ஆன்மிகம்
துர்க்கை

வார நாட்களில் துர்க்கைக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி?

Published On 2020-06-23 08:27 GMT   |   Update On 2020-06-23 08:27 GMT
துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் அனைத்து விதமான தோஷங்களும் தீரும் என்பார்கள் நம் முன்னோர்கள். ஒவ்வொரு கிழமையிலும் துர்க்கை அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ராகு - கேது பெயர்ச்சியால் சில பிரச்னைகள் வருமானால் அவற்றை நிவர்த்தி செய்துகொள்ள துர்க்கை அம்மனுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால் போதுமானது என்பார்கள் நம் முன்னோர்கள். ஒவ்வொரு கிழமையிலும் அவ்வாறு விரதம் இருந்து வழிபாடு செய்யும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருந்து துர்க்கை சந்நதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் புதிய வெள்ளைத் துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

திங்கட்கிழமையில் விரதம் இருந்து காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும், வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் என்பதும் நம்பிக்கை.

செவ்வாய்கிழமையில் விரதம் இருந்து மாலை 3 மணி முதல் 4.30 மணிக்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்று நம்பிக்கை.

புதன்கிழமையில் விரதம் இருந்து மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரி செய்து, விளக்கேற்றி, புளியோதரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும்; ரத்த சம்பந்தமான நோய் தீரும் என்பது நம்பிக்கை.

வியாழக்கிழமையில் விரதம் இருந்து மதியம் 1.30 மணி முதல் 3 மணிக்குள் விளக்கேற்றி, எலுமிச்சம்பழ சாதம் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களைவிட மிக ஏற்ற காலம். எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை.

சனிக்கிழமை விரதம் இருந்து காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் என்பது நம்பிக்கை.

மேலே குறிப்பிட்ட நேரங்கள் அந்தந்த கிழமையின் ராகுகாலமாகும்.
Tags:    

Similar News