ஆன்மிகம்
தெய்வங்களை விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி?

தெய்வங்களை விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி?

Published On 2020-01-03 05:52 GMT   |   Update On 2020-01-03 05:52 GMT
நமது முன்னோர்கள் குல தெய்வம், குடும்ப தெய்வம், காவல் தெய்வம், இஷ்ட தெய்வம், உபாசனை தெய்வம், ஸ்தல தெய்வம் என்ற ஆறுவிதமான விரத வழிபாட்டில் கிடைத்தற்கரிய பல நற்பலன்களை அடைத்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நாகதோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், நவக்கிரக தோஷம் என்று எண்ணற்ற தோஷங்கள் இருக்கின்றன. இந்த தோஷங்கள் எல்லாம் நீங்கி சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவதற்கு விரத வழிபாடு மிக அவசியம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, நாள் தோறும் இறைவனை வணங்காததும் அவ்வளவு பெரிய பாவம்.

கடவுளை நான்கு நிலைகளில் வழிபடலாம். அதில் முதலாவது ‘அன்பாக வழிபடுவது.’ கடவுளை உறவாக பாவித்து வரம் கேட்பது. அதாவது பெற்ற தாயாக, தந்தையாக பாவித்து தன் விருப்பம் அல்லது எண்ணம் பலிதமாக செய்யும் வேண்டுதல்கள் இந்த வழிபாட்டு முறையில் அடங்கும்.

அடுத்தது ‘ஆகம முறையில் வழிபடுதல்.’ மந்திரங்கள் ஜெபிப்பது, மலர்கள் சமர்ப்பித்து ஆகம முறைப்படி செய்வது.

மூன்றாவது ‘பயன் கருதி பூஜித்தல்.’ அதாவது முடி காணிக்கை, காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்தி, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற இறைவனிடம் கேட்கும் வழிபாடு.

இறுதியாக ‘பயன் கருதாமல் பூஜித்தல்.’ எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், ஆன்மநெறியில் செய்யும் இந்த வழிபாடு, ‘ஞான வழிபாடு’ ஆகும்.

இந்த நான்கில் எதைத் தேர்ந்தெடுத்து வழிபட்டாலும், கருணைக் கடலான கடவுள் அருள்பாலிப்பார்.

ஆனால் வாழும் காலத்தில், எந்த தெய்வத்தை விரதம் இருந்து வழிபாட்டால் வாழ்க்கை பயணம் இனிமையாக அமையும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. நமது முன்னோர்கள் குல தெய்வம், குடும்ப தெய்வம், காவல் தெய்வம், இஷ்ட தெய்வம், உபாசனை தெய்வம், ஸ்தல தெய்வம் என்ற ஆறுவிதமான விரத வழிபாட்டில் கிடைத்தற்கரிய பல நற்பலன்களை அடைத்திருக்கிறார்கள்.

குல தெய்வ வழிபாடு


இது எல்லா தெய்வங்களுக்கும் முதன்மையான வழிபாடு. நம் முன்னோர்கள் வம்சாவளியாக வணங்கிய தெய்வம் இது. குல தெய்வ அனுக்கிரகம் இல்லாத எந்த செயலும் வெற்றி அடையாது. குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே இருக்கும். ஆனால் அளவற்ற சக்தியுடையது. ஒரு ஜாதகத்தின் 5-ம் பாவகம் மற்றும் ஐந்தாம் அதிபதியை கொண்டு, குல தெய்வம் பற்றி அறிய முடியும். குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்பவர்களை, எந்த கிரகமும் ஒன்று செய்ய முடியாது.

குடும்ப தெய்வ வழிபாடு


இதனை முன்னோர் வழிபாடு என்றும் சொல்வார்கள். ஜாதகத்தில் 9-ம் இடம் எனும் பாக்கிய ஸ்தானமே, முன்னோர்களைப் பற்றி கூறும் இடம். தனது குலத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை வழிபடுவது. தந்தை மற்றும் தந்தை வழியில் உள்ள அனைவரும் நம் முன்னோர்களே ஆவர். நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் முன்னோர்கள் அளித்ததே. அதைத்தான் நாம் அனுபவித்து வருகிறோம். இவர்களுக்கு முறையான திதி, தர்ப்பணம், படையலிட்டு வழிபாடு செய்ய வேண்டும். இதனால் கர்மவினை நீங்கும்.

காவல் தெய்வம்

ஊரை காக்கும் தெய்வம். இதை ‘எல்லை தெய்வ வழிபாடு’ என்றும் கூறலாம். ஊர் மக்களை சகல துன்பத்தில் இருந்தும் காப்பவர் இவர். இந்த தெய்வத்தை பாரம்பரிய குல வழக்க முறைப்படி வழிபட வேண்டும். முக்கியமான பணிக்காக ஊரை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், காவல் தெய்வ உத்தரவு இன்றி வெளியேறக் கூடாது. பணி முடிந்து திரும்பும் வரை காவல் தெய்வம் நம் இல்ல வாசலில் காவல் நிற்கும். பயணத்தை சுபமாக இனிமையாக மாற்றித் தரும்.

இஷ்ட தெய்வம்


ஒவ்வொருவருக்கும் ஒரு தனி விருப்ப தெய்வ வழிபாட்டில் ஆர்வம் இருக்கும். இந்த விருப்ப தெய்வம் சிவன், பெருமாள், விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் என நபருக்கு நபர் மாறுபடும். இஷ்ட தெய்வத்தை நமக்கு பிடித்த முறையில் வணங்கலாம்.

உபாசனை தெய்வம்


ஒருவரின் ஜனன ஜாதகத்தின் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியின் அதிதேவதையை வழிபடுவதே ‘உபாசனை தெய்வ வழிபாடு’ ஆகும். ஒன்பதாம் இடம் என்பது பாக்கிய ஸ்தானம். ஒரு மனிதனின் வாழ்நாள், அவன் பெற்ற பாக்கிய பலத்தின் நன்மை தீமைக்கு ஏற்பவே இருக்கும். அந்த ஸ்தானத்திற்கு வலிமை தர அதன் அதிதேவதைக்கு சக்தி உண்டு. முறையான உபாசனை தெய்வ வழிபாடு எத்தகைய ஆபத்திலும் மனிதனை வீழச் செய்யாது.

அது மட்டுமல்ல இடப்பெயர்ச்சி, குலம் மாறிய திருமணம் போன்ற காரணத்தால் குல தெய்வ வழிபாடு தடைபட்டவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் ஆகியோர் உபாசனை தெய்வ வழிபாட்டால் வாழ்வில் அடைய முடியாத வெற்றியே கிடையாது. ஒன்பதாம் அதிபதியின் அதிதேவதையான உபாசனை தெய்வத்தின் ஆசி, ஒரு மனிதனை மிகச் சிறந்த சாதனையாளராக மாற்றும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஸ்தல தெய்வம்

நாம் குடியிருக்கும் ஊரை ஆட்சி செய்வது ஸ்தல தெய்வம். ஒவ்வொரு ஊரையும் ஒரு குறிபிட்ட தெய்வம் ஆட்சி செய்யும். பெரும்பாலும் இது அந்த ஊரின் சிவன், பெருமாள் கோவிலாகவே இருக்கும். ஊரின் ஸ்தல தெய்வம், ஸ்தல விருட்சம் ஆகியவற்றை அமாவாசை, பவுர்ணமி நாட்களில் வழிபட வேண்டும். ஸ்தல தெய்வத்தின் ஆசி இல்லாமல், அந்த ஊரில் குடியிருக்க முடியாது. ஸ்தல தெய்வத்திற்கு நமது ஆன்மாவை சுத்தப்படுத்தும் சக்தி உண்டு. பலர் ஊர் ஊராக பல்வேறு புகழ்பெற்ற ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுவார்கள். ஆனால் சொந்த ஊரிலோ அல்லது குடியிருக்கும் ஊரிலோ உள்ள ஸ்தல தெய்வத்தை வழிபடுவது இல்லை. ஸ்தல தெய்வ அருள் இருந்தால் மட்டுமே, குடியிருக்கும் ஊரால் பயன் பெற முடியும்.

ஒரு சிலருக்கு வழிபாடு மேற்கொண்ட உடனேயே பலன் கிடைத்து விடும். ஒரு சிலருக்கு அந்த பலன் தாமதமாகும். இதற்கு அவரவர் ஜாதக அமைப்பும், பூர்வ புண்ணிய பலனுமே காரணம். அதற்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்காமல், தொடர்ந்து இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நிச்சயம் நற்பலனைப் பெறலாம்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
Tags:    

Similar News