ஆன்மிகம்

மரண அவஸ்தை நீக்கும் திருமாகாளம் திருத்தலம்

Published On 2016-11-26 02:36 GMT   |   Update On 2016-11-26 02:36 GMT
ஒருவரது உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், சிரமமில்லாமல் பிரியவும், ஆன்மா அமைதியடையவும் வழிபட வேண்டிய திருத்தலம் ஒன்றுள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நீண்ட காலம் வாழவேண்டுமென்ற ஆசை உண்டு. மரணம் என்பதை வேண்டுமென்று வரவேற்பவர் யாரும் உண்டா! நாம் எல்லோருமே வேண்டாம் என்று பதறியடித்து ஓடுபவர்கள் தான். மரண பயம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது உயிரை பறித்துக் கொண்டு, மரணத்தைத் தருபவரை எமன் என்று இந்து புராணங்கள் சொல்கின்றன. மரண பயத்தை நீக்கி மனிதர்களுக்கு வாழ்வு தருபவர், முக்கண் பரமனான சிவபெருமான் தான்.

எனவே எம பயம் நீங்கி ஆயுள் நீட்டிக்க வழி படவும், பூஜைகள் புரியவும், பரிகாரங்கள் செய்யவும் தமிழ்நாட்டில் நாகை மாவட்டம் திருக்கடவூர் வீரட்டேசுவரர், திருவாரூர் மாவட்டம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர், தஞ்சை மாவட்டம் திருவையாறு ஆட்கொண்டேசுவரர், குரு தலமான ஆலங்குடி அருகில் உள்ள நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் போன்ற தலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் மனிதர்கள் தொண்ணூறு, நூறு வயதுகளைத் தொடும் போது, அவர்களால் சாதாரணமாக வாழ முடிவதில்லை. உடன் இருப்பவர்களுக்கு சுமையாக இருக்கிறார்கள். அதிலும் சிலர் மரணப்படுக்கையில் கிடக்கும் போது, உயிர் இதோ.. அதோ.. என்று பல மாதங்களாக இழுத்துக் கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களின் உயிர் உடனடியாகப் பிரிந்து நற்கதி அடைய வேண்டும் என்று, உடனிருப்பவர்கள் வாய்விட்டுச் சொல்லுவதை நாம் பல இடங்களில் கேட்டிருக்கலாம்.

ஒருவரது உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், அவரது இன்னுயிர் சிரமமில்லாமல் பிரியவும், ஆன்மா அமைதியடையவும் வழிபட வேண்டிய திருத்தலம் ஒன்றுள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

திருமாகாளம் :

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு கிழக்கே காரைக்கால் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘திருமாகாளம்’ என்ற அழகிய கிராமம். மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய ஊர்களிலிருந்து இந்தக் கிராமத்திற்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. காரைக்காலுக்கு மிக அருகில் இருக்கிறது ‘கோவில் திருமாளம்’ என்று அழைக்கப்படும் ‘திருமாகாளம்’ திருத்தலம்.

காளம் என்னும் நாக கன்னி வழிபட்டதால் மாகாளம் என்று பெயர் பெற்றதாகவும், மாகாளி அம்மன் பூஜித்த ஆலயம் என்பதால் மாகாளம் என்று அழைக்கப்படுவதாகவும் வரலாறு சொல்கிறது. அதை நிரூபிக்கும் வகையிலான சிற்பங்கள் கோவிலில் காணப்படுகின்றன.

சப்தவிடங்கத் தலம்:

ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், காற்றோட்டமான திறந்த வெளியும், அதனூடே மண்டபங்களும் காணப்படுகின்றனர். இந்த மண்டபங்களைக் கடந்து சென்றால், கிழக்கு நோக்கிய சன்னிதியில் மாகாள நாதர், லிங்க மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மாகாளப் பெருமானுக்கு வலதுபுறம் தியாகேசப் பெருமான் சன்னிதி உள்ளது. இந்த ஆலயம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகும். ஆலயத்தில் பரிகார கணபதி, தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி, மகரிஷிகள், வில்லேந்திய முருகப்பெருமான், மகாலட்சுமி, சண்டேசர், துர்க்கை மற்றும் நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. தெற்கு பிரகாரத்தில் காளி அம்மன் கோவில் உள்ளது.

ஆலயத்தின் தெற்கு புறத்தில் அம்பாள் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்புரிகிறார். பட்சயாம்பிகை என்ற பெயரில் வீற்றிருக்கும், இந்த அம்பாளை வழிபடுபவர்களுக்கு திருமணம் தடை அகலும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு இரண்டு சிவப்பு அரளி மாலைகளைக் கொண்டு வந்து சாத்தி வழிபாடு செய்தால், அம்பிகை நல்ல வழி காட்டுவாள் என்பது கண்கூடான விஷயம்.

அமபரன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்கள் இருந்தனர். அவர்களை காளி வதம் செய்தாள். அந்த பாவம் நீங்குவதற்காக காளிதேவி, இத்தல இறைவனை வழிபட்டாள். இதனால் இறைவனுக்கு அம்பர் மகாளம் என்ற பெயரும் உண்டு. இந்த ஆலயத்தின் தல விருட்சம் கருங்காலி மரம். வேறு எந்தக் கோவிலிலும் இல்லாத தலவிருட்சமாக இது காணப்படுகிறது. தற்போது கருங்காலி மர கன்று ஒன்று புதியதாக வைக்கப்பட்டுள்ளது.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரது பாடல் பெற்ற தேவாரத் திருத்தலங் களில் இதுவும் ஒன்றாகும். இந்தத் திருக்கோவிலில் உள்ள மோட்ச லிங்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேண்டிக் கொண்டால், கடைசி காலங்களில் படுத்தப் படுக்கையில் கிடந்தபடி மரண அவஸ்தையில் வாழ்பவர்கள், நிம்மதியாக கண்மூடுவதுடன் மோட்சம் அடைவர் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆலயத்தின் அருகில் கூத்தனூர் சரஸ்வதி கோவில், திலதர்ப்பணபுரி மந்தாரனேஸ்வரர் ஆலயம், திருமீயச்சூர் லலிதாம்பிகை சமேத மேகநாதர் கோவில் போன்ற ஆலயங்களும் இருக்கின்றன.

மோட்சத்திற்காக என்று இல்லாவிட்டாலும், சிறப்பு மிகுந்த தியாகராசப் பெருமாளையும், பட்சயாம்பிகை சமேத மாகாள நாதரையும், காளியையும் தரிசித்து எல்லா நலனும் பெற இந்த ஆலயத்திற்கு ஒருமுறை சென்று வரலாமே.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு கிழக்கே காரைக்கால் சாலையில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘திருமாகாளம்’ என்ற அழகிய கிராமம். மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய ஊர்களிலிருந்து இந்தக் கிராமத்திற்குச் செல்ல பேருந்து வசதி உள்ளது. காரைக்காலுக்கு மிக அருகில் இருக்கிறது ‘கோவில் திருமாளம்’ என்று அழைக்கப்படும் ‘திருமாகாளம்’ திருத்தலம்.

Similar News