ஆன்மிகம்

சிவனுக்கு உகந்த பிரதோஷ விரதத்தின் மகிமை

Published On 2016-11-08 13:23 IST   |   Update On 2016-11-08 13:23:00 IST
சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்.
மாதம் தோறும் இருமுறை பிரதோஷம் வருகிறது. வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி நாட்கள் பிரதோஷ தினங்களாகும். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரமே ‘பிரதோஷ’ வழிபாட்டிற்கான காலமாகும்.

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றை திருமால், இந்திரன் முதலான தேவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதன்கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது.

இதைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கினர். உலக உயிர்களைக் காப்பாற்றும் எண்ணத்தில், அந்த ஆலகால விஷத்தை உண்டார் சிவபெருமான். தன் கணவரின் உடலில் விஷம் பரவக்கூடாது என்பதற்காக, பார்வதிதேவி சிவபெருமானின் கழுத்தை தன் மலர் கரங்களால் பிடிக்க, ஆலகால விஷம் சிவபெருமானின் தொண்டைக் குழியிலேயே நின்றுபோனது.

இதன் காரணமாக ஈசன் ‘நீலகண்டர்’ என்று பெயர்பெற்றார். இறைவன் ஆலகால விஷத்தை உண்டு, ஆனந்த நடனம் ஆடிய நேரம் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் வருகிற 12-ந் தேதி மற்றும் 26-ந் தேதிகளில் பிரதோஷம் வருகிறது. அதுவும் சனிக்கிழமைகளில் வரும் மகா பிரதோஷம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவபெருமானுக்கு பிரதோஷ விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வருடத்திற்கு இருமுறை வரும் சனிப்பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பலாம்.

- ஆன்மிகம் பற்றிய உங்கள் கருத்துக்களை mmastronews@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News