ஆன்மிகம்
‘மிலாது நபி’ திருநாளை முன்னிட்டு திருப்பூரில் ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

மிலாது நபியை முன்னிட்டு முஸ்லிம்கள் ஊர்வலம்

Published On 2016-12-14 06:38 GMT   |   Update On 2016-12-14 06:38 GMT
திருப்பூரில் ‘மிலாது நபி’ திருநாளை முன்னிட்டு முஸ்லிம்கள் நேற்று ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான ‘மிலாது நபி’ திருநாளை நேற்று முஸ்லிம்கள் கொண்டாடினார்கள். இந்த திருநாளை முன்னிட்டு திருப்பூர் பெரியகடை வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் திருப்பூர் மிலாது கமிட்டி சார்பில் ‘மாநபியின் புகழ்பாடும் ஊர்வலம்’ நேற்று காலை நடந்தது.

ஊர்வலத்துக்கு திருப்பூர் மிலாது கமிட்டி தலைவர் சையத் மன்சூர் உசேன் தலைமை தாங்கினார். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் செய்யதுஅகமது தொடக்க உரையாற்றினார். திருப்பூர் மாநகர தெற்கு உட்கோட்ட உதவி போலீஸ் கமிஷனர் மணி பேரணியை தொடங்கிவைத்தார். திருப்பூர் டூம்லைட் பள்ளிவாசல் தலைவர் அப்துல்சுபகான் அமைதிபுறாக்களை பறக்கவிட்டார்.

இந்த ஊர்வலத்தில் ஜமாஅத்துல் உலமா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், எஸ்.எஸ்.எப். அமைப்பு, தாவதே இஸ்லாமி மற்றும் தர்காக்கள் பேரவை ஆகியவற்றின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் மதரஸா பள்ளி மாணவ-மாணவிகள் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் அனைவரும் நபிகள் நாயகத்தின் புகழை பாடி சென்றனர்.

திருப்பூர் பெரிய பள்ளி வாசலில் தொடங்கிய ஊர்வலம், காங்கேயம் ரோடு, டூம்லைட் மைதானம், கே.என்.பி.காலனி, பெரியதோட்டம், வெங்கடேஸ்வரா நகர், காயிதேமில்லத் நகர், ராஜீவ்நகர் வழியாக திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை சந்திப்பை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து அங்கு நிறைவு நிகழ்ச்சி நடந்தது.

இந்த ஊர்வலத்தில் திருப்பூர் வட்டார ஜமா அத்துல் உலமாவின் தலைவர் ஜபருல்லா பாகவி, செயலாளர் நசீர்அகமது, மிலாது கமிட்டி செயலாளர் ஜூனைத் அத்தாரி, எஸ்.எஸ்.எப். மாநில துணைத்தலைவர் ஷாஜஹான், செயலாளர் அப்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வடக்கு மாவட்ட தலைவர் சையதுமுஸ்தபா, பொருளாளர் யாசின் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News