ஆன்மிகம்
சிவபெருமான்

சிவனை விரதமிருந்து தரிசனம் செய்ய உகந்த காலம் எது?

Published On 2016-04-01 11:48 IST   |   Update On 2016-04-01 11:48:00 IST
சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம்.
பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர். பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை. பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்;

சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்; பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும். பிரதோஷ காலத்தில் சிவன் கோவில் வழியாகப் போனான் ஒருவன். போகும் போது வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டே போனான். வெற்றிலை பாக்கு போட்ட பிறகு, விரலில் கொஞ்சம் சுண்ணாம்பு இருந்தது. அதை வழியிலிருந்த சிவன் கோவில் சுவரில் தடவி விட்டுப் போனான். ஆனால், அதுவே பெரும் புண்ணியமாகி விட்டது.

இவன் தடவிய சுண்ணாம்பு, மதில் சுவரில் இருந்த ஒரு சிறிய பள்ளத்தை அடைத்து விட்டது. உடனே, சிவன் கோவிலில், கைங்கரியம் செய்த புண்ணியம் இவனுக்கு சேர்ந்து விட்டது. இப்படியாக சிவ கைங்கர்யம், வழிபாடு எல்லாவற்றுக்குமே புண்ணியம் சொல்லப்படுகிறது. சிவன் கோவிலில், “சோம சூத்ர பிரதட்சணம்’ என்று ஒன்று உண்டு. இது, கொஞ்சம் சிக்கலானது. புரிந்து கொள்வது கூட சிரமம்; புரிந்து செய்தால் புண்ணியம். பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வது புண்ணியம்.

Similar News