ஆன்மிகம்

செல்வச் செழிப்பை அருளும் ஆடி வரலட்சுமி விரதம்

Published On 2017-08-04 03:37 GMT   |   Update On 2017-08-04 03:37 GMT
ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை இன்று (ஆகஸ்டு4-ந்தேதி) அனுசரிக்கவேண்டிய விரதம் இது. இந்த விரதம் குறித்து விரிவாக பார்க்கலாம்.






ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 4-ந்தேதி) அனுசரிக்கவேண்டிய விரதம் இது. விரத நாளன்று திருமகளை கலசத்தில் எழுந்தருளச் செய்து, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு, கொழுக்கட்டை முதலானவற்றைச் சமர்ப்பித்து, திருமகளுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி, தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும் நோன்பு கயிற்றை வயதில் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற்று, அவர்கள் மூலம் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்; சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும்.

இந்த விரதத்தை மேற் கொள்ளும் சுமங்கலிப் பெண்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து, அதில் வாழை மரம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.

அங்கு சுவற்றில் படமாகவோ அல்லது வெள்ளியில் கிடைக்கும் வரலட்சுமி தேவியின் திருமுகத்தை வைக்க வேண்டும். வர லட்சுமிக்கு ஆடை, ஆபரணங்கள் அணிவிக்க வேண்டும். மண்டபத்தில் வாழை இலையின் மீது ஒரு படி அரிசியை பரப்பி, அம்மன் கலசத்தை தாமிர செம்பிலோ அல்லது வெள்ளியால் ஆன செம்பிலோ வைக்க வேண்டும். அந்த செம்பின் மீது சந்தனத்தை பூசி, அதன் மீது வரலட்சுமி அம்மனின் முகத்தை வரையலாம் அல்லது கடைகளில் கிடைக்கும் அம்மன் முகத்தை வாங்கி வந்து பதியலாம்.

கலசத்தின் உள்ளே தேவையான அளவு அரிசியைக் போட்டு அதன் வாய்ப்பகுதியில் மாவிலைகளை சுற்றி வைத்து நடுவில் ஒரு தேங்காயை வைக்கவேண்டும்.
அந்த தேங்காய்க்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு இட்டு பூ சூட்ட வேண்டும். இவை எல்லாவற்றையுமே முதல் நாள் மாலையிலேயே செய்து விட வேண்டும்.
மறுநாள், வரலட்சுமி விரதம் அன்று பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பூஜை மண்டபத்தில் வரலட்சுமி அம்மன் படத்தை கிழக்கு முகமாக வைக்கவேண்டும்.

பூஜை செய்பவர் வலதுபுறமாக இருந்து பூஜை செய்யவேண்டும்.சாதம், பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லி ஆகியவற்றில் ஏதே னும் ஒன்றை வைத்து நிவேத னம் செய்யவேண்டும். ஐந்து முக விளக்கை ஏற்றி வைக்கவேண்டும்.

எங்கள் வீட்டில் எழுந்த ருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்து விட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.
பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

இந்த விரதம் மேற்கொள்வதால் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும்.
Tags:    

Similar News