ஆன்மிகம்

ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயம்

Published On 2016-05-31 07:06 IST   |   Update On 2016-05-31 07:06:00 IST
இவ்வாலயத்தில் மகாவிஷ்ணு குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11 தலை ஆதி சேஷனில் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
நேபாள தலைநகர் காத்மண்டுவில் உள்ள மிகவும் பிரபலமான ஆலயம் ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயமாகும். இது புத்த நீலகண்டர் ஆலயம் மற்றும் ஜல் நாராயணர் ஆலயம் என்றும் இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறது.

இவ்வாலயத்தில் மகாவிஷ்ணு குளத்தின் மையப் பகுதியில் பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11 தலை ஆதி சேஷனில் சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். இயற்கை நீரூற்றின் மீது துயில் கொள்ளும் அனந்த சயன நாராயணர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனதில் அமைதியை வழங்குவதற்காக இவ்வாறு காட்சி அளிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

காத்மண்டுவில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரி மலை தொடரின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள கருங்கல்லால் ஆன பாம்புகளின் மீது புத்தநீலகண்டர் சேவை சாதிக்கின்றார்.

இந்த மகாவிஷ்ணு சிலை ஒரே கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டதாகும். ஒரு சமயம் வயதான கணவன் மனைவி இருவரும் தங்களின் விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்த போது பூமிக்கு அடியில் இருந்து இந்த பிரம்மாண்ட சிலை வெளிப்பட்டுள்ளது. ஊர்காரர்களை அழைத்து வந்து காட்ட முயன்ற போது அச்சிலை மாயமாக மறைந்து விட்டதாம்.

பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த விவசாயி தனது நிலத்தை உழுது தொண்டிருந்த போது மீண்டும் பூமிக்கு அடியில் இருந்த வெளிப்பட்ட சிலையில் இருந்து ரத்தம் வழியத் துவங்கியதாக இக்கோயில் குறித்த வரலாறு கூறப்படுகிறது. இருப்பினும் இக்கோயிலில் அமைந்துள்ள மகாவிஷ்ணு சிலை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இவ்வளாகத்தில் ருத்ராக்ஷ மரமும் உள்ளது.

மகாவிஷ்ணு சிலை,13 மீட்டர் நீளமுள்ள குளத்தில் 5 மீட்டர் நீளத்தில் கால்களை குறுக்காக வைத்தபடி சயன கோலத்தில் உள்ளது. நான்கு கைகளிலும் முறையே சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை மலர் ஆகியன உள்ளன. இந்த சிலை சுமார் 7 அல்லது 8ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சிவனைப் போன்று பழமையான நீல நிறம் கழுத்தில் காணப்படுவதால் இவர் புத்தநீலகண்டர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இவ்வாலயத்தில் விநாயகருக்கு ஒரு தனி சன்னதி உள்ளது. மற்றும் திறந்த வெளி பசுபதி நாதர் மேடையும் உள்ளது.

காத்மாண்டுவில் உள்ள ஆலயங்கள் அனைத்திலும், ஏன் பல வீடுகளிலும் கூட கதவுகள் அருமையான மர வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. எல்லா கதவுகளிலும் சூரிய சந்திரர்களையும், புத்த மதத்தினரின் எட்டு மங்கலப்பொருள்களையும் காணலாம்.

இந்த ஜல் நாராயணர் திறந்த வெளியில் தான் உள்ளார். மேற்கூரை எதுவும் இல்லை. ஒரு மஞ்சள் விதானம்தான் இவரை சூரியனிடமிருந்து காப்பாற்றுகின்றது. பக்தர்கள் இவரது திருவடிகளில் நின்று இவரை வணங்குகின்றனர். 

Similar News