ஆன்மிகம்

திருமேனி அழகு தரும் திருக்கொட்டையூர் திருத்தலம்

Published On 2016-11-08 09:57 IST   |   Update On 2016-11-08 09:57:00 IST
இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் தொழில், வியாபாரம், தானம், புண்ணியம் ஆகியவை கோடி மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.
மனிதன் குழந்தையாய் இருக்கும் போதும், வாலிப வயதில் வாழும் போதும், முதுமை வந்த போதும் உடல் ரீதியாய் தோற்றப் பொலிவுடன் திகழ விரும்புகிறான். அதிலும் குறிப்பாக பெண்கள், தாங்கள் வாழும் நாட்கள் எல்லாம் வயது வித்தியாசம் இன்றி என்றும் இளமையுடன் விளங்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு.

கொட்டையூர் :

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக திகழும், சுவாமிமலைக்கு அருகில் உள்ளது திருக்கொட்டையூர் என்னும் திருத்தலம்.

‘மடவார் திரைபுரளும் காவிரிவாய் வலஞ்சுழியின்

மேவிய மைந்தன் கண்டாய்

கொடியாடு நெடுமாடக் கொட்டையூர்

கோடீச்சரத்து உறையும் கோமான் தானே!’

என்ற திருநாவுக்கரசரின் தேவாரப் பாடலின் படி, கொட்டையூர் அருகே காவிரி நதி பொங்கிவரும் பண்டைய கால காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.

கொட்டையூர் என்று பெயர் வரக் காரணம் என்ன? :

கொட்டை முத்து எனப்படும் ஆமணக்கு செடியே தலவிருட்சமாக இருப்பதால், இந்தத் தலத்திற்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த ஆமணக்கு கொட்டையில் இருந்துதான் அடர்த்தி மிகுந்த விளக்கெண்ணையைப் பிழிந்தெடுக்கிறார்கள். இந்த ஆலயத்தில் தல விருட்சமான ஆமணக்குச் செடிகள் உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன. இத்திருக்கோவிலில் பெரிய அகல் விளக்குகளில், ஆமணக்கு எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றுவதைப் பார்க்கலாம். இவ்வாறு தீபம் ஏற்றுவதால், பூர்வ ஜென்ம பாவங்கள், பித்ரு தோஷ சாபங்கள் தீரும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.

எல்லாம் கோடி :

கிழக்கு பார்த்து உயர்ந்து நிற்கும் ஐந்து நிலை ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்து கை தொழுகிறோம். இதன் தென்புறத்தில் தனிச் சன்னிதியில் விநாயகப் பெருமான் கருணையே வடிவாகக் காட்சி தருகிறார். அவர் பெயர் ‘கோடி விநாயகர்’ என்பதாகும். இந்த ஆலயத்தில் எல்லாருமே கோடி தான். சிவபெருமானோ, ‘கோடீஸ்வரர் என்னும் கயிலாசநாதர்’. சக்தி வடிவான அம்பிகையோ ‘கோடீஸ்வரி என்னும் பந்தாடுநாயகி’. சிவசக்தியின் செல்லப்பிள்ளையான முருகப்பெருமான், ‘கோடி முருகனாகவும், தலைமை பக்தரான சண்டேசவரர் ‘கோடி சண்டீசுவரர்’ ஆகவும் வீற்றிருக் கிறார்கள். இந்த ஆலயமே ‘கோடீச்சுரம்’ என்றுதான் அழைக்கப்படுகிறது.

சுவாமியும் அம்பாளும் :

பழமையான இந்த ஆலயத்தில் கிழக்கு பார்த்த சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் மூலவரான கோடீஸ்வரர். இவரை தரிசிக்கும் போது நம் கண்கள் வியப்பால் விரியாமல் இருக்காது. ஏனெனில் ஈசனின் லிங்கத் திருமேனி கொட்டை கொட்டையாக காட்சி தருகிறது. கிட்டத்தட்ட முள்ளுடன் கூடிய ஒரு பலாப்பழத்தின் தோற்றமே அங்கு நமது கண்ணுக்குத் தெரிகிறது. ஆமணக்குச் செடியின் கீழ் இந்த லிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. இந்த சிவலிங்கத்தை பத்திரயோகி முனிவர் என்பவர் தரிசித்து பேறுபெற்றதாக புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோடீஸ்வரர்தான் நம் பாவங்களைப் போக்குபவர் என்று நினைத்துவிடக்கூடாது. அம்பாளும் சக்திவாய்ந்தவளாக வீற்றிருக்கும் ஆலயம் இது. தெற்கு பார்த்த சன்னிதியில் இருக்கும் அம்பாளின் தோற்றம், வித்தியாசமான அமைப்பு கொண்டது. அம்பாளின் தோற்றம் பந்தை கால்கொண்டு உதைப்பது போன்று அமைந்திருக்கிறது.

இந்த தோற்றத்தை வேறு எங்கும் காண முடியாது. எனவேதான் அம்பாளுக்கு ‘பந்தாடும் நாயகி’ என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது. நாம் செய்த பாவங்களைப் பந்தாக உதைத்து விரட்டுவாள் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மேலும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்கள், இந்த அம்பிகையை வழிபட்டு செல்கிறார்கள். தோற்றப் பொலிவுக்கு உடல் பயிற்சியும், விளையாட்டும் தேவை என்பதை இந்த ஆலய அம்பிகை சொல்லாமல் சொல்கிறாளோ என்னவோ!

இங்குள்ள எந்திரங்களுடன் கூடிய நவக்கிரகங்கள் சிறப்பு வாய்ந்தவை. ஒன்பது கிரகங்களும் தங்கள் வாகனங்களில் இருக்கும் நிலை மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

‘கொட்டை நகர்ப் பெருமாளே!’ என்ற அருணகிரிநாதரின் பாடல் பெற்ற கோடி முருகன் கேட்டதை எல்லாம் கொடுப்பவர்.

திரும்பக் கிடைத்த திருமேனி :

வட தேசத்தை ஆட்சி செய்து வந்த சத்தியரதி என்ற மன்னனின் மகன் சுருசி. இவன் சாபம் காரணமாக பேய் வடிவம் பெற்றான். இவனது உருவைக் கண்டு அனைவரும் பயந்தனர். அவன் பேய் உருவை விட்டு மனித உருவிற்கு மாற வேண்டும் என்று சிவபெருமானைப் பிரார்த்தித்து வந்தான். சிவபெருமானின் கட்டளைப் படி கொட்டையூர் திருத்தலம் வந்து இங்கு ஏரண்ட முனிவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து, ஆமணக்கு எண்ணெய்யில் தீபம் ஏற்றி வைத்து கோடீஸ்வரப் பெருமானை மனமுருக வேண்டினான். இதையடுத்து அவனது பேய் உருவம் மறைந்து அழகிய உருவத்தைப் பெற்றான்.

தாடிவைத்து அமர்ந்த நிலையில் உள்ள ஏரண்ட முனிவரின் திருஉருவம், மூலவர் சன்னிதிக்கு செல்லும் முன்பாக வடக்கு பார்த்த நிலையில் இருக்கிறது. ஏரண்டம் என்றால் கொட்டைச் செடி என்பது பொருளாகும். அந்தச் செடியின் அடியில் இருந்து தவம் செய்ததால் அவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ‘ஆத்ரேய மகரிஷி’ என்பது இவரது இயற்பெயராகும்.

முனிவரால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் இன்று அமுதக் கிணறு என்று அழைக்கப்படுகிறது. தங்கள் பாவம் நீங்கவும், அழகு மெருகேறவும் இந்தத் தீர்த்தத்தை பக்தர்கள் தலையில் தெளித்துக் கொண்டு இறைவனை வேண்டுகின்றனர். இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால் தொழில், வியாபாரம், தானம், புண்ணியம் ஆகியவை கோடி மடங்காக பெருகும் என்பது ஐதீகம்.

சிறப்பு மிக்க இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில், கும்பகோணத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருக்கொட்டையூர் திருத்தலம். கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் பேருந்தில் சென்றால் வழியில் திருக்கொட்டையூர் ஆலயத்தில் இறங்கிக்கொள்ளலாம்.

Similar News