ஆன்மிகம்

சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்க பரிகாரங்கள்

Published On 2019-06-10 06:16 GMT   |   Update On 2019-06-10 06:16 GMT
ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்களுக்கு சிறந்த பரிகாரங்கள் உள்ளன. இந்த பரிகாரங்களை முறையாக செய்தால் நிச்சயம் நல்ல பலனை காணலாம்.
சந்திர பகவானுக்குரிய சிறந்த பரிகாரத் தலமாக தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திங்களூர் சந்திரன் கோவில் இருக்கிறது. ஏதேனும் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை தினத்தில் காலை 9 மணிக்குள்ளாக திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு, சென்று சந்திர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவதால் ஜாதகத்தில் சந்திர பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

இந்த பரிகாரத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ செய்வது சிறப்பு. திங்களூர் சந்திர பகவான் கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வளர்பிறை திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள கோவிலில் இருக்கும் நவக்கிரக சந்நிதியில் சந்திரனுக்கு மல்லிகை பூ சாற்றி, நிறமி சேர்க்கப்படாத கேசரி அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் வைத்து, சந்திர காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை வரை துதித்து வழிபாடு செய்வதால் சந்திர பகவானின் அருளால் வாழ்வில் மங்களமான பலன்கள் அதிகம் ஏற்படும்.

மேற்கூறிய இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் திங்கட்கிழமைகள் மற்றும் பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள சிவ பெருமான் கோவிலில், சிவபெருமான் அபிஷேகத்திற்கு தரமான பசும்பாலை தானமாக கொடுக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் பெற்ற தாயாரிடம் காலை தொட்டு, ஆசிர்வாதம் வாங்குவது சந்திரனின் அருளை உங்களுக்கு தரும்.

வெள்ளியில் சந்திரகாந்தக்கல் பதித்த மோதிரத்தை எப்போதும் உங்கள் வலது கை மோதிர விரலில் அணிந்து கொள்வது சிறந்தது. மேலும் உங்கள் சக்திக்கு ஏற்ப திங்கட்கிழமைகளில் மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஏழைகளுக்கு தயிர்சாதம், நீர்மோர் போன்றவற்றை தானம் வழங்க வேண்டும்.

கோடைக்காலங்களில் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் பந்தல் அமைப்பது, சாலையில் திரிகின்ற விலங்குகள் தாகம் தணிப்பதற்கு வீட்டிற்கு வெளியே தண்ணீர் தொட்டியில் நீர் ஊற்றி வைப்பதும் சந்திர பகவானின் அருளைப் பெறுவதற்கான சிறந்த பரிகாரங்களாக இருக்கிறது.
Tags:    

Similar News