ஆன்மிகம்
சனி பகவான்

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரங்கள்

Published On 2019-08-16 13:46 IST   |   Update On 2019-08-16 13:46:00 IST
உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் மிகுதியான செல்வங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தங்கள் நட்சத்திர அதிபதியான சனி பகவானின் முழுமையான நல்லருளை பெறுவதற்கு வருடத்திற்கு ஒரு முறை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று, சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.

வாரந்தோறும் வரும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, இனிப்பு அல்லது கற்கண்டுகள் நைவேத்தியம் வைத்து, வழிபட்டு வர வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படுவதை காணலாம். சனி பிரதோஷ தினங்களில் சிவ பெருமானையும், அம்பாளையும் வழிபட்டு வர உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் பல நன்மைகள் உண்டாக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

தினமும் நீங்கள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக சனிபகவானின் வாகனமாகிய காகங்களுக்கு சிறிது உணவை வைத்த பிறகு சாப்பிடுவதால், சனீஸ்வர பகவானின் அருட்பார்வை உங்களுக்கு கிடைத்து அதனால் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகரிக்கும். ஏதேனும் சனிக்கிழமை தினத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை மட்டும் இனிப்புகளை தானம் செய்வது நன்மை பயக்கும்.

கோவில்களில் 2, 4, 6 போன்ற இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்கும் பசுமாடுகளுக்கு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டை வாழைப்பழங்களை, சிறிது தேன் தடவி உணவாக கொடுப்பதன் மூலம் உங்கள் நட்சத்திரத்திற்கு மிகுதியான அதிர்ஷ்டங்கள் உண்டாக செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாகும்.

Similar News