ஆன்மிகம்

கன்னாப்பூர் நடுதறிநாதர் ஆலயம் - திருவாரூர்

Published On 2016-05-24 12:14 IST   |   Update On 2016-05-24 12:14:00 IST
கன்னாப்பூர் நடுதறிநாதர் ஆலயம் தேவாரப் பாடல் பெற்ற 120–வது தலமாக விளங்குகிறது.
திருவாரூர் அருகே உள்ளது கன்னாப்பூர் நடுதறிநாதர் ஆலயம். காவிரி தென்கரைத் தலங்களில், தேவாரப் பாடல் பெற்ற 120–வது தலமாக இது விளங்குகிறது.

கயிலாயத்தில் ஒரு நாள் சிவபெருமான் உமாதேவியாருடன் வீற்றிருந்தார். அப்போது சுதாவல்லி என்ற பெண், உமை வடிவம் கொண்டு நடித்து, நாட்டியமாடி சிவபெருமானை மகிழச் செய்தாள். இதனைக் கண்ட உமாதேவி அச்சம் கொண்டு, சுதாவல்லியை மண்ணுலகில் பிறக்க ஆணையிட்டாள். இதனால் சுதாவல்லி கலங்கினாள். அவளிடம் உமாதேவி, ‘இது விதிப்பலன். நீ மண்ணுலகில் பிறந்து, சிவபெருமானை பூஜை செய்து என்னை வந்து அடைவாய்’ என்று அருளினாள்.

சுதாவல்லி தேவூருக்குத் தெற்கே உள்ள திருத்தலத்தில் பிறந்தாள். பெற்றோர் அவளுக்கு கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்தனர். பழவினைத் தொடர்பால் சிவபெருமானை பூஜை செய்து வந்தாள். அவள் மணம் செய்து கொள்ளும் பருவத்தை எட்டியபோது, ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பிறகும் கமலவல்லி சிவபெருமானை தினமும் பூஜித்து வந்தாள். எப்போதும் சிவலிங்கம் ஒன்றை வைத்து ஆராதனை செய்தாள். இதனால் வெறுப்படைந்த, அவளது கணவன், சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போய் கிணற்றில் வீசினான்.

இதை உணர்ந்த கமலவல்லி, கணவனுக்கு தெரியாமல் சிவனை பூஜிப்பது என்று முடிவு செய்தாள். தன் வீட்டு பசுங்கன்று கட்டும் தறி(முளை) ஒன்றை, சிவலிங்கமாக பாவித்துப் பூஜை செய்யத் தொடங்கினாள். பக்தர்கள் நினைக்கும் உருவில் தோன்றுபவன் இறைவன். ஆகையால் சிவனை தறியில் கண்டாள். கமலவல்லியின் இந்த செய்கையை அறிந்த அவளது கணவன், கோடரியால், கன்று கட்டும் தறியை வெட்டினான். வெட்டுப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. கமலவல்லியின் பக்தியை, அவளது கணவன் உணரும் வகையில் இறைவன் சுயம்புவாக தோன்றி காட்சியளித்தார். கமலவல்லியும், அவளது கணவனும் சிவலோகம் அடைந்தனர்.

கன்று கட்டும் தறி லிங்கமாக மாறியதால் இத்தலம் (கன்று+ஆப்பு+ ஊர்)= ‘கன்றாப்பூர்’ என வழங்கப்பெற்றது. கன்று கட்டும் தறியின் நடுவில் இருந்து லிங்கத்திருமேனி சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியதால் இறைவன் ‘நடுதறிநாதர்’ என அழைக்கப்பட்டார். கன்றுக் குட்டியின் நடுதறி இருந்த இடமே, இன்று நடுதறிநாதர் கோவிலாக விளங்குகின்றது. இன்றும் மூலவரது உச்சியில் கோடரி வெட்டு உள்ளதைக் காணலாம்

ஆலய அமைப்பு :

கிழக்கு நோக்கிய இந்தக் கோவில் மூன்று நிலைகளையுடைய சிறிய ராஜகோபுரத்துடன் காட்சியளிக்கிறது. ஆலயத்தில் கொடிமரமில்லை. பலிபீடம், நந்தி உயரமான பீடத்தில் உள்ளன. உள் பிரகாரம் சுற்றி வரும்போது தீர்த்த கிணறு, விநாயகரை தரிசிக்கலாம். அடுத்துள்ள மண்டபத்தில் வரிசையாக சிவலிங்கம், விநாயக மூர்த்தங்கள் நான்கு, பிடாரியம்மன், சுப்பிரமணியர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், சனீஸ்வரன் சன்னிதிகள் உள்ளன.

பிரகார வலம் முடித்து முன் மண்டபத்தை அடைந்தால் வலதுபுறம் நின்ற திருமேனியுடன் காட்சி தரும் மாதுமை நாயகி என்னும் அம்பாள் சன்னிதியைக் காணலாம். அம்மனுக்கு நேர் எதிரில் நடுதறிநாதர் சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். மூலவர் சதுரபீட ஆவுடையார் மீது சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.

கயிலை மலையில் ஈசனின் கண்களை அம்பாள் விளையாட்டாகப் பொத்தினாள். அதனால் உலகமே இருண்டது. பயத்தில் தன் கைகளை சிவனின் கண்களில் இருந்து அகற்றினாள். மீண்டும் இருள் அகன்றது. ஈசன் உமையைப் பார்த்து, ‘நீ விளையாட்டாக கண் மூடியது ஒரு கணமே என்றாலும், அதனால் உலக உயிர்கள் துன்பமடைந்தன. அதற்கு பரிகாரமாக நீ பூலோகத்தில் உள்ள கன்றாப்பூர் என்ற சிவதலத்தில் என்னை பூஜித்து பாவ நிவர்த்தி பெறுவாயாக’ என்று அருளினார்.

அன்னை கன்றாப்பூரை அடைந்து, அருகில் ஓடிய பாண்டவ ஆற்றின் கரையில் மணலில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வந்தாள். அப்போது பெரும் வெள்ளம் பெருக் கெடுத்து வந்தது. மணல் லிங்கம் கரைந்து விடாமல் இருக்க, உமையவள், தன் இருகரங்களாலும் சிவலிங்கத்தை தழுவிக்கொண்டாள். அப்போது ஈசன் தோன்றி அன்னையை மணந்து அருள்பாலித்தார்.

இந்த ஆலயத்தில் உற்சவராக எழுந்தருளியிருக்கும் மாரியம்மனுக்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படுகிறது. வைகாசி விசாகத்தில் மூன்று நாட்கள் நடுதறிநாதருக்கு விழா நடைபெறுகிறது. மாசி மாதம் கடைசி செவ்வாய் அதிகாலை 5.30 மணி முதல் சூரிய ஒளி, சிவலிங்கத்தைத் தழுவி சூரிய பூஜை செய்கிற அதிசயத்தை காணலாம். திருக்கன்றாப்பூர் என்பது இத்தலத்தின் புராணப் பெயராகும். இந்த பெயரே கன்னாப்பூர் என்று மாறியதாக தெரிகிறது.

இந்தத் தலத்தில் உள்ள கங்காமிர்தம் என்னும் சிவகங்கை தீர்த்தம், ஆலயத்தின் கிழக்கே அமைந்துள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பல்வேறு நோய்களில் இருந்து விமோசனம் பெறலாம் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் புத்திரப்பேறு, புகழ் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சாபம் போக்கிய தீர்த்தம் :

தருமபுரம் என்னும் இடத்தில் மேதாவி என்னும் முனிவர் வாழ்ந்து வந்தார். அவரது ஆசிரமத்தில் பல மாணவர்கள் அவரிடம் கல்வி கற்று வந்தனர். இந்த நிலையில் சுதன்மா என்னும் முனிவர் ஒரு வேள்வி செய்ய இருந்தார். அந்த வேள்வியை, மேதாவி முனிவர் முன்னின்று நடத்த வேண்டுமென்று அவரை அழைத்தார். வேள்விக்குச் செல்லும் முன்பு தன் மாணவர்களில் ஒருவனான தர்மசர்மா என்பவனை அழைத்த மேதாவி முனிவர், பர்ண சாலையையும், பசுக்களையும் பாதுகாக்கச் சொல்லி சென்றார்.

வேள்வி முடிந்து வந்த போது பசுக்களுக்கு சரியான உணவு கொடுத்து பாதுகாக்காததால், அவை மெலிந்தும், உடல் வற்றியும் இருப்பதைக் கண்டார். இதனால் கோபம் கொண்ட மேதாவி முனிவர், தர்ம சர்மாவை நாய் உருப்பெற்று அலைய சாபம் கொடுத்தார். தர்ம சர்மா, முனிவரின் காலில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டினான். மனம் இரங்கிய முனிவர், ‘சாபத்தின் படி நீ நாயாக உருமாறி அலைய வேண்டியது தான். ஆனால் சோழ நாட்டில் காவிரி பாயும் கன்றாப் பூரில் சிவகங்கைத் தீர்த்தத்தில் சென்று நீராடினால், உன் நாய் வடிவம் நீங்கும்’ என்று அருளினார்.

நாய் உருவம் பெற்ற தர்மசர்மா, பல தேசங்களில் அலைந்து திரிந்து, காலவ முனிவரைக் கண்டான். அவரும் அவன் வரலாற்றைக் கேட்டு, கன்றாப்பூர் சிவகங்கையில் நீராட வழி காட்டினார். அவர் காட்டிய வழியில் நீராடி தன் சுய உருவடைந்தான் தர்மசர்மா.

திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் சாட்டியக்குடி என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து இடது பக்கமாக கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால், கன்னாப்பூர் கூட்ரோடு வரும். அங்கிருந்து வலதுபுறம் பிரியும் சாலையில் 1 கிலோமீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். மினி பஸ் வசதி உள்ளது. திருவாரூரில் இருந்து எட்டுக்குடி செல்லும் வழியில் கன்னாப்பூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கோவிலை அடையலாம்.

புராண வரலாறும், சிற்ப வரலாறும் உடைய கோவில் கன்னாப்பூர். இங்குள்ள இறைவனையும், இறைவியையும் ஒரு முறை தரிசித்து வாருங்களேன்.

Similar News