ஆன்மிகம்
ஆண்டாள்

மங்களம் உண்டாக மார்கழி மாதத்தில் இந்த விரதங்களை அனுஷ்டிக்கலாம்

Published On 2020-12-18 04:40 GMT   |   Update On 2020-12-18 04:40 GMT
தமிழ் மாதங்களில் சிறப்புமிக்கது தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதம். இந்த சிறப்புமிக்க மார்கழி மாத விழாக்களையும், விரதங்களையும் தெரிந்துகொள்வோம்.
தமிழ் மாதங்களில் சிறப்புமிக்கது தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதம். `மாதங்களில் நான் மார்கழி’ என்று கிருஷ்ணரே கீதையில் கூறியிருக்கிறார். மார்கழி மாத விழாக்களையும், விரதங்களையும் தெரிந்துகொள்வோம்.

* மார்கழி மாத பௌர்ணமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மார்கழி பௌர்ணமியன்று சிவபெருமானை வழிபட்டால் அனைத்து நலன்களும் கிட்டும்.  

* திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்குரியது. இந்த நாளில் சிவபெருமான் ஆடல் கோலத்தில் நடராஜப் பெருமானாக ஆருத்ரா தரிசனம் தருகிறார். இந்த நாளில் நிகழ்த்தப்படும் நடராஜர் அபிஷேகம் சிறப்பானது. சிதம்பரத்தில் இந்தத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்.

* பரசுராம ஜெயந்தி : தசாவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராமர் அவதாரம். பரசுராமர் அவதரித்த தினத்தில் பரசுராமரையோ அல்லது மகா விஷ்ணுவையோ வழிபடுவது மிகுந்த நன்மையையும், மனவலிமையையும் அளிக்கும்.

* மார்கழி மாத சிவராத்திரி : சிவனுக்குரிய விரதங்களில் முதன்மையானது சிவராத்திரி விரதம். மார்கழி மாத சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவபெருமானை வழிபட பிறப்பில்லாப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

* அனுமன் ஜெயந்தி : அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய அனுமன் ஜெயந்தி தினம் அன்று விரதம் இருந்து அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்தும் வழிபட அனுமனின் பரிபூரண அருள் கிடைக்கும். சத்ரு பயம், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

* மார்கழி அமாவாசை : விரதம் இருந்து முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் இன்று. நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி கிடைக்கும்.

* போகிப் பண்டிகை : மார்கழி மாதத்தின் கடைசி நாளாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் தொடக்கமான போகியன்று காப்புக் கட்டி, தைத்திருநாளை வரவேற்க மக்கள் ஆயத்தமாகும் நாள் இன்று.
Tags:    

Similar News