ஆன்மிகம்
சிவன் பார்வதி

நவராத்திரிகளும்.. விரத வழிபாடும்..

Published On 2020-04-08 02:26 GMT   |   Update On 2020-04-08 02:26 GMT
அன்னை பராசக்திக்கு விருப்பமான வருடாந்திர விசேஷங்களில் ஒன்று நவராத்திரி. நான்கு நவராத்திரிகள் மட்டுமே முக்கியமானதாக கருதப்படுகிறது.
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பெறும் நவராத்திரியின் போது அம்பிகையை, மூன்று அம்சங்களாகக் கருதி வழிபடுகிறோம். கல்வியை தரும் அன்னை சரஸ்வதி தேவிக்கு மூன்று நாட்களும், செல்வத்தினை வழங்கும் மகாலட்சுமிக்கு மூன்று நாட்களும், தொடர்ந்து ஆற்றலையும், நம்பிக்கையும் வழங்கும் துர்க்கைக்கு மூன்று நாட்களும் ஆக ஒன்பது நாட்களும் நவராத்திரி கொண்டாடப்படும்.

ஆடி மாதப் பிரதமை தொடங்கும் ஆஷாட நவராத்திரியில் வராஹி அம்பிகையை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். மாசி மாத பிரதமையிலிருந்து தொடங்கும் சியாமளா நவராத்திரியில் ராஜ மாதங்கி என்னும் சியாமளா தேவியை முன்னிறுத்தி வழிபாடு செய்வார்கள். அதே போல் வசந்த நவராத்திரியில் உலகை ஆளும் பராசக்தி அன்னையை முன்னிறுத்தி வழிபடுவார்கள்.

ஒரே பராசக்திதான். ஆனால் பல ரூபங்களாக நின்று பக்தர்களுக்கு அன்னை அருள்கிறாள். ஐந்து அடிப்படைத் தொழில்களைச் செய்வதற்காக ஐந்து அம்சங்களாகப் பிரிந்து அருளாட்சி செய்கின்றாள். படைக்கும் சக்தி ப்ரம்மரூபிணியான சரஸ்வதியாகவும், காக்கும் சக்தி விஷ்ணு ரூபிணியான லட்சுமியாகவும், அழிக்கும் சக்தி ருத்ர ரூபிணியான துர்க்கையாகவும், மறைக்கும் சக்தி ஈஸ்வரனின் ரூபிணியான ஈஸ்வரியாகவும், அருளும் சக்தி சதா சிவனின் ரூபிணியான பராசக்தியுமாகவும் அருள்பாலிக்கின்றார்கள்.

Tags:    

Similar News