ஆன்மிகம்
வரதராஜப் பெருமாள் திருக்கோயில் - காஞ்சிபுரம்

வரதராஜப் பெருமாள் திருக்கோயில் - காஞ்சிபுரம்

Published On 2016-04-26 11:38 IST   |   Update On 2016-04-26 11:38:00 IST
காஞ்சிபுரம் என்று மக்கள் நினைத்து உடன் 1. பட்டுப்புடவை 2. காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் 3. வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகியவை மக்களுக்கு நினைவிற்கு வரும்.
சுவாமி : வரதராஜ பெருமாள்.
அம்பாள் : பெருந்தேவி தாயார்.
தீர்த்தம் : வேகவதி ஆறு, அனந்தசரஸ்.
விமானம் : புண்ணியகோட்டி விமானம்.

தலச்சிறப்பு :

இத்திருக்கோயிலின் இராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்தள்ளது. காஞ்சியில் தெற்குப் பகுதி - நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ள திருக்கோயிலாகும். மூலவர் வரதராஜப் பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் சேவார்த்திகளுக்கு அருள் புரிந்து கொண்டுள்ளார். பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி சேவார்த்திகளுக்கு அருள்புரிந்து கொண்டுள்ளார்.

தல வரலாறு :


தொண்டை நாட்டில் அமைந்துள்ள திவ்ய தேசங்களுள் மிகவும் சிறப்பாகக் பேசப்படும் திருப்பதியும், பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருக்கக் கூடியதுமான திருக்கோவில் இது ஆகும். காஞ்சிபுரம் என்று மக்கள் நினைத்து உடன் 1. பட்டுப்புடவை 2. காஞ்சி அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் 3. வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகியவை மக்களுக்கு நினைவிற்கு வரும். 108 திவ்ய தேசங்களுள் கோயில் என்பது திருவரங்கத்தைக் குறிக்கும், திருமாலை என்பது திருவேங்கடத்தானை - திருப்பதியைக் குறிக்கும், பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சி வரதராஜரைக் குறிக்கும்.

வைணவ மதம் வளர்க்கப்பட்ட தலம் :

ஒரு சமயம் மும்மூர்த்திகள் உலக நன்மைக்காக செய்த யாகத்தில், பங்கு கொண்ட தேவர்களுக்குக் கேட்ட வரம் எல்லாம் கொடுத்தார் மகாவிஷ்ணு எனவே அவருக்கு வரதர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுவர். யாகத்தில் அளித்த அவர்ப் பாகத்தை ஒரு சித்திரை மாத திரிவோண நன்நாளில் நாராயணன் புண்ணியகோடி விமானத்தில் சங்கு, சக்கர, கதையுடன் தோன்றி ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ மந்நாராயணன் புண்ணியக்கோடி விமானத்துடன் இங்கு எழுந்தருளிய நன்நாள் சித்திரை மாதத்து திருவோண தினத்திலாகும். அந்நாளில் தேவர்கள் ஒன்று சேர்ந்து இத்தலத்தில் நித்திய வாசம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள, நாராயணன் சம்மதித்தார். உடன் ஐராவதம் என்ற யானையே மலை வடிவில் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றது. இதனால் இதற்கு அத்திகிரி என்று மற்றொரு பெயரும் ஏற்பட்டது.

வைய மாளிகைப் பல்லி :

ஸ்ருங்கிபேரர் என்ற முனிவருக்கு ஹேமன், சுக்லன் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் கெளதம் முனிவரிடம் வித்தைப் பயின்றனர். இவர்கள் இருவரும் விஷ்ணு பூஜைக்குப் பழம் புஷ்பம், தீர்த்தம் கொடுக்கும் பணியினை மேற்கொண்டிருந்தனர். ஒரு நாள் கொண்டு வந்த தீர்த்தத்தை மூடாமல் வைக்க, அதில் ஒரு பல்லி விழுந்து விட்டது. இதை அறியாத இவர்கள் அத்தீர்த்தத்தை அப்படியே கொண்டு வந்து கெளதம முனிவரிடம் கொடுக்க, முனிவர் அதை பெற்றுக் கொண்ட போது அதில் இருந்த பல்லி வெளியில் தாவி ஓடியது.

அதைக் கண்டு கோபமுற்ற கெளதம முனிவர் அவர்கள் இருவரையும் நோக்கி பல்லியாகக்கடவது என்று சாபம் அளித்தார். இதனால் கவலை அடைந்த ஹேமன், சுக்லன் இருவரம் முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, சுவாமி அறியாமையால் தவறு நடந்து விட்டது எங்களை மன்னித்து, பாபவிமோசனமும் கூற வேண்டும் என வேண்டினர். உடனே முனிவர் சாந்தம் அடைந்து இந்திரன் யானை வடிவம் கொண்டு (கஜேந்திரனாக) வரதனை தரிச்சிக்க இச்சந்நிதியில் நுழைவான் அச்சமயம் உங்கள் சாபம் அகலும் என்று கூறினார்.

அதன் பின்பு ஹேமன், சுக்லன் இருவரும் இத்தலத்தலதிற்கு வந்து மூலவர் அறையின் வெளிப்பிரகாரத்தில், மூலவரின் வடகிழக்கே பல்லியாக வந்து அமர்ந்தனர். குறிப்பிட்ட காலம் நெருங்கியதும் இந்திரன், கஜேந்திரன் (யானை வடிவில்) வடிவம் கொண்டு இத்தலத்தில் நுழைந்த உடன் இவர்களின் சாபம் அகன்றது என்பது, பல்லியின் புராண வரலாற்றுச் சான்றோர்கள் கூறுகின்றனர்.

அத்திவரதர் : இத்திருக்கோயிலினுள், வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்குளத்தில், அத்தி மரத்தால் செய்யப்பட்ட, கிடந்து நிலையில் உள்ள அத்திவரதர் சிலையை 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியில் எடுத்த முறைப்படி பூஜைகள் செய்து, ஒரு மண்டலகாலம் பொது மக்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கமாக உள்ளது. கடைசியாக 1979 ஆம் அண்டு எடுக்கப்பட்ட பொது மக்களின் பார்வைக்கும், தரிசனத்திற்கும் வைக்கப்பட்டது.

நடைதிறப்பு :

காலை 7.30 மணி முதல் 12.30 வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

கோயில் முகவரி :

அருள்மிகு தேவராஜ் சுவாமி திருக்கோவில் (ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்),
விஷ்ணுகாஞ்சி,
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

தொலைபேசி எண்: 044 - 2726 9773.

Similar News