முக்கிய விரதங்கள்

புதன்... சர்வ ஏகாதசி.. விரதம் இருந்து பெருமாளை வணங்குவோம்...

Published On 2023-06-13 09:06 GMT   |   Update On 2023-06-13 09:06 GMT
  • நாளை (புதன்கிழமை) சர்வ ஏகாதசி தினம்.
  • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள்.

புதன் கிழமையும் ஏகாதசியும் இணைந்து வரும் அற்புதமான நாளில், பெருமாளை விரதம் இருந்து வணங்குவோம். ஒரு கை துளசியை பெருமாளுக்கு சார்த்துவோம். நம்மை செம்மையாகவும் சிறப்புடனும் குறைவின்றி வாழச் செய்வார் ஏழுமலையான்.

பெருமாளை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் நாம் வரங்களைப் பெறுவதற்கும் எத்தனையோ நாட்கள் இருக்கின்றன. புதன் கிழமையும் சனிக்கிழமையும் பெருமாளுக்கு உரிய கிழமைகளாகச் சொல்லப்படுகின்றன.

அதேபோல், மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஏராளம்.

ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாளை ஆராதிப்பார்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம்.

இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவதும் மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளைப் பிரார்த்தித்து, நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வளம் சேர்க்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாளை (புதன்கிழமை) சர்வ ஏகாதசி தினம். புதன்கிழமையில் ஏகாதசியும் இணைந்து வருவது மிகவும் விஷேசமானது. முக்கியமாக, சர்வ ஏகாதசி நாளான நாளை, விரதம் இருந்து பெருமாளை நினைத்து வீட்டில் விளக்கேற்றுங்கள். பெருமாளின் திவ்ய நாமங்களைச் சொல்லி பாராயணம் செய்யுங்கள்.

ஆண்கள், பெண்கள் என 8 வயதுக்கு மேல் 80 வயதுக்குட்பட்ட அனைவரும் ஏகாதசி நாளான நாளை காலை முதல் எந்த உணவும் சாப்பிடாமல் (சக்தியற்றவர்கள் உப்பு, காரம் இல்லாத உணவை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு) இரவில் பகவான் நாமாவைச் சொல்லிக் கொண்டு பகவத் கதையைக் கேட்டுக் கொண்டு ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

உடலில் ஏற்படும் நோய்களும் அஜீரணக் கோளாறு முதலிய நோய்களும் மனதிலுள்ள ஆசை விருப்பு வெறுப்பு போன்றவைகளும் விலகி மகா விஷ்ணுவின் அருளால் தர்மத்துக்கு விரோதமில்லாத விரும்பும் அனைத்தும் கிட்டும்.

புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். ஒரு கை துளசி பெருமாளுக்கு சார்த்துங்கள். அதேபோல், துளசி தீர்த்தம் பருகுங்கள். எல்லா நல்லதுகளும் தந்தருள்வார் வேங்கடநாதன். இன்னல் என்பதையெல்லாம் இல்லாது போகச் செய்வார் ஏழுமலையான்!

Tags:    

Similar News