ஆன்மிகம்

குழந்தை பாக்கியம் அருளும் தொட்டியம் அனலாடீஸ்வரர் திருக்கோவில்

Published On 2016-06-02 11:05 IST   |   Update On 2016-06-02 11:06:00 IST
குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள முருகனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சஷ்டி விரதம் இருந்து தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
சுவாமி : அனலாடீஸ்வரர் (சிவன்).
அம்பாள் : திரிபுரசுந்தரி.
மூர்த்தி : அப்புலிங்கம், பிருத்விலிங்கம், லக்ஷ்மி, தண்டபாணி.
தீர்த்தம் : ஈஸ்வர தீர்த்தம்.
தலவிருட்சம் : வில்வம் மரம்.

கோவில் வரலாறு :

தாரகாசூரன் என்ற அரக்கனுக்கு வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று புதல்வர்கள் இருந்தனர். தனது வம்சாவளி தொழிலான தேவர்கள், மனிதர்களை துன்பப்படுத்தும் பணியை அவர்களும் தொடர எண்ணினர். இதற்காக கடுமையான தவம் புரிந்து பிரம்மனிடம் வரங்களைப் பெற்றார்கள். அதன்வாயிலாக பொன் மற்றும் வெள்ளியால் ஆன அரண்கள் அமைத்துக்கொண்டனர்.

மேலும் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தன்மை கொண்டவர்களாய், பல இடங்களுக்கும் பறந்து சென்று மூவுலகங்களையும் துன்பத்தில் ஆழ்த்தினர். அந்தத் துன்பத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

அவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்த சிவபெருமான், பூமியை தேராகவும், சந்திர– சூரியரை குதிரைகளாகவும், பிரம்மனை சாரதியாகவும், மகா மேருமலையை வில்லாகவும், ஆதிசேஷனை வில் நாணாகவும், திருமாலை வாயுவாகிய சிறகாக அமைத்து, அக்னியை முனையாக கொண்ட அம்பாகவும், மற்ற தேவர்களை போர்க் கருவிகளாகவும் அமைத்துக் கொண்டு போர்க்கோலத்துடன் புறப்பட்டார். அங்கு மூன்று அசுரர்களுடன் போரிட்டு, அவர்களது அரண்களை முதலில் அழித்து, பின்னர் அவர்களையும் சம்ஹாரம் செய்தார்.

ஈஸ்வரி தீர்த்தம் :

அப்போது சிவபெருமான் விட்ட அம்பின் பொறி தொட்டு சென்ற இடம் ‘துவஷ்டபுரி’ என்று வழங்கப்பட்டது. அதுவே தற்போது தொட்டியம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் இந்த திரிபுரசம்ஹாரத்திற்கு புறப்பட்டு வந்த போது, இத்திருத்தலத்தில் பிரம்மன் யாகம் ஒன்றை செய்து கொண்டிருந்தார். அந்த யாக குண்டத்தில் சிவ பெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால் வட மொழியில் ‘அக்னி நர்த்தீஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார்.

அதுவே தற்போது அனலாடீஸ்வரர் என்ற திருநாமத்தோடு விளங்குகிறது. சிவபெருமான் நர்த்தனம் புரிந்த யாககுண்டம், தற்போது ‘ஈஸ்வரி தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது. இந்த தீர்த்தம் அம்மன் சன்னிதிக்கு முன்பாக அமைந்துள்ளதால், அம்பாள் திரிபுரசுந்தரியாக பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறாள். பிரம்மன் இங்கு யாகம் செய்ததால் பிரம்மபுரம் என்றும், மத்திய மலையை அடுத்துள்ளதால் மத்தியாசலஷேத்திரம் என்றும், திரிபுரங்களையும் அழித்த காரணத்தால் திரிபுர சம்ஹார ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமான் செய்த அட்ட வீரட்டங்களில் எட்டு வீர செயல்களில் திரிபுர தகனமும் ஒன்று. அது இத்தலத்தில் நிகழ்ந்ததாக கூறப்படு கிறது.

சம்ஹார மூர்த்தி :

இதை ஆன்றோர்கள் பல பாடல்களில் சுட்டிக் காட்டி இருக்கின்றனர். இதன் அடையாளமாக இந்த ஆலயத்தில் திரிபுர சம்ஹார உற்சவமூர்த்தி, இடது கையில் வில்லை வளைப்பது போலவும், வலது கை விரல் அம்பு விடுவது போலவும் காட்சி தருகிறார். அனலாடீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சன்னிதிகள் அருகருகே அமைந்து சக்தியும் சிவமுமாக காட்சியளிப்பதாலும், சப்த கன்னிகள் வழிபட்டதாலும், பிரம்மன் செய்த யாககுண்டமே தீர்த்தமாக விளங்குவதாலும், இங்குள்ள அம்பாளை வணங்குவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் வலிமை சேர்ப்பதுடன் குளிர்ச்சியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

இங்குள்ள ஈஸ்வரி தீர்த்தமே ஒரு காலத்தில் இப்பகுதி மக்களுக்கு பிணி போக்கும் மருந்தாக இருந்து வந்துள்ளது. மேலும் இங்குள்ள சிவபெருமானை விபத்து மற்றும் தீக்காயமடைந்தவர்கள் வழிபட்டால் உடனடியாக பலன் கிடைப்பது உறுதி. இங்கு காரண ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் நவக்கிரகத்திற்கு அருகில் உள்ள உயரமான கால பைரவர் சிலை மிகவும் சிறப்பு பெற்றதாக கூறப்படுகிறது.

காரணம் தேய்பிறை அஷ்டமியில் விளக்கேற்றி பூஜை செய்தால் வழக்கு, பில்லி, சூனியம் போன்றவைகளிடமிருந்து மீண்டு மனதிற்கு நிம்மதியளிப்பதாகவும் இங்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் சுப்ரமணியராக அருள்புரிந்து வருகிறார். குழந்தை இல்லாதவர்கள் இங்குள்ள முருகனை ஆறு மாதங்கள் தொடர்ந்து சஷ்டி விரதம் இருந்து தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

நடைதிறப்பு : காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00  வரை.

திருவிழாக்கள் : சூரசம்ஹார நிகழ்ச்சி, சிவராத்திரி, நவராத்திரி, வைகாசிமாத விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படும்.

திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில் 52 கிலோ மீட்டர் தூரத்திலும், நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் வழியில் 32 கிலோ மீட்டர் தூரத்தில் தொட்டியம் நகரில் இக்கோவில் உள்ளது.

கோயில் முகவரி :

அருள்மிகு அனலாடிஸ்வரர் திருக்கோவில்,
தொட்டியம்,
திருச்சி மாவட்டம்.

தொலைபேசி எண் : 04326 - 254338.

Similar News