ஆன்மிகம்

நபிகளார் கலந்து கொண்ட இறுதிப் போர்

Published On 2018-02-06 02:23 GMT   |   Update On 2018-02-06 02:23 GMT
எல்லாத் தடைகளையும் தாண்டி தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்தடைந்தார்கள். இதுவே நபி (ஸல்) கலந்து கொண்ட இறுதிப் போராகும்.
ரோமர்கள் முஸ்லிம்களின் படைபலத்தை உணர்ந்தனர். இனி முஸ்லிம்களுக்குத்தான் பணிய வேண்டுமென்றும் புரிந்துக் கொண்டனர். இஸ்லாம் வளர்ந்து ரோம ராஜ்ஜியத்தைத் தொட்டது.

இதற்கிடையில் தூமத்துல் ஜந்தலின் தலைவரான உகைதிரை காலித் பின் வலீத்(ரலி) அவர்கள் தமது படையுடன் சென்று சூழ்ந்து பிடித்துவிட்டனர். உகைதிர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இரண்டாயிரம் ஒட்டகங்கள், நானூறு கவச ஆடைகள், நானூறு ஈட்டிகள், எண்ணூறு அடிமைகளும், ஒவ்வொரு ஆண்டும் வரி கட்டுவதாகவும் ஒப்பந்தம் செய்தார்.

நபி(ஸல்) அவர்கள் மற்றவர்களுக்குச் செய்த ஒப்பந்தம் போலவே உகைதிருடனும் செய்து கொண்டார்கள். மகிழ்ந்த உகைதிர் நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டு மேலங்கித் துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். ஆண்களுக்குப் பட்டாடை அணிவது தடை செய்யப்பட்டிருந்தது. மக்களோ அந்த மேலங்கியின் தரம் மற்றும் மென்மையைக் கண்டு வியந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில் சஅத் பின் முஆத் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிட அழகானவை ஆகும்” என்று சொல்லி அலீ(ரலி) அவர்களிடம் அந்தப் பட்டாடையைத் தந்து இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டு விடுங்கள்” என்று சொன்னார்கள்.

இஸ்லாமிய ராணுவம் எந்தச் சண்டையுமின்றி வெற்றியுடன் தபூக்கிலிருந்து மதீனாவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியிலேயே நபி(ஸல்) அவர்களைக் கொன்றுவிட வேண்டுமென்று ஒரு கூட்டத்தினர் முடிவு செய்து கூட்டமில்லாத நேரம் பார்த்து முகமூடி அணிந்த பன்னிரெண்டு நபர்கள் நபி(ஸல்) அவர்களைச் சூழ்ந்துக் கொண்டனர்.

அப்போது நபி(ஸல்) அவர்களுடன் இருந்தது அம்மார் மற்றும் ஹுதைஃபா(ரலி) மட்டுமே. சமயோசிதமாக ஹுதைஃபா(ரலி) தனது வளைந்த கைத்தடியால் சூழ்ச்சியாளர்களின் வாகனங்களின் முகத்தை நோக்கி சுழற்றி அடித்தார். அந்த நயவஞ்சகக் கும்பலுக்குப் பயம் கவ்வியது, தப்பி ஓட்டம்பிடித்தனர். முஸ்லிம்களின் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து விட்டனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ‘நபியின் அந்தரங்கத் தோழர்’ என்ற பெயரைப் பெற்றார் ஹுதைஃபா(ரலி). அப்போது அல்லாஹ்விடமிருந்து, “உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதி அவர்கள் தங்களால் சாத்தியப்படாமல் போனதொரு காரியத்தைச் செய்யவும் முயற்சித்தனர்” என்ற இறை வசனம் அருளப்பட்டது.

எல்லாத் தடைகளையும் தாண்டி தபூக்கிலிருந்து நபி (ஸல்) மதீனா வந்தடைந்தார்கள். இதுவே நபி (ஸல்) கலந்து கொண்ட இறுதிப் போராகும்.

ஆதாரம்: அர்ரஹீக் அல்மக்தூம், ஸஹீஹ் முஸ்லிம் 44:4873, 37:4209, ஸஹீஹ் புகாரி: 3:51:2616, திருக்குர்ஆன் 9:74
Tags:    

Similar News