ஆன்மிகம்
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்

சுயம்புவாய் எழுந்தருளியுள்ள குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்

Published On 2016-06-23 09:23 IST   |   Update On 2016-06-23 09:23:00 IST
சனி பகவானுக்கு தமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்த புகழ்பெற்ற தலமாக குச்சனூர் விளங்குகிறது.
எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் நவகோள்கள் வையகத்தை இயக்குகின்றன. இதில் சனி கிரகத்தின் பங்கு முக்கியமானதாகும். வாழ்விலே இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். முற்பிறவியில் செய்த கர்மத்திற்கு ஏற்ப இப்பிறவியில் பலனை சனீஸ்வரன் கொடுக்கிறார்.

சனி பகவானுக்கு தமிழகத்தில் திருநள்ளாருக்கு அடுத்த புகழ்பெற்ற தலமாக குச்சனூர் விளங்குகிறது. இங்கு சனி பகவான் சுயம்பு வடிவில் மூலவராக இருப்பது தனிச்சிறப்பு.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ளது குச்சனூர் தலம். இங்கு சனீஸ்வர பகவான் சுயம்பு வடிவில் எழுந்தருளியுள்ளார். லிங்க உருவில் உள்ள இந்த சுயம்பு வளர்ந்து கொண்டே இருப்பதால் அதனை கட்டுப்படுத்த மஞ்சள் காப்பு பூசப்பட்டுள்ளது.

கால வரம்பிற்கு அப்பாற்பட்ட குச்சனூர் சனீஸ்வரனைப் பற்றி அகஸ்திய கவுசிக, சிவ நாடி ஜோதிடங்களில் குறிப்பிட்டுள்ளது. சுயம்பு மூலவர் நெற்றியில் நாமம் இடப்பட்டிருப்பது சூரிய நாராயண புத்திரன் என்பதை உணர்த்துவதற்கே. ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் கிரீடத்தில் விபூதி பட்டம் அணியப்பட்டுள்ளது.

சனி பகவானுக்கு இத்தலத்தில் பிரம்மஹத்தி தோசம் விலகியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால் குச்சனூர் சனீஸ்வரரை வழிபட்டால் நம்மை பிடித்திருக்கும் செவ்வாய் உள்ளிட்ட அனைத்து தோசங்களும் நிவர்த்தியாகும். சனி தோசம் உள்ளவர்கள் வழிபட்டால் சோதனை விலகி சுபிட்சம் உண்டாகும்.

குடும்பத்தில் மங்கலம் ஏற்படும். தொழில், வியாபார விருத்தி உண்டாகும். இதனால் தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

கோவில் அருகே சுரபி நதி ஓடுகிறது. வற்றாத இந்த ஜீவ நதியில் பக்தர்கள் புனித நீராடி சனீஸ்வர பகவானை வழிபாடு செய்கிறார்கள். தோசம் உள்ளவர்கள் எள் விளக்கேற்றி காக்கைக்கு உணவளித்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள். இதன் மூலம் அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் சூரியனைக் கண்ட பனி போல் விலகுகின்றன.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 5 சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறும். லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். சனி பெயர்ச்சி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருள் அடக்கம் என்பதால் 3 ஜோடி கண்களும், சக்தி ஆயுதம், வில் ஆயுதம், அபய ஹஸ்தம், சிம்ம கர்ணம் என்ற தாத்பரியத்தில் நான்கு கரங்களும், இரண்டு பாதமும் உள்ளன.

சனி பகவான் நீதிதேவனாக செயல்படுகிறார். முற்பிறவியில் செய்த கர்மாவிற்கு, இப்பிறவியில் கோச்சாரம் பார்த்து கஷ்டத்தை சனீஸ்வரன் தண்டனையாக கொடுக்கிறார். அதேபோல் முன்னோர்கள் செய்த பாவத்திற்கு வம்சாவளியினர் பாதிக்கும் வகையில் கஷ்டத்தை கொடுக்கிறார். கஷ்டத்தை தாங்க முடியவில்லை என்று சனீஸ்வரனை வழிபட்டால் தாங்கும் மனோதிடம் தருவார். குறிப்பிட்ட காலம் ஆனதும் சுபிட்சத்தை வாரி வழங்குவார். அதனால்தான் ‘சனியைப்போல் கெடுப்பாரும் இல்லை’, ‘சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை’ சனி கொடுத்தால் யார் தடுப்பார் என்ற பழமொழிகள் வழக்கத்தில் உள்ளன.

நடை திறப்பு நேரம் :

கோவில் நடை திறக்கும் நேரம் காலை 7.30 மணி, நடை அடைக்கும் நேரம் பிற்பகல் 1 மணி. மறுபடியும் மாலை 4.30 மணிக்கு நடைதிறந்து இரவு 8 மணிக்கு அடைக்கப்படும். சனிக்கிழமைகளில் காலை 6 மணியில் இருந்து 8.30 மணிவரையிலும், திருவிழா காலங்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

போக்குவரத்து வசதி :

குச்சனூர் தேனி மாவட்டத்தில் உள்ளது. தேனியில் இருந்து உப்புக்கோட்டை விலக்கு வழியாக வந்தால் 20 கிலோ மீட்டர் தூரம் பஸ் வசதியும் உண்டு. தேனியில் இருந்து கம்பம் குமுளி செல்லும் பஸ்களில் ஏறி சின்னமனூர் நகரத்தில் இறங்கி 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குச்சனூரை அடையலாம். பஸ், ஆட்டோ வசதிகளுண்டு.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :

+91- 4554 247 285, 97895 27068, 94420 22281



Similar News