ஆன்மிகம்

கபாலீஸ்வரர் கோவில் - மயிலாப்பூர்

Published On 2016-05-23 08:38 IST   |   Update On 2016-05-23 08:38:00 IST
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது.

இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களையும் இக்கோயில் வளாகத்திலே காண முடியும். பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக் கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

ஸ்தல வரலாறு :

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களுள் திருமயிலை கபாலீசுவரர் திருக்கோயில் மிகவும் முக்கியமானது. கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசையாழ்வார் மாமயிலை என்றும், கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர், மயிலாப்பில் மயிலாப்பு என்றும் திருஞான சம்பந்தர், மயிலை என்றும் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்று பெயர் பெற்றது சிவபெருமானிடம் உமையவள் பார்வதி தேவி ஐந்தெழுத்தின் பெருமையையும், திருநீற்றின் மகிமையையும் விளக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி, சிவபெருமானும் விளக்கமளித்தபோது, மயில் ஒன்று தோகை விரித்து அழகாக நடனம் ஆடிக்கொண்டிருக்க அதன்பால் உமையவள் கவனம் திரும்பியது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, பூலோகத்தில் நீ மயிலாக பிறப்பாய் என்று சாபம் கொடுத்தார்.

இதற்கு விமோசனம் என்ன என்று உமையவள் கேட்டபோது, தொண்டைநாட்டிற்குச் சென்று தவம் இயற்றுவாய் என்று சிவபெருமான் கூறினார். அதன்படி, இந்த திருத்தலத்தில் அமைந்துள்ள புன்னை மரத்தின் கீழ் சிவலிங்கத்தை உமையவள் பார்வதி தேவி பக்தி சிரத்தையுடன் மயில் உருவில் சிவபெருமானை வழிபட, அவர் முன் தோன்றிய சிவபெருமான் சாபவிமோசனம் கிடைக்கப்பெற்றாள் அதன் காரணமாக கற்பகவல்லி என்று பெயர் சூட்டினார்.

அப்போது உமையவள், பார்வதி மயில் உருவில் பரமனை நோக்கி மயில் உருவில் தவம் செய்து உயர்ந்ததால் இப்பகுதிக்கு மயிலை என்னும் பெயர் விளங்க வேண்டும் என்றும் என்னுடன் தாங்கள் பிரியாது இங்கிருந்து பக்தர்களுக்கு அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரம்மதேவன் சிவபெருமானைப் போல தனக்கும் 5 தலைகள் உண்டு என்று செருக்கடைந்த போது அவனுடைய நடு தலையை கிள்ளி கபாலத்தை ஏந்திய காரணத்தால் ஈசுவரன், கபாலீசுவரன் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது.

கோவில் தோற்றம் :

இத்திருக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்குப்பகுதியில் ராஜகோபுரம் அமைந்திருக்கிறது. இதன் உயரம் சுமார் 120 அடி உயரமும் உடையது. வெளிப் பிரகாரம் விசாலமாமாகவும் முக்கிய சந்நிதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காணபது கிழக்கு வெளிப் பிரகாரம்.

சிவலிங்க திருமேனியோடு மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார் கபாலீஸ்வரர். இந்த கருவறை பிரகாரத்தில் சந்திரசேகரர், அறுபத்துமூவர், தொகையடியார் ஒன்பது பேர், சிவநேசர், அங்கம் பூம்பாவை உலா திருமேனி வரிசையில் உள்ளன. கபாலீசுவரர் சந்நிதிக்கு வலப்புறத்தில் தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் கற்பகவல்லி தாய் வீற்றிருக்கிறார்.

கபாலீசுவரர் சந்நிதிக்கு இடப்புறம் உள்ள கோயிலில் மேற்கு திசை மேவி ஆறுமுகத்தோடு அமர்ந்திருக்கிறான் சிங்கார வேலவன். கற்பகவல்லிக்கு நேர் தெற்கே வாயிலார் நாயனார் கோயில் அமைந்துள்ளது. முக்கிய வாயிலின் வடப்புறம் திருஞானசம்பந்தர் பூம்பாவையுடன் இருக்கிறார். கோயிலின் வடக்குவெளிச் சுற்றிலே புனித புன்னை மரம் இருக்கிறது.

ராஜகோபுரம் அமைந்துள்ள கிழக்கு வாயில் எதிரே நர்த்தன விநாயகர் குறைநீக்கி அருளுகின்றார். சனி பகவானுக்கு இக்கோயிலில் தனிச் சந்நிதி உண்டு. நவக்கிரகங்களும் இடம் பெற்றுள்ளன. மேற்கு கோபுரத்திற்கு நேர் எதிரில் கபாலீசுவரரை நோக்கியபடி நந்தி அமைந்துள்ளது.

நந்தியை ஒட்டினாற்போல் கொடிமரமும், பலி பீடமும் இருக்கின்றன. நந்தியம் பெருமானுக்கு விசேஷ நாட்களிலும் பிரதோஷ காலங்களிலும் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படுகிறது.

கோவில் நடை திறந்திருக்கும் நேரம் :

இக்கோயிலில் காமிக ஆகமப்படி நாள்தோறும் ஆறுகால பூஜை நடைபெற்று வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை பக்தர்கள் வழிபாட்டிற்கு திறந்திருக்கும்.

விருட்சம் புன்னை மரம் :

தல விருட்சம் புன்னை மரம். இங்கே தெற்கு நோக்கி சிவபெருமானும், மயில் உருவுடன் பூஜித்து நிற்கும் உமாதேவியாரும் தலப்பெருமை காட்டி எழுந்தருளியிருக்கிறார்கள்.

கபாலி தீர்த்தம் :

இத்திருக்கோயில் மேற்கு நோக்கிய வாயிலின் முன்புறம் நீராழி மண்டபத்தோடு கூடிய பெரிய திருக்குளம் காணப்படுகிறது. இதுவே கபாலி தீர்த்தம் எனப்படும். கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இதற்கு பெயர் உண்டு.

பங்குனி மாதம் பவுர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு 10 நாள் பங்குனி உற்சவம், வசந்த உற்சவம், நவராத்திரி, கந்தர் சஷ்டி, திருவாதிரை விழா என திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News