ஆன்மிகம்
திருவதிகை வீட்டானேசுவர்

தடைகளை நீக்கும் திரிபுர சம்ஹார மகிமை

Published On 2019-10-23 05:09 GMT   |   Update On 2019-10-23 05:09 GMT
பல்வேறு மகத்துவங்கள் கொண்டது திருவதிகை வீட்டானேசுவரரின் திரிபுர சம்ஹாரம். இந்த காட்சியை கண்டால் அனைத்து விதமான தடைகளும் விலகி, எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு தலத்துக்கும் ஒரு புராண நிகழ்வு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில், அந்த புராண சம்பவம் மீண்டும் ஒரு தடவை நிகழ்த்தி காட்டப்படும். அந்த வகையில் பண்ருட்டி-திருவதிகையில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடத்தப்படும் “திரிபுர சம்ஹாரம்” நிகழ்ச்சி மிகவும் மகிமை வாய்ந்தது. தேவர்களுக்கும், மக்களுக்கும் தொல்லைக் கொடுத்த மூன்று அசுரர்களின் மூன்று ஊர்களை சிவபெருமான் சம்ஹாரம் செய்ததே “திரிபுரசம்ஹாரம்” என்று அழைக்கப்படுகிறது.
இதன் பின்னணியில் உள்ள வரலாறு வருமாறு:-

சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களில் முக்கியமான தலம் திருவதிகை. அட்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவதிகையில் தான் சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்தார். வித்யுந்மாலி, தாருகாட்சன், கம்லாட்சன் என்ற மூன்று அசுரர்கள் முறையே பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் மூன்று கோட்டைகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடங்களுக்குச் செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன.

இந்த முப்புரங்களையும் வைத்துக் கொண்டு இந்த அசுரர்கள் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் அசுரர்கள் தொல்லை பொறுக்கமுடியாமல் சிவபெருமானிடம் முறையிட்டனர். மூன்று அசுரர்களையும் அழிக்க சிவபெருமான் பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்டார்.

இச்சமயம் ஒவ்வொரு உறுப்பும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று நினைத்து கர்வம் கொள்ளத் தொடங்கின. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரும் கர்வம் கொண்டிருப்பதைக் கண்டார்.

தன் பங்கு இல்லாமல் இப்படையில் எந்த ஒரு பயனும் இல்லை என்று அவர்களுக்குப் புரிய வைக்க நினைத்தார். திரிபுரவாதிகள் திருவதிகைக்கு தெற்கேயும், ஈசன் திருவதிகையிலும் இருந்தனர். அசுரர்கள் மூவரும் ஈசன் தங்களை அழிக்கும் போது தாங்கள் பெற்ற வரத்தினால் கோட்டைகள் மூன்றும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அழிக்கும் வேலை பகலாகவோ அல்லது இரவாகவோ இருக்கக் கூடாது. மிக முக்கியமாக ஈசனுக்குக் கோபம் இருக்கக் கூடாது போன்ற கட்டுபாடுகளுடன் வரம் பெற்றிருந்தனர்.

திரிபுரவாதிகளும் ஈசனும் போர் புரியும்போது கொடுத்த வரத்தினால் ஈசன் புன்னகை கொண்டிருந்தார். இதை கண்ணுற்ற அசுரர்கள் ஈசனுக்குக் கோபம் வரவழைக்க ஈசனின் இடபாகம் அமர்ந்த தேவியை தருமாறு கேட்டனர். ஈசன் புன்னகைத்துக் கொண்டே தேவியை நோக்கினார். கேட்டவர்க்கு கேட்டதைக் கொடுத்து விடும் ஈசன் எங்கே தன்னையும் கொடுத்து விடுவாரோ என்று பயந்து அம்பிகை ஈசனுக்கு வலபுரம் வந்து விட்டார்.

(இத்திருக்கோவிலில் அம்பாள் சன்னதி வலதுபுறம் உள்ளது குறிப்பிடத்தக்கது.) இந்நிகழ்ச்சி நடந்த இடம் திருவதிகைக்கு மேற்கே வீரப்பெருமாநல்லூர் எனும் ஊர் என்பர்.

தேவியைக் கேட்டவுடன் கோபம் கொண்ட ஈசன் சிரித்தேன் எரித்தேன் என்று அம்பு தொடுத்தார். தேவர்களின் செருக்கு அடங்கப் புன்னகையும், சிவபூஜை தவறாத திரிபுர அசுரர்கள் உய்யுமாறு தண்ணகையும், சிவபூஜை தவறிய முப்புரவாசிகள் மடியுமாறு வெந்நகையும் ஆகிய இம்மூன்றையும் இத்தல சிவபெருமான் செய்தார்.

அவர் சிரித்த உடனேயே கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாக பொசுங்கிப் போயின. இச்சம்பவம் நடந்த இடம் தான் திருவதிகை. சிவபெருமான் முப்புரவாசிகளில் இருவரை வாயிற்காப்பவனாக (துவாரபாலகர்), நியமித்தார். அவர்களில் ஒருவர் சங்கநாதம் வாசித்துக் கொண்டும், மற்றொருவர் யாழ் வாசித்துக் கொண்டும் இருப்பதை திரிபுரசம்கார மூர்த்தி சன்னதி வாசலில் காணலாம். ஒருவரை குடமுழா முழக்குபவராக தமது அருகில் இருக்கும்படி அருளி மறைந்தார்.

அசுரர்களின் கோட்டை எரிந்தும் எரியாமலும் வேகாமல் நின்ற பகுதி ’வேகாகொள்ளை’ என இன்றளவும் கூறப்படுகிறது. இது இச்சரித்திரத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது. இந்த வேகாகொள்ளை என்னும் ஊரில் சூளைகள் வேகாமல் நின்று போவதும் இன்று வரை கண்கூடாக அதிசயமாகக் காண முடிகிறது.
இப்படி பல்வேறு மகத்துவங்கள் கொண்டது திருவதிகை வீட்டானேசுவரரின் திரிபுர சம்ஹாரம். சமீப ஆண்டுகளாக திருவதிகை திருத்தலத்தில் திரிபுரசம்ஹார பிரம்மோற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது.

திரபுர சம்ஹாரம் காட்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவதிகையில் திரள்வார்கள். முப்புரம் எரிக்கப்படும் காட்சியை பார்த்தால் முக்தி பலன் கிடைக்குமாம். அது மட்டுமல்ல இந்த பிறவியில் எந்த எதிரிகளாலும் நமக்கு துன்பம் வராதாம். அசுரன் எனும் எதிரியை சிவபெருமான் அழிப்பதால், முப்புரமெரித்த காட்சியைக் கண்டால் அனைத்து விதமான தடைகளும் விலகி, எதிரிகள் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.

Tags:    

Similar News