திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ளது திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
இத்தலம் எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த தலம் என்று சொல்லப் படுகிறது. ஒருவருக்கு சனி தோஷம் பிடித்தாலும், எமன் பிடிக்க வந்தாலும் அது வாழ்வில் கஷ்டமான காலம்தான். ஆனால் இவர்கள் பிறந்த இத்தலத்தில் குழந்தையாய், அனைவருக்கும் அருள்தரும் வல்லுநராய், பக்தர்கள் கேட்ட வரத்தைத் தருபவர்களாகவே விளங்குகிறார்கள். அதனால்தான் இந்த தலத்தில் கால் வைத்த உடனேயே நமக்கு அனைத்தும் கிடைக்கிறது.
தென் தமிழ்நாட்டின் தேவாரப் பதிகத் தலங்கள் மிகவும் பெருமையும், புகழும் கொண்டவை. இந்த தலங்களை ‘பாடல் பெற்ற தலங்கள்’ என போற்று கிறோம். அதுபோன்ற ஒரு பாடல் பெற்ற திருத்தலமே திருமீயச்சூர். இங்கு ஆதி சக்தியான லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில் மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார். இத்தலத்தின் இறைவன் மேகநாத சுவாமி. இவரை வணங்கி நிற்போருக்கு வறுமை நீங்கி செல்வம் மழையாகப் பொழியும்.
ஒருமுறை இந்த மேகநாத சுவாமியை, வருணனும், சூரியனும் வணங்கி நின்றனர். தங்களுக்கு சாப நிவர்த்தி தர வேண்டும் என்று வேண்டினர். அவர்களுக்கு மேகநாத சுவாமி சாப நிவர்த்தி கொடுத்தார். இதற்கிடையில் சூரியனுடைய பத்தினிகளான உஷாதேவியும், அவளுடைய நிழலான சாயா தேவியும் மேகநாதரிடம் ‘எங்களுக்கு புத்திர பாக்கியம் வேண்டும்’ என்று வழிபட்டனர்.
அதற்கு இறைவன் “நீங்கள் உங்கள் கணவரோடு இத்தலத்திலுள்ள சூரிய புஷ்கரணியில் நீராடி, அம்பாள் லலிதாவையும், என்னையும் பூஜை செய்து வாருங்கள். உங்களுக்கு புத்திர பாக்கிய பலன் கிடைக்கும்” என வரம் அளித்தார்.
அதன்படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் திருமீயச்சூர் வந்து சூரிய புஷ்கரணியில் நீராடி பூஜை செய்தனர். இதைஅடுத்து சூரியனுக்கும், உஷாதேவிக்கும் எமதர்மன் பிறந்தார். அதே போல் சூரியனுக்கும், சாயா தேவிக்கும் சனீஸ்வரர் பிறந்தார். சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய இடம், திருமீயச்சூர் தலத்திற்கு மேற்கே தற்போது இக்கோவில் உள்ள ஊரில்தான். இவர்கள் கூடிய காரணத்தினால் இவ்வூர் ‘கூடியலூர்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில் மருவி ‘கொடியலூர்’ ஆயிற்று என்கிறார்கள்.
ஹயக்ரீவர் கூறியபடி திருமீயச்சூர் வருகை தந்த அகத்தியர், லலிதாம்பிகையை தரிசித்தார். அங்கு அன்னையை மனதுருக வேண்டி லலிதா நவரத்தின மாலை பாடினார். இதனால் அவருக்கு அம்பாளின் பேரருள் கிடைத்தது. அதன்பின் அவர் சிவபூஜை செய்ய வேண்டும் என்று எண்ணினார். அதற்காக அவ்விடத்தில் இருந்து சற்று மேற்கே உள்ள கூடியலூர் என்ற கொடியலூருக்கு வந்தார். இத்தலத்தில் அவர் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்தார். இங்குள்ள லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் ‘அகத்தீஸ்வரர்’ என அழைக்கப்படுகிறார். தாயார் லலிதாம்பிகையை நினைத்து அவரையும் இங்கு அகத்தியர் பிரதிஷ்டை செய்தார். தேடிவந்து வணங்கும் பக்தர்களுக்கு அருள் தரும் அம்மைக்கு ‘ஆனந்தவல்லி’ என பெயரிட்டார்.
தொடர்ந்து இறைவனையும், இறைவியையும் நினைத்து தவம் இருந்தார். எமதர்மனும், சனீஸ்வரனும் பிறந்த இந்த திருத்தலத்திற்கு வந்து வழிபடுவோருக்கு, எம வதையும், சனி உபாதையும் நீங்க வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்தித்தார். அதன்படியே அருள்வதாக இறைவனும், அகத்தியருக்கு அருளாசி வழங்கினார்.
இக்கோவிலில் தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி. இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்கிறார்கள்.
ஆலயத்தின் சிறிய நுழைவு வாசலைக் கடந்து உள்ளே சென்றால் நந்திதேவர் அருள்கிறார். இடதுபுறத்தில் எமதர்மனும், வலது புறம் சனீஸ்வரனும் உள்ளனர். கோவிலை சுற்றி வந்தால் விநாயகர், பாலசுப்பிரமணியர், விஜயலட்சுமி, சண்டீகேஸ்வர், நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் அகத்தீஸ்வரர், லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். அருகில் தெற்கு நோக்கியபடி ஆனந்தவல்லி அன்னை, ஆனந்த பரவசத்துடன் காட்சி தருகிறாள். மக்களின் துன்பத்தினை அகற்றி அனைவருக்கும் மகிழ்ச்சியை தருபவள் இந்த அன்னை. எனவே அன்னையின் கருணையை தேடி வரும் பக்தர்கள் ஏராளம்.
இந்தக் கோவிலில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெறுகிறது. வியாழக்கிழமை தோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் உள்பட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறு கின்றன. இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை.
ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. எனவே இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம் :
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பேரளம் என்ற ஊர். இங்கிருந்து மேற்கே 2 கிலோமீட்டரில் திருமீயச்சூர் திருத்தலமும், அதன் அருகிலேயே கொடியலூர் திருத்தலமும் அமைந்திருக்கிறது. பேரளத்தில் இருந்து மினி பஸ் வசதி, ஆட்டோ வசதி உண்டு.