ஆன்மிகம்

ராமகிரி வாலீஸ்வரர் கோவில் - ஆந்திரா

Published On 2019-05-17 02:22 GMT   |   Update On 2019-05-17 02:22 GMT
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலா புரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான, தத்புருஷம் என்ற முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் காசியில் சிவகணங்களுக்கு தலைவனாக விளங்குகிறார். ஆணவம் கொண்ட பிரம்மனின் தலையை கொய்தவர் இவர்தான். சனி பகவானை, சனீஸ்வரனாக்கி நவக் கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவரும் இவரே.

இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பைரவரை, காலபைரவர், மார்த்தாண்ட பைரவர், வடுக பைரவர், ஷேத்திரபாலகர், சத்ருசம்ஹார பைரவர், சொர்ண பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம். இவர் எல்லா சிவாலயங்களிலும், ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில், நாய் வாகனத்துடன் காட்சிதருவார். இது தவிர பைரவருக்கு தனி கோவில்களும் பல இடங்களில் உள்ளன.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலா புரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ள ராமகிரியில் வாலீஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இங்கு வாலீஸ்வரர் சன்னிதியை விட, காலபைரவரின் சன்னிதியே பெரிதாக உள்ளது. நின்ற கோலத்தில் காலபைரவர் காட்சிதருகிறார். அவருக்கு எதிரே அவருடைய வாகனமான நாயின் உருவம் பெரிய அளவில் காணப்படுகிறது.

தலவரலாறு

இந்த ஆலயத்தின் தல வரலாறு ராமாயண காலத்தோடு தொடர்புடையது. இலங்கை வேந்தனான ராவணனை வதம் செய்ததால், ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. தோஷத்தை போக்கிக் கொள்வதற்கு ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்தார், ராமபிரான். அதற்காக சிவலிங்கம் கொண்டுவர அனுமனை காசிக்கு அனுப்பினார். அனுமனும் காசிக்குச் சென்று அங்கிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு திரும்பினார்.

ஆனால் காசியின் காவல் தெய்வமாக இருக்கும் காலபைரவரின் அனுமதியை அனுமன் கேட்கவில்லை. இதனால் சிவலிங்கத்தை எடுத்து சென்ற அனுமனை, பைரவர் தடுத்து நிறுத்தினார். அதே நேரத்தில் தேவர்கள் பலரும் அங்கு வந்து, ராமரின் பூஜைக்காக சிவலிங்கம் தேவைப்படுவதைக் கூறி, அனுமனை செல்ல அனுமதிக்கும்படி வேண்டினர். தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலபைரவர், அரைமனதுடன் அனுமன் சிவலிங்கத்தை எடுத்துச்செல்ல அனுமதித்தார்.

இருந்தாலும் காலபைரவரின் மனம் சமாதானம் ஆகவில்லை.எப்படியாவது சிவலிங்கத்தை மீட்க வேண்டும் என்று நினைத்தார். சூரிய பகவான் மற்றும் வருணபகவான் துணையுடன் அனுமனுக்கு கடுமையான தாகம் ஏற்படும் படிச் செய்தார். சிவலிங்கத்தை கொண்டு செல்லும் வழியில் தாகத்தால் அனுமன் தவித்தார்.

அப்போது கங்கா தேவியிடம், “அனுமன் செல்லும் வழியில் ஒரு நீர்நிலையை ஏற்படுத்தவேண்டும்” என்று காலபைரவர் கூறினார். அதன்படியே கங்காதேவி அங்கே ஒரு குளத்தை ஏற்படுத்தினாள். குளத்தைக் கண்டதும் அனுமனுக்கு உற்சாகம் பெருக்கெடுத்தது. அந்த வேகத்திலேயே அவருடைய உற்சாகம் வடிந்தும் போனது. கையில் வைத்திருக்கும் சிவலிங்கத்தை யாராவது வாங்கிக் கொண்டால்தானே தண்ணீர் அருந்தமுடியும்? அனுமன் சுற்றும் முற்றும் பார்த்தார். அதற்காகவே காத்திருந்த காலபைரவர், ஒரு சிறுவனாக வடிவம் கொண்டு அனுமன் முன்பாகத் தோன்றினார்.

அந்தச் சிறுவனிடம் சிவலிங்கத்தைக் கொடுத்த அனுமன், “எக்காரணத்தைக் கொண்டும் சிவலிங்கத்தைக் கீழே வைக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு தண்ணீர் அருந்தச் சென்றார். அனுமன் அந்தப் பக்கம் போனதுதான் தாமதம், சிறுவனாக வந்த காலபைரவர் சிவலிங்கத்தை தரையில் வைத்துவிட்டு மறைந்துவிட்டார்.

திரும்பி வந்து பார்த்த அனுமன், தான் கொண்டு வந்த சிவலிங்கம் தரையில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார். அந்தச் சிவலிங்கத்தை கைகளால் எடுக்க முயன்றார். அவரால் எடுக்க முடியவில்லை. வாலினால் கட்டி இழுக்க முயன்றார். ஆனாலும் இயலவில்லை. தன்னிடம் இருந்து சிவலிங்கத்தைப் பெற்று கீழே வைத்தது காலபைரவர்தான் என்பதை உணர்ந்துகொண்ட அனுமன், காலபைரவரை வழிபட்டு அவருடைய அருளால் மற்றொரு சிவலிங்கத்தைப் பெற்றுக்கொண்டு ராமேஸ்வரம் சென்றதாகத் தலவரலாறு கூறுகிறது.

‘தனக்கு இப்படி ஒரு நிலை இந்தக் குளத்தால்தானே ஏற்பட்டது’ என்ற கோபத்தில், அனுமன் அங்கிருந்த சிறு மலையைப் பெயர்த்து குளத்தில் வீசினார். ராமபிரானின் வழிபட்டுக்காக அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் அந்த மலை மீது பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு ராமகிரி என்றும் பெயர் ஏற்பட்டது.

அனுமன் வாலினால் கட்டி இழுத்ததால், இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் ‘வாலீஸ்வரர்’ என்னும் திருப்பெயர் கொண்டார். இறைவனின் சன்னிதிக்கு நேராக ஆஞ்சநேயரும், அவருக்கு அடுத்தபடியாக நந்திதேவரும் காட்சி தருகிறார்கள். அம்பிகையின் திருநாமம் ‘மரகதாம்பிகை.’

இந்தத் தலத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டைக்குக் காரணமாக இருந்த காலபைரவர், ‘சந்தான பிராப்தி பைரவர்’ என்று அழைக்கப்படுகிறார். பைரவர் சன்னிதிக்கு அடுத்தபடியாக காளிமாதாவின் சன்னிதியை தரிசிக்கலாம். மேலும் விநாயகர், பிரம்மதேவர், விஷ்ணு, சண்முகர், அமர்ந்த கோலத்தில் வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி, சூரியபகவான் போன்ற பரிவார தெய்வங்களும் இத்தலத்தில் அருள்புரிகின்றனர்.

இந்தக் கோவிலில் காலபைரவர் சந்தான பிராப்தி பைரவராக அருள்கிறார். எனவே குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கே வந்து பைரவரை வேண்டிக்கொள்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும், குழந்தையைக் கொண்டு வந்து பைரவருக்கு கொடுத்து விட்டு, பிறகு பைரவரின் வாகனமான நாய் உருவத்தை விலையாகக் கொடுத்து திரும்பவும் குழந்தையைப் பெற்றுச் செல்கிறார்கள். ‘திருக்காரிக்கரை’ என்ற பெயரிலும் இந்த ஊர் அழைக்கப்பட்டு வந்ததாகத் தெரியவருகிறது. சுந்தரமூர்த்தி நாயனார், தம்முடைய தேவாரத்தில் இடையாற்றுத் தொகை என்ற பதிகத்தில் இந்தத் தலத்தை, ‘கடங்கள் ஊர் திருக்காரிக்கரை கயிலாயம்' என்று வைப்புத்தலமாக வைத்துப் பாடி இருக்கிறார். சிவபெருமானுக்கு முன் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷ வழிபாடு நடைபெறுவதில்லை.

நந்தியின் வாயில் இருந்து கொட்டும் தண்ணீர்.

கோவிலுக்கு வெளியில் ஒரு தீர்த்தக் குளம் இருக்கிறது. அந்த தீர்த்தக் குளத்தின் ஒரு கரையில் இருக்கும் நந்தி சிலையின் வாயில் இருந்து, தீர்த்தக் குளத்துக்குள் தண்ணீர் விழுந்துகொண்டே இருக்கிறது. இந்தத் தீர்த்தம் ‘நந்தி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் இருந்து வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டு இருக்குமாம். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. தண்ணீர் சுவையாக இருக்கும். நோய்களை குணப்படுத்தி ஆரோக்கியம் தரும் வல்லமை மிக்கதாக இத்தீர்த்தம் உள்ளது என்கிறார்கள்.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

அமைவிடம் :

சென்னை - திருப்பதி சாலையில் சென்னையில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில், நாகலாபுரத்துக்கும் பிச்சாட்டூருக்கும் இடையில் உள்ளது ராமகிரி. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள கோவிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி உள்ளது.
Tags:    

Similar News