ஆன்மிகம்
செவ்வாய் தோஷ பரிகார தலம்

செவ்வாய் தோஷ பரிகார தலம்

Published On 2019-08-06 10:06 IST   |   Update On 2019-08-06 10:06:00 IST
அகத்தீஸ்வரர் ஆலய தீர்த்தத்தில் ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் நடைபெறும்.
நவக்கிரகங்களில் அங்காரகன் (செவ்வாய்) தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்ட தலம் இது. எனவே இது செவ்வாய் தோஷ பரிகார தலமாக திகழ்கிறது. அங்காரகன் உண்டாக்கிய தீர்த்தம் கோயிலுக்கு வெளியே இருக்கிறது. தீர்த்தக் கரையிலுள்ள அரசமரத்தடியில் அங்காரகன் காட்சி தருகிறார். அருகில் வடக்கு நோக்கி வலம்புரி விநாயகர் இருக்கிறார். பக்தர்கள் இக்கோயிலை, “செவ்வாய்க்கிழமை கோயில்’ என்றே அழைக்கிறார்கள். அகத்தியருக்கு சிவன், ஒரு ஆடி மாத செவ்வாய்க் கிழமையன்று காட்சி தந்ததாக ஐதீகம். எனவே இங்கு ஆடி செவ்வாய்க்கிழமைகளில் சுவாமி, அம்பாளுக்கு விசேஷ வழிபாடு நடக்கிறது.

ஆடி செவ்வாய்க்கிழமைகளில் பொதுவாக சக்தி தலங்களில்தான் பக்தைகள் கூட்டம் நிரம்பி வழியும். பொங்கல் வைப்பதும், நாகர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும், புற்றுக்கு முட்டை, பால் ஊற்றுவதும் கோலாகலமாக இருக்கும். ஆனால் சிவத்தலமான இங்கு செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் கூட்டம் சக்தி தலங்களில் திரளும் கூட்டத்தையும் மிஞ்சுவதாக உள்ளது. அந்த வகையிலும் இந்த அகத்தீஸ்வரர் ஆலயம் செவ்வாய்க்கிழமை கோவில் என்ற புகழை பெற்றுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு இந்த தலத்தில் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் குவியும் பக்தைகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு பக்தைகள் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இங்குள்ள தீர்த்தம் அங்காரக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி விரதம் இருப்போர் புத்திரதோஷம் நீங்கப் பெறுவர். செவ்வாய் தோஷம் நீங்கித் திருமணம் நடைபெறும். திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தீர்த்தத்தில் நீராடி விரதமிருந்து வழிபட்டால் தங்களுக்குரிய வாழ்க்கைத் துணையைப் பெறுவது உறுதி. அமாவாசையில் நீராடுவோர் சத்துரு பயமின்றி வாழ்வர். பவுர்ணமியில் நீராடுவோர் சகல சம்பத்துக்களும் பெற்றுச் சகல யோகம் மிக்க பெருவாழ்வு வாழ்வர்.

Similar News