ஆன்மிகம்

திருமண வரம் அருளும் குரு வார விரத வழிபாடு

Published On 2017-05-24 06:22 GMT   |   Update On 2017-05-24 06:22 GMT
‘வியாழக்கிழமை விரதம்’ எனப்படும் குரு வார வழிபாட்டை கடைப்பிடிப்பதால் குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறுவார்கள்.
ஆங்கில தேதிகளான 3, 12, 21, 30 ஆகியவற்றிலும், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களிலும் தனுசு, மீன ராசிகளிலும் வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள் குருவின் குரு அம்சத்தை பிறவியிலேயே பெற்றவர்கள் ஆவார்கள். ‘வியாழக்கிழமை விரதம்’ எனப்படும் குரு வார வழிபாட்டை கடைப்பிடிப்பதால் குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறுவார்கள்.

குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். ராசி சக்கரத்தை கடக்க பன்னிரண்டு ஆண்டுகளாகின்றன.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் ‘மகா மகம்’ நடைபெறுகிறது. இதையே ‘மாமாங்கம்’ என்று சொல்வார்கள். ஜாதகத்தில் குரு கெட்டிருந்தாலோ, குரூரமானவராக இருந்தாலோ, வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து, குரு பகவானை பூஜிக்க வேண்டியது அவசியம். அப்படிச் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவருக்கு குரு திசையே ஆரம்பமாக நடக்கும். மே‌ஷம், கடகம், விருச்சிகம் ஆகிய லக்னத்தாருக்கு குரு சுப ஸ்தானங் களில் வலுப்பெற்றிருந்து தசை நடைமுறைக்கு வருமானால் யோகமான பலன்களை அளிப்பார்.



குரு தசை நடைமுறை முறையில் இருக்கும் காலங்களில் அதனால் கெடுபலன்கள் நடக்காமல் இருக்க அதிதேவதையான தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபட்டு அர்ச்சனை செய்து வரவேண்டும். மஞ்சள் நிற உடைகளை அணிவதாலும், புஷ்பராக மணியை தரிப்பதாலும், மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்வதாலும், கொண்டைக்கடலை தானியத்தை தானம் கொடுப்பதாலும், குருவார விரதம் இருப்பதாலும் குருதோ‌ஷம் நிவர்த்தியாகும்.

குருவார விரத வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் தொடங்கி செய்வது சிறப்பானது. சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்துவிட்டு மஞ்சள் நிற ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் பூசி வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை தொடங்க வேண்டும். தட்சிணாமூர்த்தியின் திருஉருவப்படம் அல்லது தங்களது ஆன்மிக குருவின் படங்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் தெய்வ படங்களை மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து, ஆறு தீபங்களை அகல் விளக்காக ஏற்றி வைக்க வேண்டும். இனிப்பு கள், முல்லை மலர்கள், கொண்டைக் கடலை, சர்க்கரை பொங்கல், கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து தூப, தீப, கற்பூர ஆராதனைகள் செய்து குரு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்தபடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

அன்று ஒருவேளை மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும். அன்று முழுவதும் மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த விரதம் மூலம் குருவின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.
Tags:    

Similar News