ஆன்மிகம்
குழந்தைகள் நலம் காக்கும் சிவகுருநாத சுவாமி திருக்கோவில்
சிவகுருநாத சுவாமி கோவில் அப்பரும், திருஞானசம்பந்தரும் தேவாரப் பாடல்கள் இசைத்த காவிரி தென்கரைக் கோவில்களில், இது 67-வது திருத்தலமாகப் பிரகாசிக்கிறது.
கோவில் நகரம் எனப்படும் கும்பகோணம் நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது சாக்கோட்டை என்ற ஊர். முற்காலத்தில் சாக்கியர் கோட்டை என்று அழைக்கப்பட்டு, காலச்சூழலால் சைவக்கோட்டையாக மாறிய இந்த ஊர், தற்போது சாக்கோட்டை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு கல் தொலைவு சென்றால் - சோழநாட்டுக்கே உரிய நீர் வளமும், நிலவளமும் நிறைந்த சிவபுரம் என்ற திருத்தலம் இருக்கிறது. இதற்கு குபேரபுரம், பூகைலாயம் என்றும் பெயர்கள் உள்ளன.
இந்த பகுதியில் சிவகுருநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அப்பரும், திருஞானசம்பந்தரும் தேவாரப் பாடல்கள் இசைத்த காவிரி தென்கரைக் கோவில்களில், இது 67-வது திருத்தலமாகப் பிரகாசிக்கிறது. திருஞானசம்பந்தர் இந்த ஆலயத்தை தரிசனம் செய்வதற்காக வந்தபோது, இந்த புண்ணிய பூமியின் கீழ் அடிக்கொன்றாக சிவலிங்கம் புதைந்து இருப்பதை அறிந்தார். ஆகவே இந்த திருத்தலத்தில் கால்பதிக்க அஞ்சி, தனது உடலை பூமியில் கிடத்தி, அங்கப்பிரதட்சணமாக திருத்தலத்தையும், கோவிலையும் வலம் வந்தார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே இந்த ஆலயத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் வேண்டுதல் பழக்கம் சிறப்புக்குரியதாக இருக் கிறது.
சந்திரபுஷ்கரணி என்ற அழகிய தீர்த்தக் குளத்தையும், ஐந்துநிலை ராஜகோபுரத்தையும், இரண்டு பிரகாரங்களையும் கொண்ட தூய்மையான சிவாலயம் இது. கிழக்கு நோக்கிய சன்னிதியில் பெரிய லிங்கத் திருமேனியுடன், மூலவர் சிவகுருநாத சுவாமி அருள் பாலிக்கிறார். தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பாள் சிங்காரவல்லி என்னும் ஆர்யாம்பாள் அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து கருணை பொழிகிறார்.
குபேரனின் சாபம் :
ஒரு முறை நந்தியின் சாபத்துக்கு ஆளான குபேரன், பூமியில் பிறப்பெடுத்தான். அங்கு தனபதி என்ற பெயரோடு வந்த குபேரன், இத்தலம் வந்து இங்குள்ள இறைவனை வழிபட்டு வந்தான். தன்னுடைய சாபம் நீங்கவும், தனக்கு மேலும் செல்வம் கிடைக்கவும் வழிபாடு செய்த அவன், தன் வழிபாடு பூர்த்தியாக, வடு இல்லாத ஆண் குழந்தை ஒன்றை பலியிட்டு சிவ வழிபாடு செய்ய முற்பட்டான். அப்போது அந்தக் குழந்தை, இத்தல அம்பிகையை மனமாற உருகி வேண்டியது.
அன்னையும் தாயுள்ளத்தோடு இறைவனிடம் குழந்தைக்காக வேண்டி, அந்தக் குழந்தையைக் காப்பாற்றியதாக தல வரலாறு எடுத்துரைக்கிறது. கயிலாயத்தில் நந்தியின் சாபம் பெற்ற குபேரன், இத்தல மகேசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான்.
பிரார்த்தனை :
இத்தலத்தில் உள்ள சிங்காரவல்லி அம்பாளுக்கு, பதினோறு வெள்ளிக்கிழமை விரதமிருந்து விளக்கேற்றி, அர்ச்சனை செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோயை ‘பாலரிஷ்டம்’ என்கிறார்கள். அப்படி மழலைகளுக்கு நோய் நொடிகள் ஏற்பட்டாலோ, காரணமில்லாமல் உடல் மெலிந்து வளர்ச்சி குறைபாடு இருந்தாலோ, இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருக வழிபட்டால் நோய்கள் சரியாகும் என்பது ஐதீகம்.
திருமாலின் சிவபூஜை :
முன்னொரு யுகத்தில் இரண்யாட்சன் என்ற அரக்கன் இருந்தான். அவன் பூமியை கடலுக்குள் கொண்டு சென்று ஒளித்து வைத்தான். இதனால் பூமியில் உள்ள உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. இதையடுத்து உலகைக் காக்க, மகாவிஷ்ணு வெண் பன்றி (வராகம்) உருவம் எடுத்து பூமியை மீட்டு வந்தார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படி வராக அவதாரம் எடுத்த பெருமாள், இத்தல சிவநாதரை பல நாட்கள் வழிபட்டு, தன்னுடைய காக்கும் தொழிலை கண்ணும் கருத்துமாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பர் பாடிய பாடல் வாயிலாக அறியலாம்.
‘பாரவன் காண் பாரதனில் பயிரானான் காண்
பயிர் வளர்க்கும் துளியவன் காண் துளியினின்ற
நீரவன் காண் நீர்சடைமேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோக்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும்
சீரவன்காண் சீருடைய தேவர்க்கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே’
திருமால் சிவனைத் தாமரையால் பூசிக்கும் காட்சி, மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதிக்கு அருகில் சிற்பமாக மிளிர்கிறது.
காலபைரவர் :
இந்த ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் நிற்கும் கால பைரவர் விசேஷமாகக் கருதப்படுகிறார். எல்லா ஆலயங்களிலும் மேற்கு திசை நோக்கி இருப்பார் காலபைரவர். அவரது நாய் வலது புறமாக கீழ்நோக்கிப் பார்க்கும் வண்ணம் நின்றிருக்கும். ஆனால் இங்கே தெற்கு திசை பார்த்திருக்கும் பைரவரின் நாய், இடதுபுறம் மேல் நோக்கியவாறு பைவரவரின் கையில் உள்ள கபாலத்தை நக்கியவாறு நிற்கிறது.
இந்தப் பைரவருக்கு 11 தேய்பிறை அஷ்டமி திதிகளில் தயிர்சாதம், வடைமாலை சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் தீயசக்திகள் விலகும். மேலும் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக இந்த தலத்தில் நவக்கிரக சன்னிதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. அருணகிரி நாதரின் பாடல்பெற்ற முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ள இந்த திருக்கோவில், தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
இந்த பகுதியில் சிவகுருநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. அப்பரும், திருஞானசம்பந்தரும் தேவாரப் பாடல்கள் இசைத்த காவிரி தென்கரைக் கோவில்களில், இது 67-வது திருத்தலமாகப் பிரகாசிக்கிறது. திருஞானசம்பந்தர் இந்த ஆலயத்தை தரிசனம் செய்வதற்காக வந்தபோது, இந்த புண்ணிய பூமியின் கீழ் அடிக்கொன்றாக சிவலிங்கம் புதைந்து இருப்பதை அறிந்தார். ஆகவே இந்த திருத்தலத்தில் கால்பதிக்க அஞ்சி, தனது உடலை பூமியில் கிடத்தி, அங்கப்பிரதட்சணமாக திருத்தலத்தையும், கோவிலையும் வலம் வந்தார் என்று தல வரலாறு கூறுகிறது. எனவே இந்த ஆலயத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் வேண்டுதல் பழக்கம் சிறப்புக்குரியதாக இருக் கிறது.
சந்திரபுஷ்கரணி என்ற அழகிய தீர்த்தக் குளத்தையும், ஐந்துநிலை ராஜகோபுரத்தையும், இரண்டு பிரகாரங்களையும் கொண்ட தூய்மையான சிவாலயம் இது. கிழக்கு நோக்கிய சன்னிதியில் பெரிய லிங்கத் திருமேனியுடன், மூலவர் சிவகுருநாத சுவாமி அருள் பாலிக்கிறார். தெற்கு நோக்கிய சன்னிதியில் அம்பாள் சிங்காரவல்லி என்னும் ஆர்யாம்பாள் அழகிய திருக்கோலத்தில் வீற்றிருந்து கருணை பொழிகிறார்.
குபேரனின் சாபம் :
ஒரு முறை நந்தியின் சாபத்துக்கு ஆளான குபேரன், பூமியில் பிறப்பெடுத்தான். அங்கு தனபதி என்ற பெயரோடு வந்த குபேரன், இத்தலம் வந்து இங்குள்ள இறைவனை வழிபட்டு வந்தான். தன்னுடைய சாபம் நீங்கவும், தனக்கு மேலும் செல்வம் கிடைக்கவும் வழிபாடு செய்த அவன், தன் வழிபாடு பூர்த்தியாக, வடு இல்லாத ஆண் குழந்தை ஒன்றை பலியிட்டு சிவ வழிபாடு செய்ய முற்பட்டான். அப்போது அந்தக் குழந்தை, இத்தல அம்பிகையை மனமாற உருகி வேண்டியது.
அன்னையும் தாயுள்ளத்தோடு இறைவனிடம் குழந்தைக்காக வேண்டி, அந்தக் குழந்தையைக் காப்பாற்றியதாக தல வரலாறு எடுத்துரைக்கிறது. கயிலாயத்தில் நந்தியின் சாபம் பெற்ற குபேரன், இத்தல மகேசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான்.
பிரார்த்தனை :
இத்தலத்தில் உள்ள சிங்காரவல்லி அம்பாளுக்கு, பதினோறு வெள்ளிக்கிழமை விரதமிருந்து விளக்கேற்றி, அர்ச்சனை செய்தால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோயை ‘பாலரிஷ்டம்’ என்கிறார்கள். அப்படி மழலைகளுக்கு நோய் நொடிகள் ஏற்பட்டாலோ, காரணமில்லாமல் உடல் மெலிந்து வளர்ச்சி குறைபாடு இருந்தாலோ, இந்த ஆலயத்திற்கு வந்து அம்மனை மனமுருக வழிபட்டால் நோய்கள் சரியாகும் என்பது ஐதீகம்.
திருமாலின் சிவபூஜை :
முன்னொரு யுகத்தில் இரண்யாட்சன் என்ற அரக்கன் இருந்தான். அவன் பூமியை கடலுக்குள் கொண்டு சென்று ஒளித்து வைத்தான். இதனால் பூமியில் உள்ள உயிர்கள் அனைத்தும் துன்பம் அடைந்தன. இதையடுத்து உலகைக் காக்க, மகாவிஷ்ணு வெண் பன்றி (வராகம்) உருவம் எடுத்து பூமியை மீட்டு வந்தார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. அப்படி வராக அவதாரம் எடுத்த பெருமாள், இத்தல சிவநாதரை பல நாட்கள் வழிபட்டு, தன்னுடைய காக்கும் தொழிலை கண்ணும் கருத்துமாக செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பர் பாடிய பாடல் வாயிலாக அறியலாம்.
‘பாரவன் காண் பாரதனில் பயிரானான் காண்
பயிர் வளர்க்கும் துளியவன் காண் துளியினின்ற
நீரவன் காண் நீர்சடைமேல் நிகழ்வித்தான் காண்
நிலவேந்தர் பரிசாக நினைவுற் றோக்கும்
பேரவன்காண் பிறையெயிற்று வெள்ளைப் பன்றி
பிரியாது பலநாளும் வழிபட்டேத்தும்
சீரவன்காண் சீருடைய தேவர்க்கெல்லாம்
சிவனவன் காண் சிவபுரத்தெம் செல்வன் தானே’
திருமால் சிவனைத் தாமரையால் பூசிக்கும் காட்சி, மூலவர் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதிக்கு அருகில் சிற்பமாக மிளிர்கிறது.
காலபைரவர் :
இந்த ஆலயத்தில் வெளிப்பிரகாரத்தில் தனிச்சன்னிதியில் நிற்கும் கால பைரவர் விசேஷமாகக் கருதப்படுகிறார். எல்லா ஆலயங்களிலும் மேற்கு திசை நோக்கி இருப்பார் காலபைரவர். அவரது நாய் வலது புறமாக கீழ்நோக்கிப் பார்க்கும் வண்ணம் நின்றிருக்கும். ஆனால் இங்கே தெற்கு திசை பார்த்திருக்கும் பைரவரின் நாய், இடதுபுறம் மேல் நோக்கியவாறு பைவரவரின் கையில் உள்ள கபாலத்தை நக்கியவாறு நிற்கிறது.
இந்தப் பைரவருக்கு 11 தேய்பிறை அஷ்டமி திதிகளில் தயிர்சாதம், வடைமாலை சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் தீயசக்திகள் விலகும். மேலும் நவக்கிரக தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக இந்த தலத்தில் நவக்கிரக சன்னிதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. அருணகிரி நாதரின் பாடல்பெற்ற முருகப்பெருமான், வள்ளி-தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ள இந்த திருக்கோவில், தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.