ஆன்மிகம்

ஈச்சனாரி விநாயகர் கோவில் - பொள்ளாச்சி

Published On 2016-06-27 11:34 IST   |   Update On 2016-06-27 11:34:00 IST
விக்னங்களை அதாவது வினைகளை நமக்கு ஏற்படும் கவலைகளை களைபவர் விநாயகர்.
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையில் உள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். விக்னங்களை அதாவது வினைகளை நமக்கு ஏற்படும் கவலைகளை களைபவர் விநாயகர்.

எந்த ஒரு நல்ல காரியம் தொடங்க, வீடு கட்ட, வியாபாரம் தொடங்க, திருமணம் நன்கு நடைபெற, தேர்வுகளில் வெற்றி பெற, புது மனையில் நல்ல வாழ்வு நிலைத்திட, இப்படி அனைத்து காரியங்களிலும், விநாயகரைத் தொழுது தொடங்கிட எல்லை இல்லா ஆனந்தம் நல்கிடுவார் என்பது உறுதி. இவர் வேத மந்திரங்களின் தலைவன் என போற்றப்படுவர்.

முழு முதற்கடவுள், பிரணவ மந்திரத்தின் உட்பொருளானவர். இந்த கோவில் இறைவன் எம்பெருமான் விநாயகர் 6 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்டவர். கோவை அருகிலுள்ள, மேலச்சிதம்பரம் என போற்றப் படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருத்தலத்திற்கு பிரதிஷ்டை செய்ய உருவாக்கி, மதுரையிலிருந்து மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர்.

வண்டியின் அச்சு முறிந்தது :

இந்த இடம் வந்தவுடன் வண்டியின் அச்சு முறிந்து சரிந்துவிட்டது. இந்த இடத்திலேயே விநாயகர் அமர்ந்து விட்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அகற்ற முடியவில்லை. பின்பு காஞ்சி சங்கராச்சார்யார் சுவாமிகளை அணுகிய பொழுது விநாயகரை இங்கேயே பிரதிஷ்டை செய்யுங்கள், என்று அருள்வாக்கு கூற, ஈச்சனாரி விக்னேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கலானார். இத்திருத்தலம் உருவாகி 475 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 1990--ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் அழகாக பிரதான சாலையில் காட்சியளிப்பது பக்தர்களிள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே கோவில் வளாகம் கட்டப்பட்டு விருத்தி செய்யப்பட்ட பின்பு, கோவிலை இந்து அறநிலையத்துறை எடுத்து அரசின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரையும் இடைவெளி இன்றி தொடர்ந்து இத்திருத்தலத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், கணபதி ஹோமம் கட்டளைதாரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் 27 நட்சத் திரங்களுக்கும் மலர் அலங்காரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலும், 27 வித மலர் அலங்கார அழகு செய்யப்பட்டு பூஜை நடத்துவது மிகவும் சிறப்பானதாகும்.

இந்த கோவிலுக்கு இது பிரசித்தமானதாகும். மண வாழ்க்கை அமைவது நிச்சயம் :

மேலும் தினமும் நடைபெறும் பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும், அதாவது, பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீறு மற்றும் மின் கட்டணங்களும் கட்டளைதாரர்களே செலுத்தி வருவது சிறப்பான அம்சமாகும். இந்த திருத்தலம் வந்து விநாயகரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்ய, குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைத்து, நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி.

தொழிலில் நல்ல முன்னேற்றம், விவசாயத்தில் அதிக மகசூல், நினைத்தபடி திருமண வாழ்க்கை கிடைப்பதும் நிச்சயம் என்கின்றனர், இதை அனுபவித்து உணர்ந்தவர்கள், பலனை அடைந்தவர்கள் தங்கள் நேர்த்தி கடனை, பால் அபிஷேகம் செய்து, பால் கொழுக்கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின்றனர்.

முக்கிய விழாக்கள் :

சதுர்த்தி ஆவணி மாதம் 2 நாள் திருவிழா, மாதத்தில் கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை, சித்திரை திருவிழா 2 நாட்கள், தைப்பூசம், கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி, தமிழ்-ஆங்கில வருட பிறப்பு ஆகியவை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தினமும் 500 முதல் 1000 வரை பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு தினமும் 150 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

இங்கு ஏழை எளியவர்களுக்கு திருமணம் எந்தவித தொகையும் பெறாமல் நடத்தப்படுகிறது. தங்க ரதம் ஒன்று தயார் செய்து, தங்க தேர் நேர்ச்சையும் நடைபெறுகிறது. கோவை நகர மக்கள் புதிய வாகனம் வாங்கினால் பதிவெண்ணை வாகனத்தில் எழுதுவதற்குமுன் விநாயகரிடம் சமர்ப்பித்த பின்தான் (அதாவது ஈச்சனாரியில் வருகைப் பதிவு செய்தபின்தான்) மற்ற செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாகன பூஜைக்கு பெயர்பெற்ற ஆலயம் இது.

தினமும் மாலை 6.30 மணியளவில் கட்டளைதாரர்கள் அடிப்படையில் விநாயகர் தங்கத் தேரில் பவனி வந்து அருள்புரிவார். அம்மையப்பன் அம்சமாக (அர்த்தநாரி) இங்கு விநாயகர் அருள்புரிகிறார். அன்பே சிவம் என்பதற்கேற்ப, காலணி விடும் இடத்திலும் சரி; தரிசனம் செய்யும் இடத்திலும் சரி; அர்ச்சகர்களிடமும் சரி; திருக்கோவில் நிர்வாகிகளிடமும் சரி- இன்முகத்துடன் உபசரிக்கும் தன்மையை இங்கு காணலாம்.

குடும்பப் பிரச்சினைகளை நினைத்து வருபவர்கள் ஈச்சனாரி விநாயகரை தரிசித்தபின் சுமைகளை இறக்கி சுகமாக வீட்டுக்குச் செல்வர் என்பது கண்கூடு. தட்டு காணிக்கைகளை தனி உண்டியலில் போட்டு, சதவிகித அடிப்படையில் பகிர்ந்துகொள்கின்ற பண்பு வேறெங்குமில்லாத சிறப்பம்சம். அவரவர் நட்சத்திர நாளில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். ஜாதகம் இல்லாதவர்கள் தமிழ் வருடப்பிறப்பு, தமிழ் மாதப் பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் தரிசனம் செய்தால் பன்மடங்கு பலன் உண்டாகும்.


Similar News