ஆன்மிகம்

புருஷோத்தமன் வரம் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்

Published On 2016-09-12 13:51 IST   |   Update On 2016-09-12 13:52:00 IST
எல்லா சனிக்கிழமைகளிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்த கிழமையாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாளில் சிவாலயத்திற்குச் சென்று எள் தீபத்தை சனீஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம். அதுமட்டுமில்லாத ‘சனி பிடிக்காத தெய்வம்’ என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமனையும் விடாது வழிபட்டு வருவோம். எல்லா சனிக்கிழமைகளிலும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமை சிறப்பு வாய்ந்த கிழமையாகக் கருதப்படுகிறது.

அன்றைய தினங்களில் விரதம்இருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து குவியும். ‘புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால்விஷ்ணுவை ‘புருஷோத்தமன்’ என்றுஅழைக்கிறார்கள். அவனது அவதாரத்தில் ராமாவதாரம் முக்கியமாகக் கருதப்படுகின்றது. காரணம் ஒரு இல், ஒருசொல், ஒரு வில் என்று வாழ்ந்ததுதான். அந்த ராமாயணத்தை புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். ராமர் பட்டாபிஷேக படம் வைத்து அதன் முன்னிலையில் இன்றும் கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அங்குள்ள சிவன் கோவிலில் ராமாயணம் படிக்கின்றார்கள்.

ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட்டவர்களுக்கு எல்லாம் ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கின்றது. பூமகளின் அருகிருக்கும் விஷ்ணுவை நோக்கி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நல்லதே நடக்கும்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கொங்கரத்தி, வன்புகழ் நாராயண சுவாமி, திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், அரியக்குடி- ஸ்ரீனிவாசப் பெருமாள், கீழச்சிவல்பட்டி கூடலழகிய சுந்தரராஜப் பெருமாள், செவ்வூர் ரோட்டுப் பெருமாள், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் மற்றும் தமிழகமெங்கும் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

Similar News