ஆன்மிகம்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்

Published On 2016-04-03 17:00 IST   |   Update On 2016-04-03 17:00:00 IST
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது.

கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் யாக சாலை பூஜைகள் கடந்த 25–ந்தேதி அன்று தொடங்கியது. தினமும் பூஜைகள் நடைபெற்றன.

கபாலீசுவரருக்கும், கற்பகம்பாளுக்கும், தனித்தனியாக பூரண கும்பம் வைத்து தினமும் பூஜைகள் செய்யப்பட்டன. யாகமும் நடத்தப்பட்டது.

இதில் கபாலீசுவரர் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிவன் கோவில் குருக்கள் உள்ளிட்ட 150–க்கும் மேற்பட்ட சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்களை உச்சரித்து யாகம் நடத்தி பூஜை செய்தனர். இப்படி தொடர்ச்சி யாக 11 நாட்கள் பூஜை நடத்தப்பட்டது. கோவிலில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் பழுது பார்க்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டது.

இன்று கும்பாபிஷேகத்தை யொட்டி, அதிகாலை 5 மணிக்கு 12–வது காலபூஜை நடந்தது. காலை 7.15 மணி அளவில் யாகம் பூர்த்தி அடைந்தது.

இதன் பின்னர் யாக சாலையில் இருந்து கலசங்கள் புனித நீருடன் எடுத்துச் செல்லப்பட்டன. காலை 8.50 அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கலசங்களில் எடுத்துச் செல்லப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கலசங் களின் மீது ஊற்றிஅபிஷேகம் செய்தனர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கும்பா பிஷேகம் முடிந்ததும் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

கபாலீசுவரர் கோவிலில் உள்ள அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், நர்த்தன வினாயகர், கபாலீ சுவரர், கற்பகாம்பாள், சிங்காரவேலவர் மற்றும் பரிவாரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை யொட்டி ரதவீதிகளில் சிவனடியார்கள் நாதஸ்வரம் முழங்க நடனம் ஆடியதையும் காண முடிந்தது. பக்தர்களின் வசதிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

Similar News