முக்கிய விரதங்கள்

இன்று ரதசப்தமி: விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்...

Published On 2023-01-28 01:26 GMT   |   Update On 2023-01-28 01:26 GMT
  • அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும்.
  • ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது.

சூரிய பாகவானை வழிபடும் விரதங்களில் மிக முக்கியமானது, 'ரத சப்தமி' ஆகும். இது 'சூரிய ஜெயந்தி' என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வரும் சப்தமியையே 'ரத சப்தமி' என்கிறோம்.

'சப்தம்' என்றால் 'ஏழு' என்று பொருள். அமாவாசைக்கு பிறகான 7-வது நாள் சப்தமி திதியாகும். உத்ராயன புண்ணிய காலத்தின் தொடக்க மாதமான தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே 'ரத சப்தமி' என்று போற்றப்படுகிறது. அன்றைய தினம் சூாியன் பயணிக்கும் தேரை இழுத்துச் சென்றும், 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி தன்னுடைய பயணத்தைத் தொடங்குகின்றன.

இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு நீராட வேண்டும்.

7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு வைத்துக் கொண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.

கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.

ரத சப்தமி தினத்தில் மேற்கொள்ளக்கூடிய ரத சப்தமி விரதம் மிகவும் எளிமையானது. தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள்ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து நீராடவேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும் வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும். குளித்து முடித்த பிறகு சூரிய பகவானை வழிபட்டு ஒரு மண் பாத்திரத்தில் பசும்பாலை ஊற்றி சூரிய ஒளி அப்பாலில் விழும் படி சூரியனுக்கு நைவேத்தியம் வைத்து, சூரியனுக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபட வேண்டும்.

கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளி படும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.

மிகவும் அற்புதமான இந்த நாளில் தொடங்கும் தொழில், வியாபாரங்கள் பெருகும். பெண்கள் நற்கதியை அடைவார்கள். கணவனை இழந்த பெண்கள் இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன நமது புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்வது ஆன்மீக ரீதியான நற்பலன்களை தரும். சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டிப்பவர்கள் பெருஞ்செல்வந்தர் ஆக உயர்வார்கள். ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியமும், பலன்களும் உண்டு.முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். குல சாபங்கள் நீங்கும்.

இந்த நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஜெ.மாணிக்கம்

Tags:    

Similar News