ஆன்மிகம்
சிவன்

சிவனின் இடது பாகத்தை பெற சக்தி மேற்கொண்ட விரதம்

Published On 2020-07-23 06:02 GMT   |   Update On 2020-07-23 06:02 GMT
சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் என்று எல்லாரும் போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர உமாதேவி மேற்கொண்ட அந்த விரதமே கேதார கௌரி விரதமாகும்.
கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது. அதாவது, முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்தார்.

பிருங்கி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபமுற்ற பார்வதி தேவி, பிருங்கி முனிவரை முடமாக்கினார்.

ஆனால் தனது பக்தரை அந்த நிலையில் விட்டுவிட விரும்பாத சிவ பெருமான், பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோலை வழங்கினார். அதனைப் பெற்ற பிருங்கி, மீண்டும் சிவனை வணங்கிவிட்டு திரும்பினார். இதனால் கோபம் கொண்ட அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌத முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார்.

தனது ஆசிரமத்துக்கு வந்த அம்பிகையிடம் “இங்கு தாங்கள் வந்தமைக்குக் காரணம்” என்ன என்று கௌத முனிவர் கேட்டார். அதற்கு அம்பிகை முனிவரை நோக்கி “தபஸ்வியான சிவபெருமானின் பாதியுடம்பை நான் பெறவேண்டும் என்றாள்”. முனிவரும் புராணங்கள், சாஸ்திரங்கள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து கேதாரேஸ்வர விரத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்குக் கூறியருளினார்.

முனிவரின் கூற்றுப்படி அம்பிகையும் 21 நாட்களும் கடும் விரதம் இருந்து சிவனைப் பூஜித்தாள். பார்வதி தேவியின் கடும் தவத்தால் மனம் இளகினார் மகாதேவன். மேலிருந்து இறங்கி வந்தார். உமையவளுக்கு தரிசனம் தந்தார். இறைவனைக் கண்ட பார்வதி தேவி, ‘ஒரு நாளும் உமைப் பிரியாத வரம் வேண்டும்’ என்று வேண்டினாள். ‘தந்தேன்’ என்றார் ஈஸ்வரன்.

“உங்களைப் ‘பிரியாத’ என்றால் அருகிலேயே இருப்பதல்ல, உடலோடு ஒன்றியதாக... உடலைவிட்டுப் பிரிக்க முடியாதவளாக...” என்று மகாதேவி வரம் கேட்டாள். புரிந்துகொண்டார் பரமன். உடனே அவள் வேண்டிய வரத்தை அளித்தார். சிவனின் உடலில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரர் ஆனார்.

அப்போது, அம்பிக்கை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று எற்று அங்கனமே ஆகுக என்று அருள் புரிந்தார் பரமேஸ்வரன்.

சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் என்று எல்லாரும் போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர உமாதேவி மேற்கொண்ட அந்த விரதமே கேதார கௌரி விரதமாகும்.
Tags:    

Similar News