ஆன்மிகம்

நினைத்ததை நிறைவேற்றும் வாராகி மாலை

Published On 2018-08-09 04:42 GMT   |   Update On 2018-08-09 04:42 GMT
வாராகி அன்னைக்கு லட்சோப அதர்வன சித்திமந்திரம் இருந்தாலும், அவள் கூப்பிட்ட உடன் அகம் மகிழ்ந்து ஓடிவந்து நிற்பது ‘வாராகிமாலை’ எனும் அற்புத பாமாலைதான்.
எந்த ஒரு வழிபாடு செய்யும்போதும் அந்த தெய்வங்களுக்கு உரிய மிகவும் பிடித்த மந்திரப்பாடல்களை நம் நாவினால் பாடுகின்றபோது நாம் கேட்கும் பலன் தடையின்றி விரைவில் நமக்கு கிடைக்கின்றது. ஒவ்வொரு இறைவனுக்கும் ஒவ்வொரு பாடல் பாடியே அவர்களை மகிழ்வித்தே நம் முன்னோர்கள் சித்தர்கள் கண்கொள்ளா காட்சி கண்டு முக்தி பெற்றனர்.

அதேபோலதான், நீங்கள் அன்னையின் வரலாறுகளை அவள் மகிமைகளை தெரிந்து கொண்ட பிறகு அவள் அருளை பெற உங்கள் மனம் துடிக்கின்றது என நான் அறிவேன். வாராகி அன்னைக்கு லட்சோப அதர்வன சித்திமந்திரம் இருந்தாலும், அவள் கூப்பிட்ட உடன் அகம் மகிழ்ந்து ஓடிவந்து நிற்பது ‘வாராகிமாலை’ எனும் அற்புத பாமாலைதான். இது பகை அல்லல் அகற்றும் பாமாலை, இந்த வாராகி மாலை-யை மாலை நேரத்தில் யார் பாடி அன்னையை வழிபடுகிறார்களோ அவர் நிச்சயம் வெற்றியாளீ ஞானியே, இந்த வாராகி மாலையில் 32 பாடல்கள் அடங்கி உள்ளது.

இந்த 32 பாடல்களும் ஒவ்வொரு நிலையிலும், நமக்கு மிகப்பெரிய சிறப்புகளையும், நல்ல வாழ்வையும் அளிக்கவல்லது. வாராகி அருள்பெற இந்த வாராகி மாலை ஒன்றே போதுமானது. உலகம் நலம்பெற, என் மக்கள் வாழ்வு வளம்பெற அன்னை அருள் ஆட்சி செய்யட்டும் என்றுதான் இந்த மாபெரும் பொக்கிஷத்தை உங்களுக்கு விளக்கத்தோடு வழங்குகிறேன்.
அனைவரும் இதனை படித்து சகலபாக்கியங்களையும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும். அதுவே என் அன்னை வாராகியின் இலக்கு.

வாராகி மாலை

1. அன்னை வடிவம்

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகர் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே...

பொருள்: நவரத்தினம் அனைத்தும் அன்னைக்கு அவள் உடலுக்கு ஒப்பிட்டு கூறப்படுகிறது. செவிகள் -குழை, திருவடிகள் புஷ்பராகம்,  இரண்டு கண்கள் நீலகல், கரங்கள் -கோமேதகம், நகம் -வைரம், சிரிப்பு -முத்து பவளம் போன்ற இதழ். திருமேனி உடலோ மரகதம், பச்சை மாணிக்கம் போல் ஒளிரும் மேனியுடையதாகும்.

பயன்படுத்தும் முறை : அன்னையை வழிபடும்போது அவளை நம்மோடு இணைய விண்ணப்பம் செய்யும் முதல் பாடல்.

2. அருள்காட்சி வடிவம்

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்குவட்டது
ஈராறிதழ் இட்டு, ரீங்காரம் உள்ளிட்டது நடுவே
ஆராதனை செய்து அர்ச்சி பூஜித்து அடிபணிந்தால்
வாராது இராள் அல்லவே வாலை ஞான வாராகியுமே

பொருள்: வாராகி யந்திர வடிவம் இது. முக்கோணம், அறுகோணம், வட்டம், சுற்றிலும் தாமரைத்தளம், மத்தியில் பீஜம், இதை முறையாக எழுதி வாராகியை வழிபட வாராகி ‘வாலை’ திரிபுர சுந்தரியாக எழுந்து நமக்கு ‘அட்டமா சித்திகளை’ வழங்குவாள் என்று பொருள்.

பயன்பாடு : ஒரு குறிப்பிட்ட வழிபாட்டிற்காக அன்னையை நம் முன் அமரவைக்க இப்பாடலை பாட வேண்டும்.

3. பக்தியின் உச்சம் :

மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு
கை சிரத்து ஏந்திப் ப-லால் நீணம் நாறக் கடித்து உதறி
வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து
பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே.

பொருள்: தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி. அதுவும் தூயவர்களை -அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் துன்புறுத்தினால் அன்னை கோபம் கொள்கிறாள். அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார். அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பணிபவர்களும் இந்த தண்டனையை ஏற்க வேண்டியதுதான். பகைவர் உடலை தன் கூரிய நகங்களால் கிழித்து கூரிய கொம்புகளாக குத்தி குருதி குடிப்பாள். எனவே வாராகி வழிபாடு மிகவும் கட்டுப்பாடு உரியது. விளையாட்டல்ல என எச்சரிக்கப்படுகிறது.

பயன்பாடு: எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.

4. சக்தியின் வெளிப்பாடு

படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்பு தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலையிட்டு குலாவிமன்றில்
நடிக்கும் வாராகி பதினாலு உலகம் நடுங்கிடவே...

பொருள்: தவறிழைக்காத வாராகி பக்தர்கள், இன்னலுக்கு உட்பட்டால் அதற்கு காரணமானவர் பெறும்  தண்டனை கடுமையானது. தேவியின் தண்டம் (தடி) அவர்களை அடித்து தும்சம் செய்யும். பக்தரை காக்கும் பேரரணாக தேவி வெளிப்படுவாள் என்று உணர வேண்டும்.

பயன்பாடு: வீண்பழி நாம் பெறும்போது இப்பாடலை பாடி, நன்மை பெறலாம்.

5 வெற்றி பெற செய்யும் விதம்:-

“நடுங்காவகை அன்பர் நெஞ்சினில் புக்கவர் நண்ணவளரக் கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திடும் பாரக் காங்கையின் மீதே ரத்த திலகமிடும் தொடும் கார் மனோன்மணி, வாராகி நீலி தொழிலிதுவே...

பொருள்:

ஸ்ரீ வாராகி, தாந்த்ரீக பூஜையில் இடம் பெறுபவர்களுக்காக ஸ்ரீ மனோன் மணியையும், காளியையும் அனுப்பி, தன் பக்தனின் மனதில் ஏற்படும் பயத்தை விலக்கி, பகைவர்களை வீழ்த்தி ரத்தத் திலகம் இடுமாறு செய்கிறாள். “வாராகி” நீலி என்றால் பகை முடிப்பது என்று பொருள்.

பயன்பாடு:

மனதில் பயம் ஏற்படும் போது இப்பாடலை பாடி நன்மை பெறலாம்.

6. பயம் போக்க:

“நாசபாடுவர் நடுங்கப்படுவவர் நமன்கயிற்றால்
வீசபடுவர் விளையும்படுவர் இம்மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராகியை வாழ்த்திலரே.

பொருள்:

இழப்பு, பயம், துன்பம், கவலை, அவமானம் என்று அடுத்தடுத்து பலரும் துன்பப்பட்டு நடுங்குகிறார்கள், என்ன காரணம்? புது மலரில் பெருகிய தேனைப் போல இனிமையான வாராகி தேவியை மனதில் இருத்தி, வாழ்த்தி வழிபாடு செய்யாததால் இப்படிப்பட்ட துன்பங்கள் ஏற்படுகின்றது.

பயன்பாடு: துன்பம் படும் நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.

7. வாராகியை வழிபடுவோர் யார்?


“வாலை புவனை திரபுரை மூன்றும் இவ்வகையத்தில்
காலையும் மாலையும்  ச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வாராகி தன் பாதத்தை அன்பில் உள்ளி
மாயைன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே...

அணிமா, மகிமா, லகிமா உள்ளிட்ட எட்டு சித்தகளையும் அளிப்பவள், வாலை எனப்படும் பாலா, சகல சவுபாக்கியங்களையும் தருபவள் ஸ்ரீ வாராகி : பகைவர்களை அழித்து வெற்றி அருள்பவள் திரிவுர பைரவி, இந்த மூலவராகவும் காலை, மாலை உச்சிப் பொழுதுகளில் திகழ்கிநாள் ஸ்ரீ வாராகி, அதனால் திருத்தாள்களை திருமால், பிரமன் உள்ளிட்ட தேவர்களும் பாடி துதிக்கின்றார்கள்.

பயன்:-

இதை பாடினால் மும்மூர்த்தி அருள் கிடைக்கும்.

(1) இப்பாடல்களை தினசரி பாடி வழிபடுவோர்களுக்கு எல்லா வகையான பலன்களும் அளவற்ற செல்வமும் திரண்டு கிடக்கும். அதுவரை என் அன்னை வாராகி உங்களை காக்கட்டும். ஓம் வாராகியே போற்றி....! போற்றி....!
Tags:    

Similar News