசிரமம், சுனை, திருமால் கிரீஸ்வரர் கோயில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோயிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.

சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி ஆற்காடு செல்லும் பேருந்துகள் பல வள்ளிமலையில் நின்று செல்லும். எனவே இறைத்தன்மை வாய்ந்த இத்தலத்திற்கு சென்று வள்ளி மலையின் அற்புதத்தை கண்டு வாருங்கள். வள்ளி, தெய்வயானை சமேதராய் வீற்றிருக்கும் முருகனின் அருளைப் பெற்று வாருங்கள்.
Tags:    

Similar News