ஆன்மிகம்
இன்று  திருக்கார்த்திகை விரதம்

இன்று  திருக்கார்த்திகை விரதம்- கடைபிடிப்பது எப்படி?

Published On 2019-12-10 01:32 GMT   |   Update On 2019-12-10 01:32 GMT
வாழ்க்கையில் நாம் எத்தனை எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் நமது எண்ணம் மேல்நோக்கியே இருக்கவேண்டும் என்பதே தீபம் நமக்கு உணர்த்தும் உன்னத பாடமாகும்.
திருவண்ணாமலைக்கு வந்து தவம் இருந்த அம்பிகை மகிஷாசுரனுடன் போர் புரிந்தாள். அப்போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டாள்.
அதனால் அவளுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய கார்த்திகை தீபம் ஏற்றி விரதம் இருந்தாள். கார்த்திகை சோமவாரம் அனுஷ்டிப்பவர்கள் இறைவனின் அருளினால் சகல மேன்மைகளையும் பெறுவர். கார்த்திகை விரதத்தை தவறாமல் பன்னிரண்டு வருடம் கடைப்பிடித்து நாரத முனிவர் சப்த ரிஷிகளுக்கும் மேலான பதவியைப் பெற்றார்.

தீபத்தில் இறைவனை காண்பது முன்னோர்கள் காலத்திலிருந்து தொன்றுதொட்டுவரும் நடைமுறையாகும். இவ்வுலகில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் சூரியஒளியே தருகிறது என்பதை குறிக்கும் விதமாக தீபவழிபாடு ஏற்பட்டிருக்கலாம் என்பது மற்றொரு சாரரின் கருத்தாகும். ஒளியான தீபவெளிச்சமே அறியாமை என்னும் இருளிலிருந்து நம்மையெல்லாம் மீட்டு அறிவுரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும் பலப்படுத்துகிறது. மேலும் எரியும் விளக்கை கவிழ்த்தாலும் அதிலிருந்து சுடர்விடுகின்ற தீபம் எப்பொழுதும் மேல்நோக்கியே இருக்கும்.

அதுபோல வாழ்க்கையில் நாம் எத்தனை எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் நமது எண்ணம் மேல்நோக்கியே இருக்கவேண்டும் என்பதே தீபம் நமக்கு உணர்த்தும் உன்னத பாடமாகும். இத்தகைய தீபத்தை அந்த ஏகநாயகன் நினைவாக ஏற்றி வழிபடும் ஏற்றம்தரும் திருநாளே கார்த்திகை தீபத்திருநாள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரத்தன்று, அக்னியாய் சிவந்து அறத்தைக்கூறிய சிவனின் தரிசனம் வேண்டி கொண்டாடப்படும் இத்திருநாளன்று விரதமிருந்து நெல்பொறி அல்லது அவல்பொறியை நைவேத்தியமாக படைத்து வீடு மற்றும் நாம் புழங்கும் இதர இடங்களில் விளக்கேற்றி வழிபடுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது .

திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், 7:30 மணிக்குள் குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும்.
 
சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை வரை மந்திற்குள் அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
 
மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகலுக்கு குறையக்கூடாது. விநாயகர், முருகன், சிவன் படங்களை வைத்து பழம், வெற்றிலை பாக்கு, பொரி, பிடி கொழுக்கட்ட ஆகியவர்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். தீபாராதனை காட்டி பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
 
கார்த்திகை அன்று தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு மூன்று முறை தீபம் ஜோதி பரப்பிரம்ஹம்! தீபம் சர்வ தமோபஹம்! தீபனே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே! என்ற சுலோகத்தை சொல்வது மிகவும் விசேஷமான பலனை தரும்.

திருக்கார்த்திகை தினத்தில் குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும்.
கார்த்திகை திருநாளில் நெல் பொரியுடன் வெல்லப் பாகும், தேங்காய் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து அண்ணாமலையாருக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள்.

வெள்ளை நிறப்பொரி திருநீறு பூசிய சிவனையும், தேங்காய்ச் துருவல் கொடைத் தன்மை கொண்ட மாவலியையும், வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன. ஆத்மார்த்தமான பக்தியால் மகிழ்ந்து சிவன் நெற்பொரிக்குள்ளும் தோன்றுவார் என்ற தத்துவத்தால் இங்கு பெரிய நெற்பொரி உருண்டைகளும், அப்பமும் நிவேதனம் செய்யப்படுகின்றன.
 
கோவிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும். அதனால், திருக்கார்த்திகை அன்று கோவில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பல பெயர்களில் ஏற்றி வைப்பர். கோவில் முன் சொக்கப்பனை கொளுத்துவர். சிவனையும், முருகனையும் அக்னி வடிவமாக வழிபடுவர்.
Tags:    

Similar News