ஆன்மிகம்

இன்று இந்த வருடத்திற்கான முதல் சனிப்பிரதோஷ விரதம்

Published On 2019-02-02 09:04 IST   |   Update On 2019-02-02 09:04:00 IST
சனிப்பிரதோஷமான இன்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது அசைக்க முடியாத உண்மை.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். பிற தோஷங்களை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு. சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று. அதிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.

சிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.

இன்று அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.

Similar News