ஆன்மிகம்

கணவர் ஆயுள் நீடிக்க வேண்டி முழு நிலவு நாள் திருவிழாவில் பெண்கள் விரதமிருந்து வழிபாடு

Published On 2016-06-20 09:32 IST   |   Update On 2016-06-20 09:32:00 IST
‘முழு நிலவு நாள்’ திருவிழாவை திருமணமான பெண்கள் விரதமிருந்து வெகு உற்சாகமாக கொண்டாடினர்.
வட இந்திய பெண்கள் ஆண்டு தோறும் இந்து காலண்டரின் படி ஜெஸ்தா மாதத்தின் 15-ம் நாளில் வட் பூர்ணிமா என்ற திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். வட் பூர்ணிமா என்றால் ‘முழு நிலவு’ என்று பொருள். இந்த ‘முழு நிலவு நாள்’ அன்று பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டியும், அவர் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டியும் இறைவனை வழிபடுகின்றனர். இந்த நாளே வட் பூர்ணிமா விரதம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் மகாபாரதத்தில் சாவித்திரி என்ற பெண் உயிர் இழந்த தன் கணவன் சத்யவானை இடைவிடாத நோன்பு மற்றும் இறை வேண்டலால் காப்பாற்றினாள். அதை நினைவுபடுத்தும் வகையிலும் வட் பூர்ணிமா திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழா மராட்டியம், குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மராட்டியம் முழுவதும் வட் பூர்ணிமா விரதம் எனப்படும் ‘முழுநிலவு நாள்’ திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு திருமணமான பெண்கள் அனைவரும் தங்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க வேண்டி நேற்று முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் நோன்பு இருந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் தங்களை மணப்பெண்கள் போல அலங்கரித்து கொண்டு கோவிலுக்கு சென்று இறைவனை வேண்டினர்.

பின்னர் அவர்கள் குழுவாக ஆலமரத்தில் நூலை சுற்றினர். இவ்வாறு பெண்கள் நோன்பு இருந்து ஆலமரத்தில் நூல் சுற்றினால் அவர்களின் கணவன்மார்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

மும்பையை பொருத்தமட்டில் தாராவி, தாதர், அந்தேரி, பாந்திரா, கொலபா ஆகிய அனைத்து பகுதிகளிலும் வட் பூர்ணிமா திருவிழா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதுபோன்று தானே, நவிமும்பை, வாஷி பகுதிகளிலும் ‘முழு நிலவு நாள்’ திருவிழாவை திருமணமான பெண்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Similar News